விசேஷம் இது வித்தியாசம்: குருவை, வியாழன் என்று வழிபடுவது ஏன்?
விசேஷம் இது வித்தியாசம்: குருவை, வியாழன் என்று வழிபடுவது ஏன்?
PUBLISHED ON : மே 31, 2026

குரு கிரகத்தை, வியாழக்கிழமைகளில் வழிபடுவது ஏன் தெரியுமா? குருவுக்கே, வியாழன் என்று தான் பெயர். அதனால், வியாழக்கிழமைகளில் வழிபடுகிறோம். அது மட்டும் காரணமல்ல. இன்னும் சிலர், தட்சிணாமூர்த்தியை, குருவாகக் கருதி வழிபடுகின்றனர். அநேகமாக, இப்போது வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தி சன்னிதிகள் நிரம்பி வழிகின்றன. சிவனின் ஒரு வடிவமே, தட்சிணாமூர்த்தி. இவருக்கும், குரு கிரகத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவரது திசை தெற்கு. ஆனால், நவக்கிரக மண்டபத்தில், குரு கிரகம் வடக்கு நோக்கி இருக்கும். அப்படியானால், தட்சிணாமூர்த்தி எப்படி குரு ஆகிறார்?
இவர், சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்களுக்கு குருவாக இருந்து, வாழ்க்கை தத்துவத்தை விளக்கினார். ஆணவத்தை அடக்கி, பாவ, புண்ணிய பலன்களை இறைவனிடமே அர்ப்பணித்து, இவ்வுலக வாழ்வு நிலையானது அல்ல என்பதை உணர்பவர்களே இறைவனை அடைவர் என்பது இவர் காட்டும் சின்முத்திரையின் தத்துவம். சீடர்களுக்கு பாடம் எடுப்பவரை, குரு என்பர். எனவே, இவரையும் குருவாகக் கருதி வழிபடுகின்றனர், பக்தர்கள்.
உண்மையில் இவர் குரு அல்ல. வியாழன் கிரகமே, குரு. இவரை, பிரகஸ்பதி என்பர். பிரகஸ்பதி என்றால், அனைத்து கலைகளையும் அறிந்தவர் என, பொருள். இதனால் தான், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் இவர் குருவாக உள்ளார்.
ஒரு மனிதனின், 35--42 வயது வரை உள்ள காலத்தை 'பிரகஸ்பதி காலம்' என்பர். இந்த சமயத்தில், வியாழன் கிரகம், மனிதனின் உடலில் பல வித்தியாசமான உணர்வுகளை ஏற்படுத்தும். இது, நல்ல உணர்வு அல்லது கெடுதல் உணர்வாக இருக்கலாம். எனவே தான், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து, நல்ல உணர்வுகளைத் தர வேண்டும் என வேண்டி, குருவை வழிபடும் வழக்கம் உருவானது.
குருவை வழிபடுவது தமிழகத்தில் மட்டுமல்ல. வடமாநிலங்களிலும் உண்டு. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், பிரகஸ்பதி கோவில் தனியாகக் கட்டப்பட்டு, தங்கத்தில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில், குரு விரதம் பற்றிய கதை வாசிக்கப்படும். வாழை மரத்தின் கீழ் அமர்ந்து, மனதிலுள்ள விருப்பத்தை குருவிடம் சொல்வர், பக்தர்கள். இதன் மூலம் தங்கள் விருப்பங்கள் அனைத்தும் வாழையடி வாழை போல், ஒவ்வொன்றாய் நிறைவேறும் என்று நம்புகின்றனர்.
ஜெய்ப்பூர் கோவிலில், 'மனோகாம்ன டோக்ரி' என்ற பூஜைப்பொருள் தொகுப்பைக் கொண்டு, பூஜை செய்வர். இதற்கு, 'ஆசைக்கூடை' என, பொருள். மனதிலுள்ள ஆசைகளை, குருவிடம் தெரிவிக்க, கொண்டைக்கடலை, மஞ்சள் பூக்கள், மஞ்சள் பொடி, மஞ்சள் துணி, துணியில் சுற்றப்பட்ட தேங்காய் ஆகியவை ஒரு கூடையில் இருக்கும். இதை, பிரகஸ்பதி சிலை முன் படைத்து, ஆரத்தி காட்டுவர். 7, 21, 52 வாரங்கள் இந்த பூஜையைச் செய்வதாக வேண்டி கொள்வர்.
தி.செல்லப்பா
