sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மனைவிக்கும் மரியாதை!

/

மனைவிக்கும் மரியாதை!

மனைவிக்கும் மரியாதை!

மனைவிக்கும் மரியாதை!


PUBLISHED ON : டிச 31, 2023

Google News

PUBLISHED ON : டிச 31, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதற்றமாக வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள், மோகனா. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவள் எதிர்பார்த்திருந்த, நிகில் சாரின் தலை தென்படவே, சட்டென்று எதிலிருந்தோ விடுதலை கிடைத்தது போலிருந்தது.

''சாரி டீச்சர், டிராபிக்ல கொஞ்சம், 'லேட்' ஆயிடுச்சு,'' என்றவரின் காரணத்தை, காது கொடுத்துக் கேட்க, அவளுக்குப் பொறுமை இல்லை.

''பரவாயில்லை சார்...'' என்று ஒப்புக்குச் சொல்லி, அலுவலகத்திலிருந்த அலுவலரிடம், நிகிலின் வருகையை அறிவித்தாள், மோகனா.

இருவரையும் அமரச் சொன்ன அலுவலர், இரண்டொரு பதிவேடுகளில், இருவரிடமும் பல கையெழுத்துகளை வாங்கினார். அந்த அலுவலகத்திற்கு வந்திருந்த இரு வேறு ஆசிரியர்களிடம் சாட்சி கையொப்பமும் வாங்கப்பட்டது.

''அனைத்து நடைமுறைகளும் முடிந்தது. இன்னும் இரண்டு நாட்களில், உங்க வங்கிக் கணக்குல பணம் விழுந்திடும் டீச்சர்,'' என்றார், அந்த அலுவலர்.

நன்றி சொல்லி மோகனாவும், நிகிலும் வெளியேறினர்.

''என் அவசரத்தைப் புரிஞ்சிக்கிட்டு கூப்பிட்டதும், வந்து முடிச்சுக் கொடுத்ததற்கு நன்றி சார்,'' என்றாள், மோகனா.

''என்ன டீச்சர்... ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத்துல, எனக்கு நீங்க பிணை. உங்களுக்கு நான் பிணை. என் அவசரத்துக்கு கடன் வாங்க, நீங்க வந்தீங்க. இப்ப உங்க அவசரத்துக்கு, நான் வந்திருக்கேன். அவ்வளவு தானே!

''எதுக்கு நன்றி எல்லாம். அப்பாவுக்கு எப்படி இருக்கு... அதைச் சொல்லுங்க முதல்ல,'' என்று, அக்கறையோடு, நிகில் கேட்டதும், மோகனாவுக்கு தொண்டை அடைத்தது.

முன்பின் தெரியாத, வெறும் பணி நிமித்த நண்பரான நிகிலிடம் உள்ள மனிதாபிமானமும், அக்கறையும் கூட, தன் கணவன் திலீபனிடம் இல்லாமல் போனதே என்று, நொந்து கொண்டாள்.

''பை-பாஸ் செய்யப் போறாங்க. சீக்கிரம் குணமாகணும்ன்னு நீங்களும் வேண்டிக்கோங்க சார்,'' என்று சொல்லி விடைபெற்றாள், மோகனா.

அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து, மருத்துவமனையில் சேர்த்ததும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று கூறினர், மருத்துவர்கள். ஒரே மகளான அவளும், அம்மாவும் மலைத்துப் போய் நின்றது, நினைவில் வந்தது.

அப்பா... அற்புதமான மனிதர்! ஒரே மகளென்று பாசம் காட்டி, நல்லொழுக்கம் போதித்து, சிந்திக்கப் பயிற்றுவித்து, கல்வி தந்து, மணம் முடித்து, தன் கடமைகளை கச்சிதமாய் செய்து விட்டவர்.

கடைநிலை அரசு ஊழியராய் இருந்து, பணி ஓய்வு பெற்றவர். கடனும் இல்லை, பெரிய சொத்தும் இல்லை என, வாழ்ந்து வரும் சாதாரண குடும்பம் தான்.

இப்படிப்பட்ட நிலையில், ஆரம்ப கட்ட இக்கட்டை சமாளிக்க, அவளின் அம்மாவால் ஏதோ முடிந்தது. அடுத்த கட்டமாக, பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய தேவைப்படும் தொகை கொஞ்சம் அதிகம்.

