/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: ஒரு தமிழ் விளையாட்டு!
/
விசேஷம் இது வித்தியாசம்: ஒரு தமிழ் விளையாட்டு!
PUBLISHED ON : ஏப் 12, 2026

ஏப்.,14 - தமிழ் புத்தாண்டு
பனிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில், சூரியன் நுழையும் சித்திரை மாத முதல் நாளை, தமிழக மக்கள், தமிழ் புத்தாண்டாகவும், வேறு சில மாநிலத்தவர், மேஷ சங்கராந்தி என்ற பெயரிலும், சிலர், பைசாகி என்ற பெயரிலும் கொண்டாடுகின்றனர்.
இந்த இனிய தமிழ் புத்தாண்டில், சிவபெருமானுக்கு, பித்தன் என்ற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி அறிந்து கொள்வோமா?
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரரும், சிவனும் நண்பர்கள். உறவினர்களை திட்டுவதற்கு தான் யோசிக்க வேண்டும். ஆனால், உண்மையான நண்பர்கள், என்ன பட்டப்பெயர் வைத்து வேண்டு மானாலும், சக நண்பர்களை திட்டலாம், கேலி செய்யலாம். எல்லாமே வேடிக்கையாகத் தான் இருக்கும்.
இப்படித்தான், ஒருமுறை சுந்தரருக்கும், சிவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கோபத்தில், சிவனை, பித்தனே என, திட்டி விட்டார், சுந்தரர். பித்தன் என்றால் சட்டையைக் கிழித்துக் கொண்டு, ைகயில் கிடைத்ததை துாக்கி எறிந்து, புத்தி சுவாதீனமின்றி தெருக்களில் திரிபவன் என்று அர்த்தம். சிவபெருமானை இப்படி வர்ணித்தால் யாராவது விடுவரா?
சிவன் சிரித்தார். 'சுந்தரா! உன் பாட்டைக் கேட்க எனக்கு ஆசை. அதனால் தான் உன்னை சோதித்தேன். இல்லை, இல்லை விளையாட்டு காட்டினேன். சரி, நீ என்னைப் பற்றி பாடேன்...' என்றார்.
'என்ன சொல்லி பாட ஆரம்பிப்பது?' என, சுந்தரர் கேட்க, 'நீ என்னை பித்தன் என, திட்டினாய் அல்லவா! அந்த வார்த்தையைக் கொண்டே பாடேன்...' என்றதும், 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...' என்று பாடினார், சுந்தரர்.
இதுபற்றி, தமிழறிஞர் மகாவித்வான், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்கள் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 'ஆசிரியரே! பித்தன் என்ற வார்த்தையை, சுந்தரர் ஏன் பயன்படுத்தினார்?' என்று கேட்டனர்.
இதற்கு விடையாக ஒரு செய்யுளே இயற்றினார், மகாவித்வான். அதன் பொருள், இது தான்:
தன் தலையில் கங்கையை துாக்கி வைத்து கொண்டாடுகிறார், சிவன். ஆனால், அம்பாள் பார்வதிக்கு தன் உடலில் பாதி இடமே கொடுத்திருக்கிறார். தண்ணீரில் ஒருவன் மூழ்கினால், மூன்று முறை மட்டுமே அவனைத் துாக்கி விடும் தன்மை கொண்டது, தண்ணீர். அதற்குள் அவன் காப்பாற்றப்படாவிட்டால், நீரில் மூழ்கி விடுவான். கங்கை என்பதும் நீரின் அம்சம்தான். ஆனால், அம்பாள் அப்படியா? தன் பக்தர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் அவர்களைத் தன் பிள்ளைகளாக கருதி, சிவனிடமிருந்து காப்பாற்ற சிபாரிசு செய்வாள்.
இப்படி எண்ணற்ற தவறுகளை பொறுப்பவளுக்கு உடலில் இடம்; மூன்றே தவறை பொறுப்பவளுக்கு தலையில் சிம்மாசனம்! பிறகு, இவரை, பித்தன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பதாம், என, சுந்தரர் நினைத்திருப்பார், திட்டியிருப்பார் என, விளக்கமளித்தார், மீனாட்சி சுந்தரம்.
மாணவர்கள் மட்டுமல்ல, நாமும் தானே அசந்து விட்டோம், இந்த விளக்கம் கேட்டு!
தமிழ் புத்தாண்டில், சற்றே தமிழை ருசித்ததில் மகிழ்ச்சி தானே!
தி. செல்லப்பா

