PUBLISHED ON : ஜூன் 09, 2024

* என்றுமே தங்களை
அலங்கரித்துக் கொள்வதில்லை
அர்ச்சனைப் பூக்கள்!
* விபரித்துக் கொள்ள என்றுமே
விரும்பியதில்லை விருந்துக்கு
வித்திடும் விவசாயி
தான் விதைத்த விதை இதுவென்று!
* தோற்றதின் சிரமத்தை
ஒருபோதும்
சொல்லிக் கொள்ள விரும்பியதில்லை
சோதனையில் வென்றவர்கள்!
* மவுனத்தின் சகுனத்திலேயேமறைத்துக் கொள்கின்றனர்
சரித்திரத்தை வென்ற
சாதனையாளர்கள்!
* உடனடித் தேவைகளுக்கு
உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்
நெஞ்சத்தை வென்று
நிரந்தரமாக நின்று போகின்றனர்!
* இருப்பதை கொடுத்து விட்டு
இல்லாமல் போகிறவர்கள்
பொக்கிஷமாக
புதைந்து விடுகின்றனர்
எல்லார் இதயங்களிலும்!
* கொடுப்பதில் பெருமை என்றாலும்
சொல்லாமல் அளிப்பதன் சுகங்கள்
சொர்க்கத்திலும் கிடைப்பதில்லை
வள்ளல் பெருமக்களுக்கு!
* விண்ணைத் தொட நினைக்கும்
வெற்றியாளர்களுக்கு
விளம்பரம் தேவையில்லை
அவர்கள் அமைதி ஒன்றே
அகிலம் அறியச் செய்யும்!
— க. அழகர்சாமி, கொச்சி.