சொந்த பந்தம், சுற்றம், நட்புகளும், தங்கள் கரங்களை நீட்டினர். அதையும் தாண்டிய பணத்தேவை ஏற்படவே, தன் கரம் பற்றிய கணவனைப் பார்த்தாள், மோகனா. தயங்கினாலும் வேறு வழி எதுவுமே இல்லாத நிலையில், தன் கணவன் திலீபனிடம் உதவி கேட்டாள்.

'பணம் இல்லைன்னா, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே... எதுக்கு இத்தனை செலவு பண்ணி, பிரைவேட்ல பார்க்குறீங்க?' என்பதில் துவங்கி, திலீபனின் பேச்சுக்கள், அவனின் குணத்தை வார்த்தைகளில் வடித்தன.

'உங்களைப் பணம் கொடுக்கச் சொல்லலைங்க. நான் கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர். எங்க ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில், 'லோன்' போட்டுக்கிறேன். அதுக்கு அனுமதி தாங்கன்னு கேட்கிறேன்...' என்று மன்றாடிப் பார்த்தாள், மோகனா.

'கூடாது...' என்ற ஒற்றைப் பிடியிலிருந்து இறங்குவதாய் இல்லை, திலீபன்.

புகுந்த வீட்டிலும் அவளுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க, வேறு ஆள் இல்லை. 10 ஆண்டு மண வாழ்வு. திலீபனின் இரு பிள்ளைகளுக்கு தாய். இதோ, அவளின் பொறுமை கரை கடந்து போனது. தன் கணவன் ஒப்புக் கொள்ளாததையும் மீறி, கடன் பெற எல்லா ஏற்பாடுகளையும் முடித்து விட்டாள்.

விஷயமறிந்தால், விளைவு என்னவென்று சிந்திக்கும் சூழலிலோ, மன நிலையிலோ அவள் இல்லை. பெற்று வளர்த்த தந்தைக்கு, இச்சூழலில் தன்னால் இயன்றதை செய்ய வேண்டிய கடமையை உணர்ந்தவளாய், கடன் பெறும் ஏற்பாடுகளையும் செய்து விட்டாள்.

இருந்த பணத்தைக் கட்டி, அடுத்த இரண்டாம் நாள் அப்பாவுக்கு நல்லபடியாய் அறுவை சிகிச்சை முடிந்தது.

மறுநாள், மோகனா கேட்டிருந்த கடன் பணமும் கைக்கு வந்துவிட, அறுவை சிகிச்சைக்குப் பின்னான மருத்துவமனை செலவுகள் சிரமமின்றி சமாளிக்கப்பட்டன. 15 நாட்களுக்குப் பின், நல்லபடியாய் வீடு வந்து சேர்ந்தார், அப்பா.

இந்த மொத்தச் சூழலிலும், மாப்பிள்ளையாகிய திலீபனின் அங்கம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு, மோகனாவுக்கு அவ்வப்போது நேரமளித்தான்; அவ்வளவு தான். அதையும், ஆயிரம் முறை செல்லிக் காட்டத் தவறவில்லை.

''நீ, 'லோன்' போட்டு கொடுத்தது மாப்பிள்ளைக்கு தெரியுமா... அவர் சம்மதத்தோட தானே பணம் கொடுத்த?'' என்று கேட்டாள், அம்மா.

''இல்லைம்மா, 'லோன்' போட ஒத்துக்கலை. அவருக்குத் தெரியாமத்தான், 'லோன்' போட்டு பணம் கொடுத்தேன்,'' என்றாள்.

அதிர்ச்சி அடைந்து, ஆட்சேபனை தெரிவித்தாள், அம்மா.

''சும்மா இரும்மா. அது என் பிரச்னை, நான் பார்த்துக்கிறேன். நீ அப்பாவைப் பாரு,'' என்று, அம்மாவை அடக்கினாள்.

மாதக்கடைசியில், மோகனாவின் வங்கிக் கணக்கில் வழக்கமான தொகை இல்லாமல், 30 ஆயிரம் ரூபாய் குறைச்சலாக சம்பளம் விழுந்ததும், திலீபனுக்கு விஷயம் புரிந்து போனது.

