தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

3


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திறமையை நம்பினால் வாய்ப்புகள் உருவாகும்!

தனியார் நிறுவனம் ஒன்றில், பல ஆண்டுகளாக கணினி வடிவமைப்பு பணியில் இருந்தார், என் நண்பர். திடீரென நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததால், அவரை பணி நீக்கம் செய்தது, நிர்வாகம்.

முதலில் மிகவும் மன வேதனையில் இருந்தார். 45 வயதை கடந்ததால், புதிய வேலை கிடைப்பது கடினமாக இருக்கும் என, பயந்தார்.

வீட்டாரின் ஆலோசனையைக் கேட்டு, நிறுவனத்தில் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அவருடைய வீடு, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், வீட்டிலிருந்த கணினி மற்றும் இணைய வசதியைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தே சிறிய அளவில் வடிவமைப்பு வேலைகளை செய்ய துவங்கினார்.

அருகிலிருந்த கடைகள், சிறு தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு, விளம்பர வடிவமைப்பு, அழைப்பிதழ் தயாரிப்பு, 'விசிட்டிங் கார்டு' வடிவமைப்பு மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் போன்ற பணிகளை செய்து கொடுத்தார்.

அவரது வேலை தரமாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். தொழில் படிப்படியாக விரிவடைந்து, இரண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அளவுக்கு முன்னேறினார்.

ஒரு வேலை போய்விட்டால், வாழ்க்கையே முடிந்து விடாது; திறமையை நம்பினால், புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதற்கு, நண்பரின் அனுபவமே சாட்சி.

வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

கண்ணோட்டத்தைமாற்றிக் கொள்ளுங்களேன்!

இரு சக்கர வாகன, 'ஒர்க் ஷாப்' நடத்தி வரும் நண்பரிடம் வாகனப் பழுது சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, ஸ்கூட்டரில் பிரச்னை இருப்பதாக கூறி, அதை சரி செய்ய அங்கு வந்தார், வாடிக்கையாளர் ஒருவர் .

அவர், ஏற்கனவே மெக்கானிக் நண்பருக்கு பழக்கமானவர் என்பதை, அவரது பேச்சின் மூலம் அறிய முடிந்தது.

அவர் சாலையின் மறுபுறத்தை சுட்டிக்காட்டி, மெக்கானிக் நண்பரிடம், 'அங்கே போகும் பெண்ணை பாருங்க... இப்படி இளைஞர்களை துாண்டும் வகையில் அரைகுறை டிரஸ் போட்டுட்டுப் போனா, இளைஞர்கள் மனசுல சபலம் ஏற்படாதா? அவங்க எப்படி இருந்தாலும், கடைசியில் இளைஞர்கள் மீதுதான் குற்றம் சொல்வாங்க; என்ன உலகம் இது...' என, சலிப்புடன் கூறினார்.

இதைக் கேட்டதும், 'இதென்ன அந்தக் காலமா, தலை முதல் கால் வரை போர்வை போர்த்தி மூடிட்டு வர்றதுக்கு? பெண்கள், 'எவரெஸ்ட்' சிகரத்தையே தொட்டுவிட்ட அதிநவீன காலமய்யா, இது. ஆடைத் தேர்வு என்பது, அவரவர் விருப்பம். நீங்கள் ஏன், இதுபோன்ற காட்சிகளை எல்லாம் சிரத்தையுடன் பார்க்கிறீர்கள்? 'ஜஸ்ட் லைக் தட்'ன்னு போக வேண்டியது தானே!' என்று, மெக்கானிக் நண்பர் சொல்லியதும், வந்தவர் மவுனமாகி விட்டார்.

எதுவுமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்திலும், எடுத்துக்கொள்ளும் விதத்திலும் தான் இருக்கிறது என்பது உண்மை தானே!

- எம்.சுப்பையா, கோவை.

உதவும் கரங்கள்!

