
* ந.நாகராஜன், திருப்பூர்: படிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து மற்றும் பணம் இருந்தும், அரசியலில் ஈடுபடாத சிலர் உள்ளனரே... அவர்களை பற்றி...
நீங்கள் கூறிய, 'குவாலிபிகேஷன்'கள் இல்லாதவர்களுக்குத்தான், அரசியல் லாயக்கு என, அவை உள்ளோர், ஒதுங்கி விட்டனர்.
ச.சந்திரன், திண்டிவனம்: நிரந்தரமான கொள்கை உடையோரை, அரசியலில் காண முடிவதில்லையே...
ஏன் இல்லாமல்... எந்த கட்சி ஆட்சி அமைப்பது போல் இருந்தாலும், அதில் தம்மை இணைத்துக் கொள்பவர்கள் இருக்கின்றனரே... அவர்களது கொள்கை நிரந்தரமானது தானே!
வ.அருண்குமார், சென்னை: அரசின் எந்த இலவச திட்டத்தை வெறுக்கிறீர்கள்?
எல்லா இலவச திட்டங்களையும்! இடையில் உள்ளோரின் இல்லங்களை வளமாக்கவே பயன்படுகின்றன, இலவசங்கள்; பயனீட்டாளர்களின் கையில் முழுமையாக சென்று அடைவதே இல்லை. மேலும், இலவசங்கள், சோம்பேறிகள் வளர்ந்து விடவே வித்திடுகிறது.
கே.மோகன், கோவை: போலீஸ் என்றாலே பொதுமக்களிடம் மிகுந்த வெறுப்பும், அவநம்பிக்கையுமே உள்ளதே... இந்த நிலைக்கு காரணம் என்ன?
ஒழுக்கமின்மையும், நேர்மையின்மையும் அத்துறையில் பெருகி விட்டது. 'லைசன்ஸ்' பெற்ற ரவுடிகளாக அத்துறையினர் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொள்வதால் ஏற்பட்ட சூழ்நிலை இது!
* க.சத்திய நாராயணன், நெல்லை: மூளையை கசக்கிப் பிழிந்து, லஞ்சத்தை ஒழிக்க ஒரு வழி சொல்லுங்களேன்...
கசக்கவும் வேண்டாம், பிழியவும் வேண்டாம். லஞ்சத்தைப் பொறுத்து, வாங்கியவரின் பதவி முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அரபு நாடுகள் போல கை வெட்டுதல் முதல் தலை சீவுதல் வரை செய்தால் போதுமே!
கே.மலர்விழி, திருச்சி: நீங்கள் விரும்புவது ஜனநாயகமா? கம்யூனிசமா? சர்வாதிகாரமா?
ஜனநாயகம்! ஆனால், நம் நாட்டில் இருப்பது போன்ற, அவுத்துவிட்ட ஜனநாயகம் அல்ல... சிங்கப்பூரில் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய ஜனநாயகம்...
நம் நாட்டு ஜனநாயகம், சட்டம் - ஒழுங்கு கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் அல்லவா உள்ளது!
ஆர்.கிருஷ்ணக்குமார், புதுச்சேரி: ஒரு மனிதன், ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்?
அது, அவரவருடைய நெருக்கடியைப் பொறுத்தது.
எஸ். ராமரத்தினம், துாத்துக்குடி: மனசாட்சி என்பது என்ன?
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஒரு நல்லவன் ஒளிந்திருக்கிறான். நம் இயல்புக்கு மாறாக செயல்படும்போது, இந்த நல்லவன் குரல் கொடுப்பான். அவன் பெயர் தான் மனசாட்சி.
இந்த மனசாட்சியை மதித்து நடந்தால், நம்மை அனைவரும் மதிப்பர். அதை அலட்சியப்படுத்தினால், மற்றவர்கள் நம்மை துாக்கியெறிந்து விடுவர்.
ஜே. மனோகரி, விருதுநகர்: ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது எது?
நம்மால் முன்னேற முடியுமா, முடியாதா என்ற சந்தேகம் தான். இவர்களால் எந்த காலத்திலும் முன்னேறவே முடியாது!