/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து! - மரவள்ளி கிழங்கு!
/
நம்மிடமே இருக்கு மருந்து! - மரவள்ளி கிழங்கு!
PUBLISHED ON : டிச 30, 2018

மலையாளிகள் தினமும், கப்பங்கிழங்கு எனப்படும், மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா உங்களுக்கு?
மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு நன்மைகளை கொடுக்கும் ஒரு உணவுப் பொருள்.
பல உணவு தயாரிப்புகளில், உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, மரவள்ளிக் கிழங்கின் மாவு. மரவள்ளிக் கிழங்கை பறித்தவுடன், இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திட வேண்டும். இல்லையேல், அது அழுகி விடும்.
* மரவள்ளிக் கிழங்கின் தோல், பல்வேறு சரும பிரச்னைகளுக்கு அருமையான தீர்வாகிறது. இதன் தோலை சீவி, கூழாக்கி, அதை, உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் பூசவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவுவதால், அதிகபட்ச பலனை அடையலாம்
முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை வெளியேற்றுவதுடன், துளைகளை மூடுகிறது. இதனால், சருமம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவு உண்டாகிறது
* வளி மண்டல நிலையாலும், நாம் எடுத்துக் கொள்ளும் குறைந்த அளவு ஊட்டச்சத்துகளாலும், தலை முடி உதிர்ந்து, இளம் வயதிலேயே வழுக்கை உண்டாகிறது. இதை போக்க, ஒரு எளிமையான வழி உள்ளது. மரவள்ளிக் கிழங்கை கூழாக்கி, தலையில் பூசி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விட்டு அலசவும். வாரத்திற்கு, இரண்டு முறை செய்யவும். முடி, முன்பை விட அடர்த்தியாக வளரும்
* எடை குறைப்பிற்கு மிகவும் தேவையான நார்ச்சத்து, இதில் அதிகமாக உள்ளது. தினமும் உங்கள் உணவில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொள்வதால், உடல் எடையை குறைக்கலாம்
மேலும், கிழங்கிலுள்ள நார்ச்சத்து, குடலில் இருந்து வெளிப்படும் எல்லா நச்சுகளையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது; அழற்சியைக் குறைக்கிறது. இதனால், உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், இரைப்பை பிரச்னைகளில் இருந்தும் காக்கிறது
* ஒற்றை தலைவலி மற்றும் சாதாரண தலைவலி, மனிதனை பல நேரங்களில் வதைக்கும். இந்த பிரச்னைக்கு தீர்வாக, மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் இலைகள் பயன்படுகின்றன. இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது கழுவி, அரைத்து சாறு எடுத்தும் பருகலாம்
தினமும், இரு வேளை மரவள்ளிக் கிழங்கு சாறு பருகுவதால், வருங்காலத்தில் தலைவலி வராமல் தடுக்கும்
* மரவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், உடலுக்கு தினசரி தேவையான, 'வைட்டமின்' மற்றும் 'மினரல்கள்' கிடைக்கின்றன. இதில், கண் பார்வை மேம்பட, தேவையான ஊட்டச்சத்து வைட்டமின், 'ஏ' அதிகமாக உள்ளது
* காய்ச்சலின் போது, மரவள்ளிக் கிழங்கின் இலைகளை கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்து பருகினால், காய்ச்சல் கட்டுப்படும்
* கற்றாழை இலைகளைப் போல், காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது, இதன் இலைகள். மரவள்ளிக் கிழங்கு இலையில் உள்ள பசையை பிழிந்து எடுத்து, காயங்கள் மேல் பூசுவதால், நிவாரணம் கிடைக்கும்
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான, ஊட்டச்சத்துகள் இதில் அதிகமாக உள்ளன. மரவள்ளி கிழங்கின் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
இப்போது புரிகிறதா... மலையாளிகள் ஏன் மரவள்ளிக் கிழங்கை தினமும் சாப்பிடுகின்றனர் என்று!
நாமும் சாப்பிட்டு, பயன் பெறுவோம்!
— பொ.பாலாஜி கணேஷ்

