PUBLISHED ON : மார் 17, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொன்னாலும் தெரிவதில்லை
சுய புத்தி இருப்பதில்லை
பின்னாலே வருந்துவதில்
என்னாலும் லாபமில்லை!
கண்ணாடி கூண்டுக்குள்ளே
கல்லால் எறிந்து விட்டு
கனலாக கண்ணழுதால்
யாருக்கும் லாபமில்லை!
நினைவிருக்கும் போதினிலே
நிலையாக இல்லாமல்
களைத்திருக்கும் போதினிலே
கதறுவதில் லாபமில்லை!
நெஞ்சமதை வஞ்சித்து
நெறி தவறி செய்து விட்டு
கெஞ்சியே கலங்குவதால்
யாருக்கும் லாபமில்லை!
மாந்தர் தம் சொல் கேளாது
மா பாவங்கள் செய்த பின்னே
சிதைந்தொழுத வாழ்வுதனில்
சிறப்பான லாபமென்ன!
திறத்தோடு செய்வதை
செய்யாமல் தவற விட்டு
திருவருளை குறை சொன்னால்
யாருக்கு லாபமடி!
கருத்தினிலே தெளிவில்லை
முயன்றது முடியவில்லை
உடலதில் தெம்பில்லை
அழுவதில் லாபமென்ன!
பணிவோடு செய்வதனை
மதியாது தவற விட்டு
பிணியோடு பரிதவித்தால்
யாருக்கும் லாபமில்லை!
—சுரேஷ் ராஜகோபால், சென்னை.