தந்தைக்காக மோகனா விடுப்பில் இருந்தபடியால், அவளின் பெற்றோர் வீட்டுக்குச் சென்றான்.

''மணமான மகளிடம் பணம் வாங்க வெட்கமாயில்லையா... உடனடியாய் கடனைத் திரும்பக் கட்டி, மறு மாதமே முழுச் சம்பளம் வந்தாக வேண்டும். இல்லாவிட்டால், பணத்தோடு பெண்ணையும் வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று குற்றஞ்சாட்டி, அவள் பெற்றோரை துாற்றினான்.

''நானுமே இதைத்தான் சொல்ல நினைச்சிருந்தேங்க. நான், இவங்களுக்கு மகளா இங்கேயே இருந்துக்கறேன்,'' என்று, கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாமல், நிதானமாய் மோகனா சொன்னதும், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

''பிள்ளைங்களைத் தர மாட்டேன்,'' என்றான், திலீபன்.

''தாராளமா வச்சுக்கோங்க. உங்களுக்கும் தான் அவங்க பிள்ளைங்க. தனியா வளர்த்துக்கோங்க. இன்னும் என்ன வேணும்ன்னாலும் செஞ்சுக்கோங்க. பிரிவுக்குக் கூட நான் தயார் தான்.

''கல்யாணம் தான் பண்ணிக் கொடுத்துருக்காங்க. நான் ஒண்ணும் அனாதை இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம், உங்க வீட்டை, எங்க வீடாய் பார்த்து மதிப்பு தந்து வாழறோம். அதே மாதிரி தான், நீங்களும் வாழணும்.

''உங்க குடும்ப இக்கட்டுகளுக்கு, நான் என் உழைப்பையும் கொடுத்திருக்கேன்; என் பணத்தையும் பயன்படுத்தியிருக்கீங்க. என்கிட்ட அனுமதியா வாங்கினீங்க?

''மனைவின்னா உங்களுக்கெல்லாம் அடிமைன்னு நினைப்பு, அப்படித்தானே. அவளை முழுக்க உறிஞ்சிப்பீங்க. ஆனா, அவளுக்கும், அவளைச் சார்ந்தவங்களுக்கும் ஒண்ணுன்னா கண்டுக்க மாட்டீங்க.

''என்னைப் பெத்தவரோட உயிரைக் காப்பாற்ற, என் பணத்தைக் கொடுக்க நீங்க அனுமதிக்கணும்ன்னு அவசியம் இல்லைங்க. பெத்தவங்களை விட்டுட்டு, உங்க வீட்டுல வந்து வாழறோம். அதுக்காக, எங்களுக்கும், பெத்தவங்களுக்கும் தொடர்பில்லைன்னு ஆயிடாது.

''அப்பாவோட உயிரைக் காப்பாத்துறதுக்கு கூட, என் சம்பாத்தியமும், உழைப்பும், படிப்பும் உதவலைன்னா அப்புறம் எதுக்கு? இப்ப நான் வாங்கின கடன், அடுத்த ஐந்து வருஷத்தில் அடைஞ்சுடும்.

''ஆனா, இப்ப நீங்க விட்ட வார்த்தைகள்... உங்க குறுகல் புத்திக்குள்ள என்னால இனியும், பொறுத்து வாழ முடியாது. என் பிள்ளைகளை நீங்க கொடுத்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி, என்னை விட்டுப் பிரிஞ்சாலும் சரி, இனி நான் இங்கே தான் இருக்கப் போறேன்.

''என் வாழ்க்கையை, என் வருமானத்தை இனி உங்களோட பகிர்ந்துக்கறதுல எனக்கு உடன்பாடில்லை,'' என்று சொல்லி முடித்தாள், மோகனா.

கோபப்பட்டாள், அம்மா; ஆனால், புரிந்து கொண்டார், அப்பா.

இந்த பிரச்னைக்கும், மகள் எடுத்த முடிவுக்கும் காரணம், பணம் மட்டுமல்ல. மனைவியாக அவளுக்கு அளிக்க வேண்டிய அடிப்படை மதிப்பை, ஆதரவை, சுதந்திரத்தை திலீபன் அளிக்கத் தவறியுள்ளான். இதுகாறும் நச்சு உறவு செய்து வந்திருக்கிறான் என்பது, அப்பாவுக்கு பளீச்சென்று புரிந்துவிட்டது.

