தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அவரவருக்கென்று ஒர் இதயம்!

அவரவருக்கென்று ஒர் இதயம்!

அவரவருக்கென்று ஒர் இதயம்!


PUBLISHED ON : ஜூன் 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதிரே, பரந்து, விரிந்த கடலில், காலை சூரியனின் தங்கக் கதிர்கள், மெல்ல மெல்ல தவழ்ந்து வரும் அலைகளுடன் உறவாடி ஒளிர்வது, அற்புதமாக இருந்தது.

பாங்காக்கிலிருந்து, 'ட்ராங்' என்ற இடத்திற்கு, ஒரு மணி நேரம் விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக ஒரு மணி நேரம் பயணித்தால், படகுத் துறை வரும். அங்கிருந்து கடலில் படகு மூலம் பயணம் செய்தால், நான், இப்போது தங்கி இருக்கும், 'கோ கிரேடன்' என்ற இடத்தில் உள்ள சுற்றுலா பயணியர் இல்லத்தை அடையலாம்.

தாய்லாந்தின் சாலைகள் எல்லாம் பசுமை மயமாக காணப்பட்டன. நான் தங்கியுள்ள இடம், கிட்டத்தட்ட ஒரு வனம். ஆனால், நவீன வசதிகளுடன் உள்ள வாசஸ்தலம்.

இதுவரை நான் தங்கியிருக்கும் இடத்தைப் பற்றி சொல்லி விட்டேன் இனி, என்னைப் பற்றி...

என் பெயர்... வேண்டாம் எதற்கு என் பெயர்... வேண்டுமானால் சிநேகன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நான், பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் நிர்வாகி. இந்தியாவில், சென்னையில் தான் எனக்கு வேலை. 50 வயதான நான், இதுவரை என் வாழ்நாளில் வெற்றி, மகிழ்ச்சி என்பதைத் தவிர, வேறு எதையுமே காணாத, அதிர்ஷ்டப் பிறவி. என் முகராசியோ, ஜாதகமோ, ஏதோவொன்று, நான் தொட்டவை எல்லாம் வெற்றி பெற்றன.

அப்படிப்பட்ட நான், ஏன் தனியாக இந்தத் தீவில் வந்து கடலை வெறித்தபடி அமர்ந்துள்ளேன் என நீங்கள் நினைக்கலாம். அதற்கு காரணம் உண்டு. வாழ்வில் முதன் முறையாக இப்போது நான் சந்தித்து வரும் தோல்விகள்!

வெற்றியை மட்டுமே சந்தித்து வந்ததில், என் மனதில் மகிழ்ச்சியும், ஆணவமும் எந்த அளவு தோன்றியதோ, அதே அளவு, இப்போது, வேலையிலும், குடும்பத்திலும் சில சம்பவங்கள் ஏற்பட்டு, என்னை நிலைகுலைய வைத்து விட்டன.

தொழில் முறையில், அதிகம் பரிச்சயமில்லாத வெளிநாடுகளில், எங்கள் முயற்சி படுதோல்வியில் முடிந்தது.

குடும்பத்தில், கல்லூரியில் படிக்கும் என் மகன் போதை மருந்துக்கு அடிமையாகி, கல்லூரியில் கலாட்டா செய்ததில், கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டான்.

தனியார் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்த என் மகள், எங்கள் விருப்பத்துக்கு மாறாக, வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவனை, எங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து, வெளிநாடு போய் விட்டாள்.

இந்த அதிர்ச்சி தாங்காமல், மனச் சிதைவுக்கு உள்ளாகி, சோகத்தில் ஆழ்ந்து போனாள், என் மனைவி.

இவையெல்லாம் கடந்து, சுயஅறிவுடன் நான் நடமாடினாலும், இதுவரை வெற்றியை மட்டுமே அனுபவித்து வந்த எனக்கு, தொடர்ந்து வந்த இந்த தோல்விகளின் சுமையைத் தாங்கும் சக்தியோ, மனவலிமையோ இல்லை.

அதன் விளைவு தான், இந்த தீவைத் தேடி, தனியாக வந்து அமர்ந்துள்ளேன். இவைகளிலிருந்து மீளும் வழி, எப்படியென்றும் புரியவில்லை.

