PUBLISHED ON : ஜன 21, 2018

வெளிநாடுகளில், சில நுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்களைக் கூட, உலக அதிசயமாக போற்றுகின்றனர். ஆனால், கலைநயமும், அதிசயங்களும் நிறைந்த, நம் ஊர் கட்டடங்களோ உலகின் வெளிச்சத்துக்கு வராமலே உள்ளன.
கல்லுக்குள் ஏழு ஸ்வரங்களை வைத்தவர்கள், நம் முன்னோர். இந்த அதிசயம், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் தான் உள்ளது. இங்குள்ள கல் துாணை தட்டினால், 'சரிகமபதநி' என்ற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும்.
அதேபோன்று, திருப்பூரில் உள்ள, குண்டடம் வடுகநாத பைரவர் கோவிலிலோ, கர்ப்பப் பையில் இருக்கும் குழந்தை, எந்த எந்த மாதங்களில் எந்த பொசிஷனில் இருக்கும் என்பதை, பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்துள்ளனர்.
இன்றும் நிறைய கோவில்களில், குறிப்பிட்ட நாளில், சூரிய ஒளி, மாலை போல் சிவலிங்கத்தின் மீது விழும். அந்த அளவு, வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து கோவில்களை கட்டியுள்ளனர். இன்னும் சில கோவில்களிலோ, தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும்.
வடசென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில், மூன்று வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம், ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானவை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப, கட்டட வேலைப்பாடுகளில் உள்ள அதிசயங்கள் வார்த்தைக்கு அப்பாற்பட்டவை.
ஓசோன் படலம் பற்றி, 20ம் நுாற்றாண்டில் தான் அதிக அளவில் பேசப்பட்டது. ஆனால், 700 ஆண்டுக்கு முன்பே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை, நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ஆகிய அனைத்தும் வைக்கப்பட்டு உள்ளன.
பழைய கோவில்களில், யாளி எனும் சிலையின் வாயில் ஓர் உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம்; ஆனால், ஆயிரம் மல்யுத்த வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும், அதன் வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் எனும் ஊரில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில், கிணற்றுக்கு அருகில், ஒரு சிங்கத்தின் சிற்பம் உள்ளது. சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் வழி, கீழே இறங்கினால், கிணற்றில் குளிக்கலாம். ஆனால், மேலேயிருந்து பார்த்தால், நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட
கிணறு அது!
அதுபோல், அக்கோவிலில் உள்ள கருவறையிலுள்ள சுவர்களில் மரகத கற்கள் பதித்துள்ளனர். அதனால், வெளியில் வெயில் அடித்தால் உள்ளே குளிரும். மழை பெய்தால், கதகதப்பாக இருக்கும். மேலும், கோவில் மேற்கூரையில், ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில், ஆயுதங்களும், படை வீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார், மன்னர், ராஜேந்திர சோழன்!
முன்னோர்களின் திறமையையும், கலைநயத்தையும் போற்றி தலை வணங்குவோம்!
- பாலாஜி கணேஷ்.
