PUBLISHED ON : ஏப் 22, 2018

'நல்லதை நினை; நல்லதைப் பேசு...' என்று சொல்கின்றன, அனைத்து ஞான நுால்களும். இருப்பினும், முற்பிறவியின் கர்ம வினை காரணமாக, சிலருக்கு கெட்ட எண்ணங்களிலேயே அழுந்தி கிடக்கிறது, மனம்.
சேடக மன்னரின் மகள், சந்தனை; அழகும், நற்குணமும், தெய்வ சிந்தனையும் கொண்டவள்.
ஒருநாள், சந்தனையை துாக்கி போய் விட்டான், கந்தர்வன் ஒருவன். வழியில் என்ன நினைத்தானோ, அவளை காட்டில் போட்டு விட்டு போய் விட்டான்.
சிறிது நேரத்தில், அக்காட்டின் வழியாக வந்த வேடன் ஒருவன், சந்தனைக்கு ஆதரவாக பேசுவது போல பேசி, அவளை அழைத்து போய், கவுசாம்பி நகரத்தில், விருஷசேனன் எனும் வியாபாரியிடம் விற்று விட்டான்.
சந்தனையை வாங்கிய வியாபாரி மிகவும் நல்லவர்; அவளை, தன் மகளாகவே நினைத்து வளர்த்து வந்தார். ஆனால், அவர் மனைவி, சுப்பிரபையோ, இதை தவறாக நினைத்து, 'இவள் அழகாக இருக்கிறாள்; அதனால் தான், இவளை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்... எப்படியாவது இவளை வீட்டை விட்டு துரத்த வேண்டும்...' என்று எண்ணி, அவள் கால்களில் விலங்கு பூட்டி, பல்வேறு இன்னல்களை கொடுத்தாள். மண் கலயத்தில் வரகு சோறு தான் தருவாள். அணிவதற்கும் கறுப்பு நிற ஆடையை கொடுத்து வந்தாள். ஆனால், எதற்காகவும் வருந்தவில்லை, சந்தனை. அமைதியாக துன்பங்களைத் தாங்கிக் கொண்டாள்.
இந்நிலையில், கவுசாம்பி நகருக்கு வந்தார், மகான், வர்த்தமானர். அவர் வரவை அறிந்த சந்தனையின் உள்ளம், பக்தியில் விம்மியது. தான் விலங்கிடப்பட்டு இருந்ததையும் மறந்து, 'அந்த மகானை எப்படியாவது எதிர்கொண்டு அழைக்க வேண்டும்...' என, எண்ணினாள்.
அடுத்த வினாடி, அவளின் விலங்குகள் கழன்றன. கூந்தல் அழகு பெற்றது; கறுத்த ஆடை, 'பளீர்' என, உயர்ந்த பட்டாடையாக மாறியது; உடல் முழுதும் அணிகலன்கள், அவளை அழகு செய்தன; மண் கலயம் பொன் கலயமாக மாற, அதில் இருந்த வரகு சோறும், அரிசி சோறாக ஆனது.
உடனே, வீதிக்கு வந்தாள்; எதிரில் வந்த வர்த்தமானரை, ஆனந்த கண்ணீரோடு, முறைப்படி வணங்கி, கலயத்தில் இருந்த சோற்றை, அவருக்கு அளித்தாள். மனம் உவந்து ஏற்றார், வர்த்தமானர்.
சந்தனையின் பெருமையையும், அவள் யார் என்ற உண்மையையும் உணர்ந்து, ஊரே அவளை பாராட்டியது. பின், அங்கிருந்து, தன் ஊர் திரும்பி, உறவினர்களுடன் சேர்ந்தாள்.
நல்லதை நினைத்தால், என்றாவது ஒரு நாள், அது, கண்டிப்பாக பலித்து, நன்மைகள் பலவற்றையும் தரும். பிறருக்கு கெடுதல் நினைத்தால், அது, எண்ணியவரையே தாக்கி, பலவிதமான தீமைகளுக்கு வழி வகுக்கும்!
பி.என்.பரசுராமன்
அறிவோம் ஆன்மிகம்!
அம்மன் கோவிலில் மாவிளக்கு ஏற்றுவதன் தத்துவம் என்ன?
சூரிய பிரகாசம் போன்று, ஒளி மயமானவள் அம்மன் என்கின்றன, புராணங்கள். ஒளியை, ஒளியாலேயே வணங்குவது நம் மரபு. நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தரக்கூடிய அவளை, தினமும் மாவிளக்கு, எலுமிச்சை, அகல் என, எந்த வகையிலாவது தீபம் ஏற்றி வழிபடலாம்.