ஒரே வழி தான், உயிரை மாய்த்துக் கொள்வது!

'அட பைத்தியக்காரா... செத்துப் போவது என்றால், அதை, உன் ஊரிலேயே செய்ய வேண்டியது தானே... இத்தனை தூரம் வர வேண்டிய அவசியம் என்ன...' என்று நீங்கள் நினைக்கலாம்.

வெற்றிகளையே கண்டு கொண்டிருந்த நான், பலர் அறிய, மரணத்தை தேடி, என் தோல்வியை பறைசாற்ற விரும்பவில்லை. இங்கு நான் இறந்தால், எனக்காக எவரும் அழப் போவதில்லை. உலகத்தின் கண்களுக்கு, நான் கண்காணாமல் போனவனாகவே இருப்பேன்.

என் எண்ணத்தை நிறைவேற்ற, இரவு நேரம் தான் சரியானது. பகலிலேயே நடமாட்டமில்லாத இந்தத் தீவில், இரவில் யார் வரப் போகின்றனர்!

மாலை மயங்கி, இருள் சூழ ஆரம்பித்தது.

கடல் அலைகள் ஓயாமல் வந்து, கரையை மோதிச் செல்வதை பார்த்தபடி எத்தனை நேரம் அமர்ந்திருந்தேன் என்று தெரியாது. எங்கும் இருட்டு; நடு இரவாக இருக்கலாம்.

'போதும்... இந்த வாழ்க்கை...' என்று எனக்குள் சொல்லியவன், இது நாள் வரை நான் நம்பாத கடவுள் என்ற ஒருவரிடம், மனதால் மன்னிப்புக் கேட்டு, எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

மெதுவாக கடலுக்குள் இறங்கினேன். கடலில் ஆழம் அதிகமில்லை. அலைகள், என்னை, 'வா... வா...' என்று அழைப்பது போல், ஓடி வந்து தொட்டன.

கால்களில் சிப்பிகளும், கற்களும் குத்தின; சின்னச் சின்ன மீன்கள் உராய்ந்தன.

இடுப்பளவிலிருந்த ஆழம், நடக்க நடக்க கழுத்து வரை உயர ஆரம்பித்தது.

என்னென்னவோ பழைய நினைவுகள், மனதில் ஓடின. நிற்காமல் நடந்து கொண்டே இருந்தேன்.

வாயில் உப்பு நீர் புகுந்தது; கண்களில் நீர் கரிக்கத் துவங்கியது. யாரோ, என்னை ஆழத்திற்கு இழுத்துச் செல்வது போல் தோன்றியது.

அலைகளின் வேகம் அதிகமாகி, ஒரு இழுப்பு, மோதல்; ஒரு உதை. கால்பந்து வீரர்கள் பந்தை உதைத்துச் செல்வது போல், என்னை, அலைகள் தண்ணீருக்குள் உருட்டி விளையாடத் துவங்கியது.

என் நினைவுகள் மங்க, மார்பு, மூக்கு, கண்கள், செவிகள் மற்றும் வாயிலும் உப்பு நீர் நிரம்பி, என்னை, மேலும், கீழே இழுத்துச் செல்ல... ஏதோ ஒரு பலமான கரம் என்னை இன்னும் ஆழத்திற்குள் இழுப்பது போலிருந்தது.

என் நினைவு தப்பியது.

கண் விழித்தபோது, என் அருகில், உயரமான வெளிநாட்டுப் பெண் ஒருவள், கறுப்பு நிற நீச்சல் உடையில் அமர்ந்திருந்தாள்.

அவளருகில், தாய்லாந்தைச் சேர்ந்த மூன்று இளம் பெண்கள் நின்றிருந்தனர்.

'நான் சாகவில்லையா... என்னை யார் கரையில் கொண்டு வந்து சேர்த்தது...' என நினைத்து, மெதுவாக விழிகளை உயர்த்தி பார்த்தேன்.

''கண்ணை திறந்துட்டார்,'' என்று, அமெரிக்க ஆங்கிலத்தில் அந்த வெளிநாட்டுப் பெண் சொல்வது, என் செவிகளில் விழுந்தது.

