PUBLISHED ON : ஜூலை 26, 2026

ஜூலை 28 - ஆடித் தபசு
தபஸ் என்றால், தவம். அம்பாள் பார்வதி, சிவனை எண்ணி மயில் வடிவில், புன்னை வனக்காட்டில் தவமிருந்து அவரை அடைந்த தலம், சங்கரன்கோவில். இந்த நிகழ்வு, ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி, ஆடித் தபசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில், இந்த ஒருநாள் மட்டும் தான், பக்தர்கள் விரதம் அனுஷ்டிப்பர். ஆனால், வடமாநில மக்கள் ஆடி பவுர்ணமி முதல் ஆவணி மாத பவுர்ணமி வரை அம்பாளின் தவக்காலத்தை விரத காலமாக அனுஷ்டிப்பர். இந்த விரதத்துக்கு, கோகிலா விரதம் என, பெயர். கோகிலா என்றால், குயில் என்று அர்த்தம். தமிழகத்தில் அம்பாள், மயில் வடிவில் தவமிருந்ததாக சொல்வர். ஆனால், வடக்கே குயில் வடிவில் தவமிருந்ததாக கருதுவதால், கோகிலா விரதம் என, பெயர் சூட்டியுள்ளனர்.
தட்சன் என்ற மன்னனின் மகளாக பூமியில் பிறந்தாள், பார்வதி தேவி. அப்போது அவளது பெயர், தாட்சாயணி. சிவனை திருமணம் செய்தாள். இது, தட்சனுக்கு பிடிக்கவில்லை. மருமகனை அவமானப்படுத்தும் நோக்கில், அவரை அழைக்காமல், யாகம் ஒன்று நடத்தினான், தட்சன். அந்த நிகழ்ச்சிக்கு கணவன் தடுத்ததையும் மீறி சென்றாள், தாட்சாயணி. தன் கணவரை அழைக்காதது பற்றி தந்தையிடம் கோபித்தாள். அப்போதும், தட்சன், சிவனை அவமானப்படுத்தியதால், கோபமடைந்த தாட்சாயணி, யா க குண்டத்தில் குதித்து யாகத்தை தடுத்தாள்.
இதையடுத்து கோப மடைந்த, சிவன், தன் அம்சமான வீரபத்திரர் மூலம் யாக குண்டத்தை அழித்தார். தன் சொல்லை மீறியதற்காக, ஆயிரம் ஆண்டுகள், குயில் வடிவில், பூலோகத்தில் தவமிருந்து தன்னை அடைய உத்தரவிட்டார். அம்பாளும், கோகிலா என்ற பெயர் தாங்கி தவமிருந்து, மீண்டும் கணவனை அடைந்தாள்.
பெண்கள் தங்கள் தாலி பாக்கியத்திற்காகவும், சிறந்த கணவர் அமைய வேண்டியும் இந்த விரதத்தை ஒருமாதம் அனுஷ்டிப்பர். இந்த நாட்களில் காலையில் குளிக்கும் போது, ஜவ்வாது, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமணப்பொருட்கள் கலந்த நீரில் நீராடுவர். சோப்புக்கு பதில், கடலை மாவை தேய்த்துக் கொள்வர். களிமண்ணில், குயில் பொம்மை செய்தோ அல்லது கடைகளில் வாங்கியோ அலங்கரிப்பர். அதை அம்பாளாக பாவித்து பூஜை செய்வர். பகலில் சாப்பிடாமல், இரவில் வெட்ட வெளியில் அமர்ந்து சாப்பிடுவர்.
ராமனின் தம்பி, சத்ருக்னனின் மனைவி சுருதகீர்த்தி, தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி, தங்கள் குல குரு வசிஷ்டரின் அறிவுரைப்படி, இந்த விரதத்தை அனுஷ்டித்தாள்.
குயிலுக்கு தனித்து வாழ்வதில் விருப்பம் அதிகம். இனப்பெருக்க நேரம் தவிர, தன் துணையை விட்டு பிரிந்தே இருக்கும். நீண்ட காலம் சிவனை விட்டு பிரிந்து வாழ வேண்டிய கட்டாயம் வந்ததால், பார்வதி தேவி, குயில் வடிவத்தை தேர்ந்தெடுத்தாள், என்பர்.
தாலி பாக்கியம் தரும் இந்த விரதத்தை அனுஷ்டித்து, மங்கல வாழ்வு வாழுங்கள்.
தி. செல்லப்பா
