தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் எது?

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் எது?

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் எது?


PUBLISHED ON : டிச 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எனக்கு மட்டும் தான், இப்படி நிகழ்கிறது; நான் தொட்டது எதுவுமே, துலங்குவது இல்ல; பட்ட காலிலேயே படுது... அடிமேல் அடி, எழுந்திருக்கவே முடிவதில்லை; இறைவன், என்னை மட்டும் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ தெரியலை...' என்பன போன்ற புலம்பல்களை, கடந்து வராத மனிதர்கள், மிகக் குறைவு.

'எல்லாம் நல்லபடியாகவே நடக்க வேண்டும்; ஒரு துன்பமும் வரக்கூடாது; எவ்வித சோதனையும் நடக்க கூடாது...' என்கிற வேண்டுதல்கள், ஒருபோதும், இறைவனால் கூட, 'சாங்ஷன்' செய்யப்படுவது இல்லை.

இப்படி புலம்புவோரை, 'மிக பெரிய பலவீனர்கள்...' என்று, சுலபத்தில் அவர்கள் மீது முத்திரை குத்தி விடலாம். சில கால கட்டங்களில், துன்பங்கள் ஏனோ ஒன்றிரண்டிற்கு மேற்பட்டோ, அணி அணியாகவோ திரண்டு வருகின்றன.

கல், முள் என்றால், காலணி அணிவதற்கும், மழை என்றால், குடை பிடிக்கவும் தெரிந்த நமக்கு, துன்பம் என்றால், ஏனோ, மனதை உறுதியாக்க வேண்டிய காலக்கட்டம் இது என்கிற உண்மை, தெரிவது இல்லை.

மனிதர்கள் ஏனோ துன்பங்களை கணக்கில் எடுத்து கொள்கிற அளவிற்கு, மகிழ்ச்சியை, கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்...' என்பான் பாரதி. இதை உணராத காரணத்தாலேயே, நமக்கு இன்பங்கள் கூட, மகிழ்ச்சியை தர மறுக்கின்றன.

'பல்லாயிரம் ரூபாய் மருத்துவ செலவு வந்து விட்டதே...' என்று கவலைப்பட தெரிந்தவர்களுக்கு, 'இதை சமாளிக்க, 20 ஆயிரம் ரூபாய் கைவசம் உள்ளதே...' என்றோ, 'அதை சமாளிக்கும் திறன், நம்மிடம் உள்ளதே...' என்று ஆறுதல் படவோ, மகிழ்ச்சி கொள்ளவோ தெரிவது இல்லை.

அன்றாட நிகழ்வுகளில், மகிழ்ச்சியை ஒரு தட்டிலும், துன்பங்களை மறுதட்டிலும் வையுங்கள். பெரும்பாலான நாட்கள், மகிழ்ச்சி தட்டே அழுந்தியிருக்க காண்பீர்கள். வரமாக வரும் வாரங்களின் நடுவே, சாபங்களும் இடையிடையே வர தான் செய்யும். இவற்றை மட்டுமே, நாம் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதால் தான், வாழ்க்கை, துன்பமயமானது போல் தெரிகிறது.

ஒரு நீண்ட பிரசவ வலியை, ஒரு தாய், தன் குழந்தையின் முகத்தை கண்டதும், மறக்க தெரிந்து வைத்திருக்கிறாள்.

நமக்கு வரும் துன்பங்கள், கவலைகள் நம்மை தாக்கிய விதத்தை மட்டுமே, நம் மனதில் இருந்திக் கொள்கிறோம். வெள்ளத்தை தரும் மழை, நிலத்தடி நீரை உயர்த்தி விடுவதை போல், நம்மை தாக்கிய துன்பங்கள், நம்மை, நன்கு பக்குவப்படுத்தி, உரமேற்றி போயிருக்கின்றன என்பதை, ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனக்கு, அக்கல்லூரியில் பணிபுரிவதால், ஏற்படும் சிரமங்களை பட்டியலிட்டு, 'வீட்டு தொல்லை தாங்க முடியவில்லை என்று வந்தால், இங்கும் அப்படி என்றால், எப்படி வேலை செய்வது...' என்று, அக்கல்லூரி வேந்தரிடம் கேட்கப் போனார்.

'ஒரு வாரத்திற்குள், நான் இத்தனை கோடி வங்கியில் கட்ட வேண்டும்; இல்லாவிட்டால், என் மானமே போய்விடும். மத்திய கல்வி துறை வேறு அது இல்லை, இது தவறு என்று, அனுமதி பெற கேட்ட, 'கோர்சு'களை ரத்து செய்ய போகிறதாம். விழி பிதுங்குகிறது எனக்கு...' என்று, அக்கல்வி வேந்தர் சொன்ன போது, 'அட... நம்ம நிலைமை, எவ்வளவோ பரவாயில்லையே...' என்று வெளியேறினாராம்.

மகிழ்ச்சி என்பது, எவர் ஒருவருக்கும், குத்தகையாக தரப்படவில்லை. 'அவன் பாரு, எவ்வளவு சந்தோஷமா இருக்கான்...' என்று, நாம் எண்ணும் பலரும், உள்ளுக்குள் குமைவது, பலருக்கு தெரிய வாய்ப்பே இல்லை; அவர்கள் வெளியில் சொல்வது இல்லை; அவ்வளவே!

ஒப்பீடு செய்தே, தங்களது மகிழ்ச்சியை தொலைக்கிறவர்களை, எந்த ரகத்தில் சேர்க்கச் சொல்கிறீர்கள்?

மகிழ்ச்சியை, கணக்கில் கொள்ள, ஒரு புது வழி சொல்ல விருப்பம்.

அன்றாடம், உங்களை மகிழ்வித்த விஷயங்களுள், நான்கை மட்டும், நாட்குறிப்பேட்டில் எழுதி வாருங்கள்; மறந்தும், வேதனைப்பட வைத்த விஷயத்தை, குறிக்க வேண்டாம். இப்படி பதிக்க ஆரம்பித்தால், எவ்வளவு மகிழ்ச்சிகள், நம்மை சுற்றி, சூழ்ந்து வலம் வருகின்றன என்பது தெரிய வரும்.

இப்படி திரட்டிய மகிழ்ச்சிக் கடலில், கவலைகளை மூழ்கடித்துக் கொள்ளுங்கள்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us