
மார்ச் 14 - காரடையான் நோன்பு
இறந்து போன ஒருவரை காப்பாற்றுவது சாத்தியமா என்றால், அது அறிவியலால் இன்று வரை முடியாதது. ஆனால், ஆன்மிகத்தில், இறந்த பலர் உயிர் பெற்று எழுந்ததைக் காண்கிறோம்.
தன் கணவன் சத்தியவானை, சாவித்திரி என்ற இளவரசி காப்பாற்றியதாக, சத்தியவான்- சாவித்திரி கதையில் படிக்கிறோம். யார் இந்த சாவித்திரி?
தன் தாய் அத்யசியந்தியின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே வேதம் கற்றவர், பராசரர் என்ற முனிவர்.
பராசரரின் தந்தையான சக்தி முனிவர், மிகப்பெரிய வேத வித்வான். அவர் வேத மந்திரங்களை உச்சரிக்கும் போது, கருவிலிருந்த பராசரர், அதை உன்னிப்பாகக் கேட்டார். இதனால், சிறு வயதிலேயே வேதங்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். அதற்கேற்ப, அவருக்கு குருவாக அமைந்தார், பக் ஷல் என்ற முனிவர். இவர் தான், ரிக் வேத ஸ்லோகங்களை எழுதியவர்.
வேத விற்பன்னரான பராசரர், வேதவல்லியான காயத்ரியை வணங்கி வந்தார். காயத்ரியின் இன்னொரு பெயர், சாவித்திரி.
காயத்ரி என்றால் மந்திரம், இனிய பாடல் என்றும், ஒளிக்கீற்று என்றும் பொருள். இந்த வேத மாதா, பூமியில் மானிட ஜென்மமாக பிறக்க வேண்டும் என்பது பராசரரின் விருப்பம். இதை நிறைவேற்ற, காயத்ரி தேவியும் முடிவெடுத்தாள்.
ஒருமுறை பராசரர், மத்ர தேசம் சென்றார். அஸ்வபதி மகாராஜா அதை ஆண்டு வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை.
மன்னரிடம், 'நீயும், உன் மனைவி மாலதியும், சாவித்திரி தேவியை மனதில் எண்ணி விரதம் இருங்கள். மாசியும், பங்குனியும் இணையும் நாளில் பஞ்சமி திதியில், இந்த விரதத்தை துவக்குவது சிறப்பானது. இந்த விரதத்தின் போது, 14 வகை பழங்களை சாவித்திரி தேவிக்கு படைக்க வேண்டும்...' என்றார்.
அஸ்வபதி- -- மாலதி தம்பதியும் பயபக்தியுடன் விரதம் அனுஷ்டித்தனர். இதன் பலனாக சாவித்திரி தேவியே அவர்களுக்கு மகளாகப் பிறந்தாள். பேரழகும், பேரறிவும் கொண்டவளாகத் திகழ்ந்தாள்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும், ஒவ்வொரு சாதனையை செய்தாக வேண்டும் என்று போதிக்க எண்ணினாள். தன் திருவிளையாடலை ஆரம்பித்தாள்.
இறந்து விடுவான் எனத் தெரிந்தும், சத்தியவான் என்ற வாலிபனைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டாள். அவனது இறப்பு நாள் வந்தது.
சத்தியவான் இறந்ததும், அவனது உயிரை எடுத்துச் சென்றான், எமதர்மன். அவனைப் பின்தொடர்ந்து தன் கணவன் உயிரை திருப்பித் தருமாறு கேட்டாள்.
'உயிரைத் திரும்பத் தருவது தர்மமல்ல...' என்றான், எமன். அவனுக்கு பல தர்மங்கள் பற்றி பாடம் எடுத்தாள், சாவித்திரி.
இதைக் கேட்டு மகிழ்ந்து, 'ஒரு வரம் கேள்...' என்றான், எமன்.
சாவித்திரியும் புத்திசாலித்தனமாக, 'எனக்கு, 100 பிள்ளைகள் வேண்டும்...' எனக் கேட்க, அவளது கணவனை விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானான், எமன்.
மனிதர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாகத் திகழ்ந்தவள், சாவித்திரி. அவளை, காரடையான் நோன்பு நன்னாளில் நினைவு கூர்ந்து, பெரும் சாதனைகளைப் படைப்போம்.
தி. செல்லப்பா