/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - விழித்திரு பெண்ணே... விழித்திரு!
/
கவிதைச்சோலை - விழித்திரு பெண்ணே... விழித்திரு!
PUBLISHED ON : மார் 03, 2024

பெண்ணே... இன்று நீ
விண்ணளவு உயர்ந்து விட்டாய்...
ஆனாலும் உன்னை வீழ்த்துவதற்கு
காமக் கழுகுகள்
காதல் கண்களோடு
கூடுகட்டி காத்திருக்கின்றன...
அதனால்,
விழித்திரு பெண்ணே விழித்திரு!
நீ சிகரத்தை நோக்கி சிறகு விரிப்பதை
சகிக்க முடியாத
பொறாமை வல்லுாறுகள்
உன் சிறகுகளை நறுக்க
கண்ணி வைப்பர்...
விழித்திரு பெண்ணே விழித்திரு!
நீ மண்கலயத்தில்
மறைந்திருக்கும் புதையல்...
புதையல் எடுப்பதற்காக
மண்பாண்டத்தை உடைக்கவும்
தயங்கமாட்டார்கள்...
விழித்திரு பெண்ணே விழித்திரு!
அழுகிற குழந்தைக்குதான்
அன்னை அமுதுாட்டுவாள்
உன் உரிமைகளைப் பெற
அடம் பிடித்து அழவும் நேரிடலாம்...
விழித்திரு பெண்ணே விழித்திரு!
நீ தடைகளை தாண்டி
விரைந்தோடுவதைக் கண்டு
உன் கால்களுக்கு
விலங்கு பூட்ட முயற்சிப்பர்...
விழித்திரு பெண்ணே விழித்திரு!
பெண்மையின்
உண்மையை மறைத்து
நாகரிகம் என்ற பெயரில்
சீரழிக்கும் வலையில்
உன்னை சிக்க வைக்கவும்
சமயம் பார்ப்பர்...
விழித்திரு பெண்ணே விழித்திரு!
நீ கருவறையிலிருந்து
வெளிப்படும் போதே
கையில் கள்ளிப்பாலோடு
பெண்ணொருத்தி
காத்திருக்கவும் செய்வாள்...
விழித்திரு பெண்ணே விழித்திரு!
என். ஆசைத்தம்பி, ஆவடி, சென்னை.