/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: தண்ணீர் ராமாயணம்!
/
விசேஷம் இது வித்தியாசம்: தண்ணீர் ராமாயணம்!
PUBLISHED ON : மார் 22, 2026

மார்ச் 27 - ராம நவமி
வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், தாய்லாந்து ராமாயணம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன, தண்ணீர் ராமாயணம்? இதோ... அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
முதன்முதலில், ராமாயணத்தை எழுதும் போது, பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும், ஆறு காண்டங்களாகப் பிரித்தார், வால்மீகி. பிற்காலத்தில், உத்தரகாண்டம் இணைந்ததாக சொல்வர். காண்டம் என்றால், ஒவ்வொரு பகுதியிலும் நடந்த சம்பவங்களைப் பிரித்து பிரித்து எழுதுதல் என்று பொருள். இது, ஒரு வகையில் சரியானது தான்.
ஆனால், காண்டம் என்பதற்கு, தண்ணீர், கரும்பு என்ற பொருளும் உண்டு. இந்த உலகத்திற்கு தண்ணீரை வாரி வழங்கும் மூலப்பொருள், கடல் தான். இதனால் தான், திருமால் திருப்பாற்கடலில் வாசம் செய்கிறார். கடல் எப்படி உலகத்துக்கு தண்ணீர் வழங்குகிறதோ, அதுபோல திருமாலின் அவதாரமான ராமனும், உலக உயிர்களுக்கு அருள் செய்கிறார். அவரே ஜீவன். நம் உடலில் அவர் இருக்கும் வரை தான், நாம் உயிர் வாழ்வோம். அந்த ஜீவன் நம்மைப் பிரிந்து விட்டால், நமக்கு உயிர் இல்லை.
இதனால் தான் தண்ணீர் என, பொருள் தரும் காண்டம் என்ற சொல்லை தன், ராமாயண காவியத்துக்கு பயன்படுத்தினார், வால்மீகி.
ராமன் அவதரித்த அயோத்தியில் ஓடுவது, சரயு நதி. இது, இமயமலையின் மானசரோவரில் உற்பத்தியாகிறது. ராம எனும் நாமம், நம் மனம் எனும் பொய்கையில் உற்பத்தியாகிறது. ஒரு நதி ஓடி வரும் போது, பல திருப்பங்களை சந்திக்கிறது, பல வளைவுகளை கடக்கிறது, பாறைகளில் மோதுகிறது. பாறையில் மோதினால் வலி ஏற்படும்.
கடவுளே மனிதனாகப் பிறந்தாலும் அவன் திருப்பங்களையும், வளைவுகளையும் கடந்தாக வேண்டும்; வலிகளைத் தாங்கியாக வேண்டும். இதனால் தான், தன் காவியத்தின் பிரிவுகளுக்கு, காண்டம் என, பெயர் வைத்தார், வால்மீகி.
காண்டம் என்றால் கரும்பு என்றும் பொருள். கரும்பை அடி முதல் மேல் வரை எங்கு கடித்தாலும் இனிக்கும். ராமாயணமும் இனிமையான காவியம்.
ராம என்ற சொல்லை மரா, மாரா என்று உச்சரித்தார், வால்மீகி.
'இதையே சற்று விரைவாகச் சொல்லும் போது, ராம, ராமா என்று தானாகவே மாறி விடும்...' என்றார், நாரதர்.
மாரா என்ற சொல்லுக்கு, மரணம் என்றும் பொருள் உண்டு. ஜோதிடத்தில் இதையே, மாரகம் என்பர். வாழ்வு நிலையற்றது. மரணம் ஒருநாள் உறுதி என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது, ராம நாமம்.
இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கிய, ராம நாமம் இருக்கும் வரை, இந்த பாரதத்தை அசைத்துப் பார்க்க யாராலும் இயலாது.
தி.செல்லப்பா

