PUBLISHED ON : ஆக 25, 2019

ஒரு காலத்தில், தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப்பெரிய, நீர் சமூகம் ஒன்று இருந்தது. பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரை, கால்வாய் வழியாக ஏரிகளுக்கு அனுப்பி வைப்பது, சாதாரண காரியமில்லை. அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை.
ஆற்றில் நீர் குறைவாக போகும்போது, அந்த நீரை முழுவதுமாக தடுத்து, தம் ஏரியை மட்டும் நிரப்பிக் கொள்வதில்லை. தமக்கு அடுத்தடுத்து இருக்கும் நீர் நிலைகளுக்கு ஆற்று நீரை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்த, நீர் சமூகத்தின் பிரிவினருக்கு, 'நீராணிக்கர்கள்' என்று பெயர். ஆற்றில் ஓடும் நீரை, ஏரிகளில் சேமித்து, விளை நிலங்களுக்கு சேர்க்கும் பொறுப்பு, இவர்களுடையது.
நீரை கொண்டு வந்து சேர்த்து, அதை கட்டி காப்பவருக்கு, 'நீர்க்கட்டியார்' என்று பெயர். ஏரியில் மீன் பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில், ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது என, ஏரிக்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும், நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்.
ஒரு ஏரியின் உயிர், அதன் கரையில் தான் இருக்கிறது. கரை உடைப்பெடுத்தால், தானும் அழிந்து, தன்னை நம்பி வாழும் மக்களையும் அழித்து விடும். அதனால் தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஏரிக்கரையை காப்பாற்றி, வலுவாக வைத்திருப்பவருக்கு, 'கரையார்' என்று பெயர். இவர்கள் தான், ஏரிக்கரைக்கு முழு பொறுப்பு.
என்ன தான் கரையை வலுபடுத்தினாலும், எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டே இருக்கும். ஒரு ஏரியை உடைத்தால், சுலபமாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்.
'ஏரிகளை உடைப்பது, மிகப்பெரிய பாவம்...' என்று, சங்க கால பாடல்கள் கூறினாலும், இதை மதிக்காத ஒன்றிரண்டு அரசர்கள், எல்லா காலத்திலும் இருந்திருக்கின்றனர். நேர்மையான முறையில் போரிட்டு வெல்ல முடியாத எதிரிகள், நீர்நிலைகளை அழித்தொழித்தனர்.
அப்படி, ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டோரை, 'குளத்து காப்பாளர்கள்' என்றழைத்தனர். இவர்கள், ஏரிக்குள் அத்துமீறுபவர்களை விரட்டியடிப்பர்.
நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்டது, ஒரு ஏரி. இதில், ஆடு, மாடுகள் விழுந்து இறப்பதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் உண்டு. அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்தவும், ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசி போன்றவற்றை அழித்து, ஏரியை துாய்மைப்படுத்தவும் ஏற்படுத்தபட்டோர், 'குளத்து பள்ளர்கள்!'
இவர்கள் தான், ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு. ஏரியிலிருந்து திறந்து விடும் நீரை, வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை சேர்க்கும் பொறுப்பு, 'நீர் வெட்டியார்' அல்லது 'நீர்பாய்ச்சி' என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பர்.
பாசனத்திற்காகவும், வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக, ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி மற்றும் துாம்பு போன்ற அமைப்புகள் இருந்தன. மடைகளை திறந்து மூடுவதற்கு, ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்களுக்கு, 'மடையர்கள்' என்று பெயர்.
உலகம் முழுவதும், ஏரிகளை அமைக்கும்போது, முதலில், களி மண்ணால் ஆன உட்புற சுவர் ஒன்றை அமைப்பர். இது தான், ஏரி நீரை கசிய விடாமல் தடுக்கும், என்று எண்ணினர். இந்த சுவரை அமைத்த பின், அதன் மீது மற்ற மண்ணை இரண்டு பக்கமும் சேர்த்து கரையை மேலும் வலுவாக்குவர்.
களி மண் சுவர் இல்லாமல் ஏரிக்கரைகளை அமைக்க முடியாது என்பது, மேலை நாட்டினரின் கணிப்பு.
ஆனால், தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் பலவற்றில், களி மண் பயன்படுத்தப் படவில்லை. அருகில் கிடைக்கும் மண்ணை கொண்டே, மண்ணோடு மண்ணை இறுக்கும் பசை போன்ற ஒன்றை பயன்படுத்தி, ஏரிக்கரை சுவர்களை அமைத்துள்ளனர். அதில் ஒரு சொட்டு நீர் கூட கசிவதில்லை.
சமீபத்தில், வீராணம் ஏரியில், புதிதாக ஒரு மதகை அமைக்க, ஏரியின் கரையை கொஞ்சம் உடைக்க வேண்டி இருந்தது. பாறை போன்று இறுகி இருந்ததை, இன்றைய நவீன இயந்திரங்களை வைத்தும், கரையை உடைக்க முடியவில்லை.
இன்னுமொரு வியக்க வைக்கும் தொழில்நுட்பமும், நம்மிடம் இருந்தது. அது, ஏரியின் தரை பகுதியில் சேரும் சகதி. ஏரிக்கு வெறும் நீர் மட்டுமே வருவதில்லை; கூடவே வண்டல் மண், சேறு, சகதியையும் சேர்த்தே அடித்து வரும். இவை அதிகம் சேர்ந்தால், ஏரி துார்ந்து விடும்; மதகுகள் அடைத்துக் கொள்ளும். அதனால், இவற்றை ஏரியில் சேர விடக்கூடாது என்பதில், மிக கவனமாக இருந்தனர்.
வண்டல் மண்ணையும், சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற, ஏரியின் தரை தளத்தில் மதகுகளில் இருந்து, 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக, 'குமிழி' என்ற தொழில்நுட்பத்தை அமைத்திருந்தனர். மதகுக்கு ஒன்று என்ற அடிப்படையில், குமிழி இருக்கும். இந்த குமிழி, பெரிய தொட்டி போன்ற அமைப்பில் இயங்கும்.
பெரிய நகரங்களில், சாலைகளை கடக்க, நாம் சுரங்கப்பாதையை பயன்படுத்துவது போல், இதன் நுழைவு வாயில் ஏரிக்குள்ளும், வெளி வாயில் ஏரிக்கு வெளியே பாசன கால்வாயிலும் இருக்கும். ஏரியில் அதிகமான வண்டலும், சகதியும் சேரும்போது, இந்த குமிழியை திறந்து விடுவர்.
சேறோடித்துளை மூலம், தரையில் இருக்கும் வண்டல் மண்ணையும், சேற்றையும் இந்த முறையில் சுத்தமாக வெளியேற்ற முடியும். அது வெளியேறி, ஏரிக்கு வெளியே உள்ள பாசன கால்வாயில் சேர்ந்து விடும். வண்டல் மண், பயிர்களுக்கு நல்ல உரம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு.
இவ்வாறு, ஏரியில் சகதி சேருவது வெளியேற்றப்பட்டது. இது, தமிழர்கள் பயன்படுத்திய அற்புதமான துார் வாரும் தொழில்நுட்பம். ஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்கள், அதன் அருமை தெரியாமல், குமிழி தேவையற்றது என்று, நிறைய ஏரிகளில் இருந்து அதை நீக்கி விட்டனர்.
— தொடரும்.
தொகுப்பு : சி.பி. செந்தில்குமார்
