
சிவனுக்கு, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தெரியும். விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றும் கோவிலும் தமிழகத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் கங்காதேவி கோவிலில், இந்த விழா நடக்கிறது.
சிவனை அவமதித்து, அவரது மாமனார் தட்சன், யாகம் நடத்தினார். இதனால், கோபத்துடன் இருந்த அவரது வெம்மையை, தலையில் இருந்த கங்காதேவியால் தாங்க முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி, அவள், மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார்.
மேலும், சிவனின் உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும், ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி, குளிரச் செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையில், சந்தவாசலில், குமார கம்பணன் என்ற சிற்றரசரின் மனைவி கங்காதேவிக்கு, கோவில் எழுப்பினார்.
ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள், கங்காதேவி. தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். அபிஷேக தீர்த்தத்தை பிரசாதமாக தருவர்.
சித்திரை முதல் நாள், பக்தர்களே, அம்பிகைக்கு பூஜை செய்யலாம். ஆடிப்பூரத்தன்று, சுமங்கலி ஹோமம் நடக்கும். அன்று, பக்தைகளுக்கு, ஒன்பது மங்கலப் பொருட்களை பிரசாதமாக தருவர். பங்குனி உத்திரத்தன்று, திருக்கல்யாணம் நடக்கும்.
உற்சவ அம்பிகைக்கு, தனி சன்னிதி உள்ளது. பவுர்ணமியன்று, கோபுரம் முன் எழுந்தருளுவாள், கங்காதேவி. இதற்கு முன், இங்கு, பெருமாள் கோவில் இருந்ததன் அடையாளமாக, கோவில் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம் உள்ளது. இதில், சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், 'துணி முடிதல்' என்ற வழிபாட்டைச் செய்கின்றனர்.
மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து, கோவிலில் கொடுத்து விடுவர். பிரார்த்தனை நிறைவேறியதும், மீண்டும் வந்து துணி முடிப்பை வாங்கி காணிக்கை செலுத்துவர். மாங்கல்ய பாக்கியத்திற்காக அம்பிகைக்கு தாலி அணிவிப்பர்.
கோவிலுக்குப் பின்புறம் ராஜகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து, திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார். இதற்கு, 'மிதிமலை' என்று பெயர். மலையில் சிவபாதம் உள்ளது.
திருக்கார்த்திகைக்கு மறுநாள், கைசிக - விஷ்ணு கார்த்திகையன்று, இந்த மலையில் தீபத் திருவிழா நடக்கும். இதை, விஷ்ணு தீபம் என்பர்.
திருவண்ணாமலை - வேலுார் ரோட்டில், 54 கி.மீ., துாரத்தில் சந்தவாசல் உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து, படவேடு செல்லும் வழியில், 1 கி.மீ., சென்றால், கோவிலை அடையலாம்.
தி. செல்லப்பா