அதற்குள், நான் தங்கியிருந்த இல்லத்தின் சொந்தக்காரரும், மற்றொருவரும், எங்களை நோக்கி வேகமாக வந்தனர்.

''நினைவு வந்து விட்டதா?'' உடைந்த ஆங்கிலத்தில் தாய்லாந்துக்காரர் கேட்க, அந்த அமெரிக்கப் பெண், ''வந்து விட்டது,'' என்றாள்.

அதில் ஒருவர், மருத்துவர்!

அவர், என் நாடியைப் பிடித்துப் பார்த்து, கண்களை விலக்கிப் பார்த்து, ''ஹீ ஈஸ் ஆல்ரைட்,'' என்றார். பின், அமெரிக்கப் பெண்ணிடம், ''நல்ல வேலை செய்தீர்கள். நீங்கள் இவருடைய வாழ்க்கையை காப்பாற்றி விட்டீர்கள்,'' என்றார்.

நான், மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.

என்னை, எல்லாருமாகச் சேர்ந்து தூக்கி, நான் தங்கியிருந்த அறைக்கு கொண்டு சென்று படுக்க வைத்தனர்.

அந்தப் பெண் என்னிடம், ''குட் நைட்... நன்றாக தூங்குங்கள்; காலையில் பார்க்கலாம்,'' என்று சொல்லி, கதவை மூடிச் சென்றாள்.

அப்பெண், என் அறையிலிருந்து இரு அறைகள் தள்ளி தங்கியிருந்தாள்.

நான் எடுத்த இந்த முயற்சியும் தோல்வி!

நெஞ்சில் அடைத்திருந்த துக்கம், மடை திறந்தது போல் வெளிவர, வாழ்க்கையில் முதன் முறையாக வாய்விட்டு அழுதேன்.

பின், எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

கண் விழித்த போது, சூரியன் நன்றாக உதித்திருந்தான். திரை சீலைகளின் ஊடே, அறையில் வெளிச்சம் உள்ளே வந்தது. திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்த போது, நேற்று நான் பார்த்த தாய்லாந்து இளைஞன், ''குட் மார்னிங்...'' என்றான் புன்னகையுடன்!

அவனுக்கு பதில் வணக்கம் தெரிவிக்காமல், வராந்தாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, மீண்டும் கடலை வெறித்தேன்.

அடுத்து, ''குட்மார்னிங்...'' என்ற குரல், பக்கத்திலிருந்து வந்தது; திரும்பினேன். நேற்று, என்னை கடலில் இருந்து காப்பாற்றிய அமெரிக்கப் பெண் நின்றிருந்தாள். 40 வயது இருக்கும்; ஆணைப் போல் நெடுநெடுவென்று உயர்ந்து, அதற்கேற்ற பருமனில், செம்பட்டை தலைமுடியிலும், வெள்ளை நிறத்தில் இருந்தாள்.

எனக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்த அவள், '' ஐ ம் சூசன்; யு.எஸ்.சின், நியூ ஆர்லியன்சிலிருந்து வந்திருக்கேன்; நான் ஒரு எழுத்தாளர்,'' என்றாள் புன்னகையுடன்!

சில வினாடிகள் என்னால் எதுவும் பேச முடியவில்லை.

''நான் சிநேகன்... பிசினஸ்மேன்,'' என்றேன்.

''கடலில் நீந்த செல்றீங்கன்னு தான் முதல்ல நினைச்சேன்; ஆனா, நீங்க அணிந்திருந்த உடையும், நடையும் பொருத்தமாக இல்லாததால், உங்கள கவனிச்சேன். அலைகள் உங்களைப் பிடித்து இழுக்கத் துவங்கியதும், நீங்க தத்தளித்ததும் தான் எனக்கு புரிந்தது. சிறிது தொலைவில் நீந்திய நான், உடனே உங்களருகில் வந்து, உங்களைப் பிடித்து இழுத்து வந்து கரையில் சேர்த்தேன்,'' என்றாள்.

இதைக் கேட்டதும் மிகவும் கேவலமாக இருந்தது. என் உயிரை, ஒரு பெண் காப்பாற்றி இருக்கிறாள். என்ன அவமானம்!

