PUBLISHED ON : ஏப் 23, 2023

ரொம்ப நாள் சந்தோஷமா வாழணும்ன்னு ஆசைப்பட்டான், ஒரு அரசன். அதுக்கு என்ன வழின்னு எல்லாரையும் கேட்டான்.
'அகந்தை இல்லாதவன், நீடுழி வாழ்வான்...' என, சொன்னார், ஒரு ஞானி. உடனே, அப்படியே வாழணும்ங்கற முடிவுக்கு வந்த அரசன், யோசிச்சு பார்த்தான்.
பணம், படாடோபம் இது ரெண்டும் அதிகரிக்கிற போது தான் அகந்தை அதிகரிக்குது. அதனால, அகந்தை இல்லாம இருக்கணும்ன்னா, எளிமையா வாழணும்ன்னு தீர்மானம் பண்ணினான்.
உடனே, ஆடம்பரமான உடைகளையெல்லாம் விட்டுட்டு, எளிய உடைகளை அணிந்து, 'இனிமே, யாரும் என்னை பார்த்து வணங்கக் கூடாது' என, உத்தரவு போட்டான். அதுமட்டுமல்ல, அரண்மனையை விட்டு வெளியேறி, ஒரு குடிசையில் தங்கினான்.
சிறிது காலத்துக்குப் பின், 'ஆகா, என்னை மாதிரி எளிமையா வாழறவங்க, இந்த உலகத்துல யாருமே கிடையாது...' என்ற நினைப்பு வந்தது. அந்த நினைப்பே ஒரு அகந்தையா அவனுக்குள்ளே உள்ளதை அப்புறம் தான் புரிஞ்சுக்கிட்டான்.
இதைப் பற்றி தனக்கு முன்பு அறிவுறுத்திய ஞானியிடம் சொன்னான்.
அதற்கு, 'இதோ பார் மன்னா, நீ அரசனை போல உடை உடுத்திக்க. அரசனைப் போல வாழு. அரசன்கிற மரியாதையை மக்கள் உனக்கு கொடுக்கட்டும். ஆனா, உன் மனசுக்குள்ள நீ எளிமையா இரு...' என, சொல்லிட்டு போயிட்டார்.
அதுக்கப்புறம் தான், எளிமைன்னா என்னங்கறதை புரிஞ்சுக்கிட்டான், அரசன்.
இதுபோல தான், சிலர் தினமும் கோவிலுக்கு போவர். சன்னிதி சன்னிதியா நின்று, பக்தி ரசம் ததும்ப கடவுள் நாமங்களை சொல்லி, பக்தி பழமா காட்சியளிப்பர். ஆனால், மனதிற்குள், 'என்னை போன்ற பக்திமான்கள் யாருமிருக்க முடியாது...' என்ற நினைப்பு ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இதுவா துாய்மையான பக்தி! மனதை ஒருநிலைப்படுத்தி, கடவுளை மனதார வணங்கினாலே, அவன் அருள் பூரணமாக கிடைக்கும் என்பதுதான், இக்கதையின் நீதி.
பி.என்.பி.,
ஆன்மிக தகவல்கள்!
திங்கட்கிழமை அமாவாசை வந்தால், அன்று அரச மர பிரதட்சணம் செய்தால் மிகவும் விசேஷம்.
