/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: டாக்டர் நரசிம்மா!
/
விசேஷம் இது வித்தியாசம்: டாக்டர் நரசிம்மா!
PUBLISHED ON : ஏப் 26, 2026

ஏப்., 30 நரசிம்மா ஜெயந்தி
தமிழகத்தில், சிவனுக்கு, வைத்தீஸ்வரன், வைத்தியநாதர் என்றெல்லாம் மருத்துவ பட்டம் கொடுத்து, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் உட்பட இன்னும் சில தலங்களில் கோவில்கள் உள்ளன. இதே போல, தெலுங்கானா மாநிலம், புவனகிரி மாவட்டத்திலுள்ள, யாதகிரி குட்டாவில், நரசிம்ம வடிவில் பக்தர்களின் நோய் தீர்க்கும் மருத்துவராக விளங்குகிறார், திருமால்.
மனிதன் பாதி, மிருகம் பாதி கலந்து தோன்றிய அவதாரம், நரசிம்மம்; தசாவதாரங்களில் மிகவும் வித்தியாசமானது. எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், மனிதன் சாதாரணமானவன் என்பதை உணர்த்த தோன்றிய அவதாரம் இது.
ரிஷ்யசிருங்கர் என்ற முனிவரின் மகன், யாதரிஷி. இவர், நரசிம்மரின் ஐந்து வகை வடிவங்களையும் ஒரு சேர தரிசிக்க எண்ணினார். ஜ்வாலா (பிரகாசமானது), யோகானந்தா (யோகாவில் ஆழ்தல்), கந்தபேருண்டா (இரண்டு தலை கொண்ட பறவை வடிவம்), உக்ரா(துாணில் இருந்து கோபமாக வெளிப்படுதல்), லட்சுமிநரசிம்மர் (சாந்த நிலை) ஆகியவையே அந்த வடிவங்கள். இதற்காக, யாதகிரி மலையிலுள்ள குகையில் தவமிருந்தார்.
அவரது தவத்தை மெச்சி, ஐந்து வகை நரசிம்ம வடிவங்களையும் காட்டியருளினார், திருமால். இந்த ஐந்து வடிவங்களையும் கொண்ட கோவில், யாதகிரி மலையில் எழுப்பப்பட்டது. இதை, பஞ்ச நரசிம்மர் கோவில் என்பர். இந்த நரசிம்மர்களை, மலையில் வசித்த மக்கள் ஆராதித்து வந்தனர். அவர்களது ஆராதனையில் திருப்தி அடையாத, பஞ்ச நரசிம்மர்களும் மலையின் ஒரு பகுதியில் மறைந்து கொண்டனர். அவர்களைத் தேடியலைந்தனர், மலைவாழ் மக்கள். அவர்களில் பக்தி மிக்க ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய, நரசிம்மர், தனக்கு முறைப்படி ஆராதனை நடக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடத்தில் மறைந்திருப்பதாகவும் சொன்னார். மலைவாழ் மக்களும் அதன் பின் முறையான ஆராதனைக்கு ஏற்பாடு செய்தனர்.
பிற்காலத்தில், இந்த இடத்தில் தமிழக கட்டட அமைப்பில் ஒரு கோவில் எழுப்பப்பட்டது. பஞ்ச நரசிம்மர்களும், தன்னை வழிபட்டவர்களுக்கு நோய்களைத் தீர்த்தருளினர். பக்தர்களின் கனவிலேயே தோன்றி, அவர்களின் நோயை சரி செய்துள்ளனர், இந்த நரசிம்மர்கள். இதனால், இவர்களை, 'வைத்திய நரசிம்மர்' என, அழைத்தனர். அது மட்டுமின்றி, கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் இவர்கள் காத்தருளினர். நாட்பட்ட நோய்கள் தீர, இங்கு, 41 நாள் தங்கி வழிபடுகின்றனர்.
குணமானவர்கள், வேண்டுதல் நிறைவேறியவர்கள், முடி காணிக்கை செலுத்தி நன்றி தெரிவிக்கின்றனர்.
ஹைதராபாத்திலிருந்து, 65 கி.மீ., துாரத்தில், யாதகிரிகுட்டா உள்ளது. விமான நிலையத்தில் இருந்து, 82 கி.மீ., 300 அடி உயரம் கொண்ட மலையில், 400 படிகள் ஏற வேண்டும். மலை உச்சிக்கு கார், ஆட்டோவில் செல்லவும் வசதியுள்ளது. தினமும், ஏழாயிரம் பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
தி. செல்லப்பா