சற்றுநேரம் மவுனம் நிலவியது. அவளே அதைக் கலைத்து, ''நீங்க தற்கொலை செய்து கொள்ளச் சென்றீர்களா... மன்னிச்சுக்கங்க... இது அநாகரிகமான கேள்வி தான்; இருந்தாலும் கேட்க வேண்டியிருக்கிறது. உங்க பிரச்னை என்ன?'' என்று கேட்டாள்.

இவளிடம் என் பிரச்னைகளையும், தோல்விகளையும் சொல்வதால், எனக்கு என்ன கிடைக்கப் போகிறது!

''உங்கள நான் வற்புறுத்த விரும்பல. அவரவர் வாழ்க்கைய நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை, அவரவர் சம்பந்தப்பட்டது. ஆனாலும், என்னைப் பொறுத்தவரை, தற்கொலைங்கிறது கோழைத்தனமான, கேவலமான முடிவு,'' என்றாள்.

சட்டென்று எனக்குள் சீற்றம் எழுந்து, ''உங்கள யார் என்னைக் காப்பாற்றச் சொன்னது...'' என்றேன்.

என் கண்களை உற்றுப் பார்த்தாள் சூசன். பின், ''ஒரு உயிர் கண்ணெதிரே இறப்பதை பார்த்து, வெறுமனே இருப்பது மனிதத்தனமல்ல; அதனால் தான் காப்பாற்றினேன்,'' என்றவள், தொடர்ந்து, ''உங்களப் பாத்தால் இந்தியரைப் போல் இருக்கிறது. நீங்க இந்தியரா?'' என்று கேட்டாள்.

தலையசைத்தேன்.

''கலாசாரத்திற்கும், வாழ்க்கைத் தத்துவங்களுக்கும் பெயர் பெற்றது, உங்கள் நாடு. வாழ்க்கையின் அர்த்தத்தையும், அர்த்தமின்மையையும், உங்கள் தத்துவங்கள் உணர்த்துவது போல், நான் வேறெங்கும் படிச்சதில்ல,'' என்றாள்.

ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து, ''நீங்க எங்க நாட்டு தத்துவ நூல்களை படிச்சுருக்கீங்களா...'' என்றேன்.

''ஓரளவு,'' என்றாள்.

நான் சிறு பெருமூச்சுடன், ''வாழ்க்கையின் திரும்ப முடியாத எல்லைக்கு வந்து விட்டேன். என் கஷ்டங்களுக்கு மரணம் தான் தீர்வு,'' என்றேன்.

''அப்படியென்றால், உலகில் பாதிப் பேர் இறக்க வேண்டும்,'' என்றாள் சூசன்.

நான் பதில் பேசவில்லை.

அவளே திரும்பவும் பேசினாள்...

''நாம ரெண்டு பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகமோ, பழக்கமோ இல்லாதவங்க; எந்தவிதமான அபிப்பிராயம் உருவானாலும், அதனால, யாருக்கும் நஷ்டமோ, கஷ்டமோ கிடையாது. உங்க மனச்சுமைகளை, எவரோடாவது பகிர்ந்து கொள்வது, மன அமைதியைக் கொடுக்கும்,'' என்றாள்.

கடலை வெறித்தபடி உட்கார்ந்திருந்தேன். பின், நானாகவே, என் வெற்றிக் கதையையும், இன்று சந்தித்து வரும் தோல்விகளையும் கூறினேன்.

நான் பேசி முடித்ததும், ''உங்க கதையைக் கேட்க வருத்தமாகத் தான் இருக்கு; தொழிலில் தோல்வியும், வெற்றியும் சகஜம்; தொடர்ந்து வெற்றிகளையே சந்தித்த உங்களுக்கு, இன்று கிடைத்துள்ள தோல்வி, பெரிய அடி தான். ஆனால், அதிலிருந்து வெளிவருவது எப்படி என்பதில் கவனம் செலுத்தி, வெற்றி காண முயல்வது தான் புத்திசாலித்தனம்.

