தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: எல்லாம் அவன் கையில்!

விசேஷம் இது வித்தியாசம்: எல்லாம் அவன் கையில்!

விசேஷம் இது வித்தியாசம்: எல்லாம் அவன் கையில்!


PUBLISHED ON : செப் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் கையில் தான் வீடு இருக்கிறது, நம் கையில் தான் இந்த நாடே இருக்கிறது, நம் கைப்பிடிக்குள் தான் இந்த உலகமே இருக்கிறது என, பீற்றிக் கொண்டு திரிபவர்கள் தான் உலகில் அதிகம்.

உடலிலிருந்து ஆவி போய்விட்டால், 'என் வம்சத்துக்கு சேர்த்து வைத்து விட்டு போய் விட்டேன்...' என்று பெருமைப்படுவதற்கு கூட, அர்த்தமே இல்லையே. ஒரு பூகம்பம் வந்தால் போதும், வம்சாவழிக்கு சேர்த்து வைத்ததெல்லாம் கூட, பாழாய் போய் விடுமே!

பணக்காரர்களை விடுங்கள்... இந்த ஏழை, நடுத்தர மக்களுக்கு இருக்கும் மமதையைப் பாருங்களேன்! 1ம் தேதி சம்பளம் வருகிறது. 25ம் தேதி வரை கையிலுள்ள பணத்தை வைத்து ஓட்டி விட்டார். 26ம் தேதி, 'நாரயணா! 25ம் தேதி வரை ஓட்டி விட்டேன். மீதி, ஐந்து நாளை கழிப்பதற்கு நீ தான் அருள் செய்ய வேண்டும். 1ம் தேதி வந்து விட்டால், உன்னை சிரமப்படுத்த மாட்டேன்...' என்று நாராயணனுக்கே, 'சாய்ஸ்' கொடுக்கின்றனர்.

அந்த, 25ம் தேதி வரை, நம் காலத்தை ஓட்ட, வேலை தந்ததே அந்த நாராயணன் தானே... இதை அவர்கள் உணர்வதில்லை. சர்வமும் அவன் செயல், எல்லாம் அவன் கையில் என்ற எண்ண ஓட்டத்தை நமக்குள் உற்பத்தி செய்யும் திருநாள் தான், ஓணம்.

'இந்த உலகமே என்னுடையது, அதில், நீ வாடகைக்கு குடியிருக்கிறாய். உன் காலம், ஆறு மாதமாகவும் இருக்கலாம், 60 ஆண்டாகவும் இருக்கலாம். என்றாவது ஒருநாள், நீ என் வீட்டை காலி செய்தே ஆக வேண்டும்...' என்று, பகவான் நாராயணன், மகாபலி என்ற மன்னன் மூலமாக நமக்கு அருளி இருக்கிறான்.

நரசிம்மரால் வதம் செய்யப்பட்ட, இரண்யனின் மகன் பிரகலாதன். இவனது மகன் விரோசனன். விரோசனின் மகன் வைரோசனன். வைரோசனனின் மகன் மகாபலி. அதாவது, பிரகலாதனுக்கு கொள்ளுப்பேரன், இரண்யனுக்கு எள்ளுப்பேரன்.

மகாபலியின் குரு, சுக்ராச்சாரியார். தன் சீடனுக்கு, விச்வஜித் - உலகையே ஜெயிப்பது என்ற யாகம் மூலம், ஏராளமான வில், அம்புகளை யாக குண்டத்தில் இருந்து பெற்றுக் கொடுத்தார். தேவலோகத்தையே அடக்க வல்லவை இந்த ஆயுதங்கள்.

ஆயுதமும், அதிகாரமும் கையில் இருந்தால், அகங்காரம் தலை துாக்கி விடும் அல்லவா! எல்லா உலகங்களையும் தன் வசம் கொண்டு வந்தான், மகாபலி.

அதிகாரம் இழந்த தேவர்கள், விஷ்ணுவிடம் முறையிட்டனர். அந்நேரத்தில், காஷ்யப முனிவர் என்பவரும், அவரது மனைவி அதிதியும், நாராயணனின் திருவடிகளை அடைய விரும்பி தவமிருந்தனர்.

பகவான் தோன்ற, அவரது அழகைப் பார்த்ததும் புத்தி மாறி, 'அழகுப்பிள்ளையே! நீயே எங்கள் மகனாக வேண்டும்...' என்று வேண்டுதலை மாற்றினார்.

பகவானும், அவள் வயிற்றில் குள்ள வடிவாய் பிறந்தார். விக்ரமனாய் உயர்ந்த வடிவெடுத்து, 3 அடியால் உலகளந்து, மகாபலியை ஆட்கொண்டார்.

'இந்த உலகம் உன்னுடையதல்ல, என்னுடையது. நீ எவ்வளவு சேர்த்து வைத்தாலும், அது என்னுடையதே...' என்று உலகுக்கு உணர்த்தினார்.

பகவான் நமக்கு கொடுப்பது எல்லாமே அவருடையது தான். அவர் என்ன தருகிறாரோ, அது அவரவர் விதிப்பலனைப் பொறுத்தது. அதைக் கொண்டு, வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே, ஓணம் திருநாள் உணர்த்தும் தத்துவம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us