PUBLISHED ON : ஜூலை 02, 2023

இந்தியாவை தாயகமாக கொண்டது, பலா மரம். இம்மரத்தில், 18 - 25 வகைகள் உள்ளன. ஆனால், உலகநாடுகளில், 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு, சராசரி 20 லட்சம் டன் பலாப்பழம் விளைகிறது.
பெரிய பலா மரத்திலிருந்து கிடைக்கும் பலாப் பழத்தில் தான் அதிக சதைப்பற்றும், நார்ச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்திருக்கும். 100 கிராம் பலாப்பழத்தில், 96 கலோரிகள் கிடைக்கிறது. பலாப்பழத்தில் கொழுப்பு - 1 சதவீதம், புரோட்டீன் - 2 சதவீதம், கார்போஹைட்ரேட் - 23 சதவீதம், நீர்ச்சத்து - 74 சதவீதம் உள்ளது.
புற்றுநோயை எதிர்க்கக் கூடிய, 'ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள், பிளாவானாய்டு, பைட்டோ நியூட்ரினோக்கள்' பலாப்பழத்தில் அதிகம் உள்ளன. மூல நோய் தாக்குதலுக்கு அருமருந்தாகவும், குடல் புற்று நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில், சுக்ரோஸ் மட்டுமே உள்ளது. எனவே, இதை சாப்பிடுகிறவர்களுக்கு, சர்க்கரை உடனே உடலில் சேராது. அதேவேளையில், நாம் உட்கொள்ளும் உணவுகளிலுள்ள மாவுச்சத்தையும், உடலில் சேர்வதை தடுக்கும். இதனால், உடல் எடையை குறைக்க விரும்புவோர், பலாப்பழத்தை சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் அளவாக சாப்பிடலாம்.
வைட்டமின், 'ஏ' செறிந்துள்ள பலாப்பழம், மூளைக்கு வலுவளிக்கக் கூடியது. பலாப்பழத்துடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட, மூளையும், இதயமும் வலுவடையும். நரம்புகள் ஊட்டம் பெறும், குடல் பலம் பெறும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பலாச்சுளைகளை மென்று தின்றால், பற்களுக்கு நல்லது. பல் சம்பந்தமான நோய்களை போக்கும். தொற்று நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்க திறனும் உண்டு. காரணம், அதிலுள்ள வைட்டமின், 'சி' ரத்த விருத்தி செய்யக் கூடியது. பலாப்பழத்தில், கால்சியம் சத்து அதிகம். இதனால், எலும்புகள் வலுப்பெறும், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்னைகள் சரியாகும்.
தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இயங்க உதவும், காப்பர் சத்து பலாப்பழத்தில் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்னைகள் சரியாகும். ரத்த அழுத்தத்தை சரியாக்கும் பொட்டாசியம், இதயத்துடிப்பை சீராக்கும் வைட்டமின், 'பி6' மற்றும் மலச்சிக்கலை சரியாக்கும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
பலாப்பழத்தில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து என, இரண்டுமே உள்ளது. கரையும் நார்ச்சத்து ஆற்றலையும், கரையாத நார்ச்சத்து குடல் இயக்கத்தையும் எளிதாக்குகிறது.
பழுத்த, 10 பலா மர இலையை வெந்நீரில் போட்டு, நன்கு கொதிக்க வைத்து இளம் சூட்டில் குளிக்க, உடல் வலி குறையும். பலா மர இலை மட்டுமல்ல, அதன் பட்டை, வேர், கொட்டை என, அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது தான்.
பலா கொட்டை அதிகளவு இரும்புச்சத்து கொண்டது. ரத்தசோகையை தவிர்க்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
அதேசமயம், ஒரு நாளைக்கு, ஐந்து பலாச்சுளைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது. பலாபழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.
கர்ப்பிணி பெண்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வி.ராஜப்பா