''உங்க குடும்ப நிலையைப் பற்றி சொல்லணும்ன்னா பொதுவாக உங்க நாட்டில், குடும்பம்ங்கிற பெயரில், நீங்கள், ஒருவரின் மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தவே விரும்புறீங்கன்னு எனக்குத் தோணுது. உங்க மகன், போதை மருந்துக்கு அடிமையானதற்கோ, உங்க மகள், உங்களுக்கு விருப்பமில்லாதவரை திருமணம் செய்து கொண்டதற்கோ, உங்க மனைவி, இன்று மனநிலை பிசகி இருப்பதற்கோ என்ன காரணம்ன்னு உங்களுக்குத் தெரியுமா...'' என்றாள்.

நான், அவளையே பார்த்தேன்.

''என்றாவது அவர்களின் அருகில் அமர்ந்து பேசி இருக்கீங்களா?''

''இல்லை; ஆனா, வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை சவுகர்யங்களையும் அவர்களுக்கு செய்து கொடுத்திருக்கேனே...''

''தவறு; நீங்க, உங்க குடும்பத்தினரை புரிந்து கொள்ளலைன்னு தான் நினைக்கிறேன்,'' என்றாள்.

''எப்படிச் சொல்றீங்க?''

''உங்களயே எடுத்துக்கங்க... நீங்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலைன்னதும், தற்கொலை செய்து கொள்ளத் துணிஞ்சுட்டீங்க... தான் விரும்பியது கிடைக்கலைங்கிற வெறியில், உங்க மகன் போதைக்கு அடிமையாகி இருக்கலாம்; உங்க மகளோ, நீங்க அவள் விரும்பிய வாழ்க்கையைத் தர மாட்டீங்கன்னு தெரிஞ்சு, அவளுக்கு பிடிச்சவன, கணவனா தேர்வு செய்துருக்கலாம். தான் நினைத்த எதுவுமே நடக்காததால், உங்க மனைவிக்கு மூளை கலங்கியிருக்கலாம்.''

''அது எப்படி சொல்றீங்க... அவங்க விரும்பியதை, அவங்க கேட்காமலே செய்தேனே...'' என்றேன் ஆத்திரத்துடன்!

''அங்கே தான் தவறு செய்றீங்க... பெரும்பாலான பெற்றோர், தங்கள் எண்ணம், விருப்பம் மற்றும் கனவுகளையே தங்கள் மனைவி, குழந்தைகள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப் பாக்கிறாங்க. அதில், எங்களுக்கு உடன்பாடு இல்ல,'' என்றாள்.

சூசனை வெறித்துப் பார்த்தேன்.

''அவரவர்க்கென்று ஒரு மனம், அதில் விருப்பு, வெறுப்பு இருக்குங்கிறத மறந்துடாதீங்க. என்றாவது ஒரு நாள், நீங்க எல்லாரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி முடிவு செய்ததுண்டா?''

'இல்லை...' என்று தலையசைத்தேன்.

''இன்று நீங்க எடுத்துள்ள தற்கொலை முடிவு கூட, உங்க, 'ஈகோ'வினால் எடுத்தது தான். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவர்களுக்கென்று ஒரு பார்வை இருக்கும். உங்க மரணம், நிச்சயம் உங்க குடும்பத்தினரின் பிரச்னைகளை தீர்க்கப் போறதில்ல; இது, உங்க பிரச்னை தான். இப்போதும், நீங்க உங்களைப் பற்றிய நினைவில் தான் செயல்படுறீங்க. முதல்ல, உங்க நாட்டுக்கு போனவுடன், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுங்க; அதுதான் புத்திசாலித்தனம்,'' என்றாள்.

நான் பதில் பேசவில்லை.

''என் மூலமாக, உங்களுக்கு மறுவாழ்வு கிடைச்சுருக்கு; அதைச் சரியான முறையில் பயன்படுத்துறதும், பயன்படுத்தாமல் போவதும் உங்க விருப்பம்,'' என்று கூறி, எழுந்து சென்றாள் சூசன்.

அவள் வார்த்தைகளில் இருந்த நிஜம், என் ஆணவத்தை நெருப்பாய் சுட்டது.

வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.

பின், மீண்டும் எழுந்து, கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எனக்கென்றும் ஒரு இதயம் இருக்கிறது!

- தேவவிரதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us