PUBLISHED ON : நவ 07, 2010

நாட்டில், பல இடங்களில் புண்ணிய காரியங்களும் நடைபெறுகின்றன; பாவ காரியங்களும் நடைபெறுகின்றன. இவை இரண்டும் இருக்கத்தான் செய்கின்றன. கோவில், குளம் ஏற்படுத்தி, வழிபாடு செய்கின்றனர். இதெல்லாம் புண்ணியத்தை அளிப்பவை. அதேபோல், பாவத்தை சேர்க்கும் காரியங்களும் நடைபெறுகின்றன. பிறர் பொருளை அபகரிப்பது, துரோகம் செய்வது, ஜீவன்களைக் கொல்வது போன்றவை பாவ காரியங்கள்.
இவைகளெல்லாமே அவரவர் மனதைப் பொறுத்தது மட்டுமல்ல; பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் தான் காரணம். புண்ணியத்துக்கும் பல வழிகள் உண்டு... பாவத்துக்கும் பல வழிகள் உண்டு. தெரிந்தோ, தெரியா மலோ இவைகளில் எதைச் செய்தாலும், அதற்கான பலன் உண்டு. வீடுகளில் துளசி வளர்ப்பது புண்ணியமானது. சாளக்கிராமத்துக்கு, துவாதசி, பவுர்ணமி தினங்களில் பால், நெய், பஞ்சாமிருதம், கருப்பஞ்சாறு, சந்தன ஜலம் இவைகளால் அபிஷேகம் செய்வது புண்ணியம். சகல பாவங்களும் அகன்று, வைகுந்த வாசம் கிடைக்கும்.
கிருஷ்ணபட்ச சதுர்த்தி, அஷ்டமி, சோமவாரம் ஆகிய தினங்களில் நல்லெண்ணெய், இளநீர், தேன், பழரசம், பால் இவைகளால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் கைலாச வாசம் கிடைப்பதுடன், வாழும் காலத்தில் செல்வச் செழிப்புடன் இருக்கலாம்; ஏழ்மையே இராது.
பகவானின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால், கங்கா ஸ்நான பலன் கிடைக்கும்; சகல பாவங்களும் விலகி, குலம் விருத்தியாகும். தனக்குப் பிரியமான பொருளை பகவானுக்கு நிவேதனம் செய்பவனும், தானம் செய்பவனும் இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி பெறுவர்.
அதிதிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வசதி செய்து கொடுப்பவன், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்த பலனை அடைவான். கோ தானம் செய்வது மிகவும் புண்ணியமானது. பசுவையும், கன்றையும் வைத்துப் பராமரிப்பவருக்குத் தான், தானம் செய்ய வேண்டும். அதிலும், நன்றாக கறக்கக் கூடிய பசுவை, கன்றுடன் தானம் செய்ய வேண்டும்.
பசுவுக்கு ஒரு கை புல் கொடுப்பதும் புண்ணியம்தான்; பகவானின் சன்னிதியில் அகண்ட தீபம் ஏற்றுவதும் புண்ணியம் தான். கோவிலுக்குச் சென்றால், எந்தெந்த சன்னிதிகளில், எத்தனை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூட கணக்கு உள்ளது.
இப்படி புண்ணியத்துக்குப் பல வழிகள் உள்ளன. அவைகளை சிரத்தையுடன் செய்வது தனக்கும், குடும்பத்துக்கும் நல்லது. ***
ஆன்மிக வினா-விடை!
அனைத்து கோவில்களிலும், சுவாமிக்கு முன்பாக கொடி மரத்தின் அருகில் பிலிபீடம் இருக்கிறதே... இது எதற்காக?
மாயையான உலகிலிருந்து விடுபட்டு, கோவிலுக்குள் செல்லும் நம்மை, பாவம், பிணி, பீடை மற்றும் துர்சக்திகள் தொற்றியிருக்கும். பலி பீடத்தின் அருகே செல்லும் போது, அவற்றை பலி பீடம் ஏற்று, நம்மை முழுவதுமாக தூய்மைப்படுத்தி, இறைவனை வழிபட செய்கின்றன. எனவே, கோவிலுக்குள் செல்லும் போது, முதலில் பலிபீடத்தை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். ***