சில ஆண்டுகளுக்கு பின், ஒருநாள், அதே கூட்டுறவு கடன் சங்கத்தில், மீண்டும் கடன் பெற விண்ணப்பித்து வெளியே வந்த, மோகனாவுக்காகக் காத்திருந்தான், திலீபன்.

திலீபனுக்கும் ஒரு அப்பா இருந்தார். அவருக்கும் இதயம் இருந்தது. அதிலும் வலி வந்தது. அதற்கு அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட வேண்டிய இக்கட்டும் வந்தது. காலமும் ஒரு சக்கரம் தானே!

''மூன்று நாள்ல கிரடிட் ஆயிடுமாங்க. நாம, இப்ப மருத்துவமனைக்கு போகலாம். இன்னைக்கு நான் அங்க தங்கறேன். நீங்க, அத்தையை வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க. குளிச்சு கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்.

''பிள்ளைங்களை, என் அப்பா-, அம்மா பார்த்துப்பாங்க. என் அப்பா, இரண்டு லட்சம் ரூபாய் தர்றதா சொன்னாங்கள்ல, போற வழியில் அதையும் வாங்கிக்கிட்டு போயிடலாம்,'' என்று, பரபரப்பாய் பேசியபடி வந்த மோகனாவை, கலங்கிய கண்களோடு பார்த்தான், திலீபன்.

''ஏங்க கண் கலங்குறீங்க, கவலைப்படாதீங்க. மாமா நல்லா ஆயிடுவாரு,'' என்றாள், மோகனா.

அப்பா, நன்றாக ஆகி விடுவாரா என்ற கவலையில், கண் கலங்கவில்லை.

கணவன் அடக்கி, மனைவி அடங்கி வாழ்வதல்ல வாழ்க்கை. ஒருவருக்குள் ஒருவர் அடங்கி வாழ்வதே மண வாழ்க்கை என்ற புரிதல் வந்ததாலேயே, கண் கலங்கினான்.

மதித்து மட்டும் தான் மதிப்பை பெற முடியும் என்ற உலக நியதிக்கு, கணவன்- - மனைவி உறவு ஒன்றும் விதிவிலக்கில்லை என்ற புரிதல், தாமதமாக வந்திருக்கிறது. அது வந்துவிட்ட பிறகே, வாழ்க்கை இனிப்பதாக, உள்ளுக்குள் ஒப்புக்கொண்டான், திலீபன்.

மோகனா சொன்னதைப் போல், அவளின் அம்மா வீட்டுக்கு வண்டியை விட்டான், திலீபன்.

வித்யா குருராஜன்வயது: 36படிப்பு: கணிதம் மற்றும் கல்வியியலில் இளங்கலை பட்டப் படிப்பு.பணி: ஆரம்ப பள்ளி ஆசிரியை, புதுச்சேரி சொந்த ஊர்: திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.'மாம்பிரஸ்னோ தமிழ்' என்ற இணையதளத்தில் இதுவரை நுாற்றுக்கணக்கான படைப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது குறுநாவல் ஒன்று, புத்தகமாக வெளிவந்துள்ளது. சிறப்பான எழுத்துப் பணி மற்றும் ஆசிரியை பணிக்கும், பல விருதுகளை பெற்றுள்ளார். மாணவர்களோடு பொருந்திப் போகும்படியான நல்ல ஆசிரியையாக இருக்க வேண்டும் மற்றும் எழுத்து மூலம், பலரிடம் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும் ஆகிய இரண்டும் இவரது லட்சியமாகும்.கதைக் கரு பிறந்த விதம்: இச்சிறுகதையில் வருவது போன்ற சூழலில் சிக்கியிருந்த தோழி, பிரச்னையிலிருந்து மீள முடியாமல், வாழ்வை முடித்துக் கொண்டாள். அதுபோல், யாரும் முடிவெடுக்கக் கூடாது. எதிர்த்து நின்று போராடி, நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று எண்ணியதில், உருவான கரு இது.     






      Dinamalar
      Follow us