எங்கள் பகுதியில் வசிக்கும் நடுத்தர வயது பெண்மணி ஒருவர், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் தன் வீட்டு வாசலில் ஒரு பெரிய குடிநீர் பானையையும், சில நாற்காலிகளையும் போட்டு வைப்பார். அவர் எதற்காக இப்படி செய்கிறார் என்று, ஒருநாள் அவரிடம் கேட்டேன்.

அவர், 'நம்ம பகுதியில், கடும் வெயிலில் உணவை விநியோகம் செய்யும் இளைஞர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் களைப்பாக கடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் களைப்பை தணிக்க, தாகத்திற்கு தண்ணீரும், சிறிது நேரம் இளைப்பாற இடமும் கொடுப்பது, எனக்குப் பெரிய மனநிறைவைத் தருகிறது...' என்றார்.

அவர், யாரிடமும், நிதியோ, உதவியோ கோரவில்லை. தன் வீட்டிலிருந்த பழைய நாற்காலிகளை நிழலில் வைத்து, குளிர்ந்த பானை நீரையும், சில சமயம் தாகம் தணிக்கும் மோர் பானத்தையும் வைத்திருப்பார்.

இதைக் கவனித்த நான், அடுத்த வாரம் முதல் சில, 'பிஸ்கட்' பாக்கெட்டுகளை வாங்கி அங்கு வைத்தேன். பக்கத்து வீட்டுக்காரர், 'டேபிள்' மின்விசிறியை அங்கு பொருத்திக் கொடுத்தார். இப்போது அந்த சிறிய இடம், வெயிலில் உழைக்கும் பணியாளர்களுக்கு, அன்பு புகலிடமாக மாறிவிட்டது.

பெரிய அளவில் தான தர்மங்கள் செய்யத் தேவையில்லை; நம் அன்றாட வாழ்வில் சக மனிதர்களின் கஷ்டத்தைப் புரிந்து, நாம் செய்யும் சிறு உதவியும், இந்த உலகத்தை இன்னும் அன்பான இடமாக மாற்றும்.

ரேணுகா நாராயணன், மாம்பாக்கம் சென்னை.

இப்படியான முயற்சிகளை தொடங்கலாமே!

சமீபத்தில், என் நண்பர் ஆசிரியராகப் பணியாற்றும் பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்பள்ளியின் தலைமையாசிரியர் அறை முன், உள்ள தகவல் பலகையில், ஒரு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை கவனித்தேன்.

அந்தத் தகவல் பலகையில், 'இம்மாத முன்மாதிரி மாணவர்கள்!' என்ற தலைப்பில், படிப்பில் மட்டுமல்லாமல், ஒழுக்கம், உதவும் மனப்பான்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நற்பண்புகளில் முன்னிலை வகிக்கும் மாணவர்களின் புகைப்படங்களும், அவர்களின் செயல்பாடுகளின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளும் ஒட்டப்பட்டிருந்தன.

இதுபற்றி நண்பரிடம் கேட்டபோது, 'ஒவ்வொரு வகுப்பிலும், தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறுபவர்களை மட்டும் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் நல்ல பழக்கங்கள், சமூகப் பொறுப்பு, சுத்தம் பேணுதல், மரம் நடுதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது, இப்பள்ளி ஆசிரியர்களின் விருப்பம்.

'அப்போது தான், மற்ற மாணவர்களுக்கும் நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும் ஆர்வம் ஏற்படும். அதனாலேயே, எங்கள் எண்ணத்தை தலைமையாசிரியரிடம் பகிர்ந்து, அவரின் ஒத்துழைப்போடு, இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்...' என்றார்.

நல்ல செயல்களுக்கு ஊக்கம் அளிக்கும் இப்படியான முயற்சிகள், அனைத்துப் பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும். அதுதான், மாணவர்களை, நல்ல குடிமக்களாக உருவாக்க உதவும்.

எம்.முகுந்த், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us