PUBLISHED ON : ஜூன் 26, 2016

வட சுடுற பாட்டி கூட இப்போ, 'வாட்ஸ் - ஆப்'பில் இணைந்துள்ளார். அந்த அளவுக்கு, கோடீஸ்வரன் முதல் சாமானியர்கள் வரை, வாழ்வில், ஒரு அங்கமாக மாறி வருகிறது, 'வாட்ஸ் -ஆப்!'
* இந்நிறுவனம், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்திற்காக இதுவரை ஒரு பைசா கூட செலவழித்ததில்லை.
* 'வாட்ஸ் -ஆப்' கம்பெனியில் வேலை செய்வோர் மொத்தம், 55 பேர் மட்டுமே!
* யாஹூ கம்பெனியில் பணியாற்றிய, பிரைன் ஆக்டன் மற்றும் ஜான் கூம் ஆகிய இருவரும், 2009ல் இக்கம்பெனியை உருவாக்கினர். இதில், பிரைன் ஆக்டன் வேலைதேடி, 'பேஸ்புக்' மற்றும் 'டுவிட்டர்' நிறுவனத்திற்கு சென்றபோது, அந்நிறுவனங்களால், நிராகரிக்கப்பட்டவர்.
* 'வாட்ஸ் - ஆப்' கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரே, 90 லட்சம் கணக்குகளை கையாளுகிறார்.
* தினமும், 19 பில்லியன் (1 பில்லியன் - 100 கோடி) 'மெசேஜ்' அனுப்பப்படுகிறது. 34 பில்லியன், 'மெசேஜ்' பெறப்படுகிறது. மேலும், 600 மில்லியன் (1 மில்லியன் - 10 லட்சம்) புகைப்படம் மற்றும் 100 மில்லியன் வீடியோ காட்சிகள், 'ஷேர்' செய்யப்படுகிறது.
* அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட அப்ளிகேஷனில், 'வாட்ஸ் - ஆப்' ஐந்தாவது இடம் பெற்றுள்ளது.
* 'பேஸ்புக்' நிறுவனம், 'வாட்ஸ் - ஆப்'பை, 19 பில்லியன் டாலர் (1 டாலர் - 67 ரூபாய்) கொடுத்து வாங்கியுள்ளது.
* தினமும், 10 லட்சம் பேர், 'வாட்ஸ் - ஆப்'பில் இணைகின்றனர்.
* 70 சதவீதம் பேர் தினமும், 'வாட்ஸ் - ஆப்'பை பயன்படுத்துகின்றனர். தன்னை வேலைக்கு எடுக்காத நிறுவனத்திற்கு, தன் நிறுவனத்தை, 19 பில்லியன் டாலருக்கு விற்றார், பிரைன் ஆக்டன்.
— ஜோல்னாபையன்

