தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காதல் தொடங்கும் இடம்!

காதல் தொடங்கும் இடம்!

காதல் தொடங்கும் இடம்!


PUBLISHED ON : செப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்னும்... ஒரு மணி நேரத்தில், ஹாஸ்டலுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறான் அஜய்.

'ஷார்ப்பா அஞ்சு மணிக்கு வந்துடுவேன் சரண்யா... நீ வெளியில வெயிட் செய், சும்மா ஒரு ரவுண்ட்... பத்து மணிக்கு முன்னாடி கொண்டு வந்து விட்ருவேன்!'

சுலபமாய் சொல்லி விட்டான் அஜய். ஆனால், அவன் அப்படி சொன்னதிலிருந்து, சரண்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. கையிலிருந்த, 'இன்டக்ரல் கால்குலஸ்' புத்தகத்தை, வெறுமனே புரட்டிக் கொண்டிருந்தாள். களைப்பாக இருந்தாலும், தூக்கம் பிடிக்கவில்லை. உடம்பெங்கும், மொபைல் ரிங் அடிக்கிற மாதிரியான ஒரு உணர்வு. வெட்கத்தில் வெம்பி வெடிக்கிற கிறக்கம்.

இந்த வருடம்தான், இந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள் சரண்யா. பி.எஸ்சி., மேத்ஸ். படிப்பில் படுகெட்டி. பிளஸ் 2வில் 1,114 மதிப்பெண். எந்த என்ஜினியரிங் கல்லூரி என்றாலும், கூப்பிட்டு சீட் கொடுத்திருப்பர். இருந்தாலும், குடும்பச் சூழல் காரணமாக என்ஜினியரிங் சேரவில்லை. என்னதான் அரசு கடன் உதவி கிடைக்கும் என்றாலும், கூடுதலாக செலவு ஆகும். குறைந்தபட்ச செலவைக் கூட சமாளிக்க முடியாத நிலைமையில் தான், சரண்யாவின் குடும்பம் இருந்தது. 'பக்கத்து காலேஜில் என்ன படிப்பு இருக்குதோ அதபடி; பொம்பளப்புள்ளைக்கு அது போதும்...' என்று சொல்லி, அப்பா தான் இந்தக் கல்லூரியில் சேர்த்து விட்டார்.

சரண்யாவின் குடும்பம் தினக்கூலி குடும்பம் தான். அப்பாவுக்கு வேலை இருந்தால்தான், வீட்டில் எல்லாருக்கும் சாப்பாடு. சரண்யாவின் குடும்பம் மட்டுமல்ல... இந்த ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும், பெரும்பாலான மாணவியரும் அன்றாடங்காய்ச்சி குடும்பங்களைச் சேர்தவர்கள்தான். பாதி விலையில் பசிக்கு ஆகாரம் கிடைக்கிறதே, என்ற ஒரே காரணத்தால் தான், பல மாணவியர், இந்த ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர்.

வந்த புதிதில், சரண்யாவிற்கு ஹாஸ்டல் மிரட்சியாகத் தான் இருந்தது. சீனியர் மாணவியரின் சேட்டைகளைப் பார்த்து, இவள் பயந்து போய், அழுதிருக்கிறாள்.

போகப் போக எல்லாம் பழகிப் போய் விட்டது.

எல்லாருமே, கிராமத்து மாணவியர் தான் என்றாலும், குறும்புத்தனத்துக்கு ஒன்றும் குறைவில்லை. சீனியர் மாணவியரின் எல்லை மீறல்களும், அவர்களின் சில அசட்டுத்தனங்களும், பல சமயங்களில், இவளுக்கு எரிச்சலூட்டுவதாகவே இருந்திருந்தது.

இவளும், எத்தனையோ முறை வார்டனிடம் புகார் சொல்லி பார்த்து விட்டாள்...

'ஆத்தா... அடுத்த ஆண்டு உன் மேல், இப்படிப்பட்ட புகார் ஏதும் வராம இருக்குதான்னு பார்க்கலாம்... அப்படி, அடுத்த ஆண்டு உன் மேல் எந்த புகாரும் வரலன்னா... நீ கொடுத்த புகார் மேல் நடவடிக்கை எடுக்கறேன்...' என்று, இவள் மேலேயே பிளேட்டை திருப்பி வீசுவார் வார்டன். இதனால், சீனியர் மாணவியர் மீது, புகார் சொல்வதை சரண்யா நிறுத்தி விட்டாள்.

வார்டன் வாய் வைத்தது போலவே, இன்று தன் மேல் ஏதேனும் புகார் வந்துவிடுமோ என்று ஒரு பயம், இப்போது அவளை அப்பிக் கொண்டது. இருந்தாலும், அஜய்யை வர வேண்டாம் என்று சொல்ல மனசு இல்லை. பல நாள் திட்டமிட்டு, இன்று தான் வருகிறான்.

இந்த ஹாஸ்டலில் படிக்கும் சில சீனியர் மாணவியர், அவர்களின் ஆண் நண்பர்களோடு சுற்றுவதை பல முறை பார்த்திருக்கிறாள் சரண்யா. கல்லூரி முடிந்து வந்தவுடன், வார்டனிடம், வாய்க்கு வந்த, பொய்யை சொல்லி, வெளியே போய், இரவு பத்து மணிக்குத்தான் திரும்புவர். அண்ணன், தம்பி, என்று யாரோ சொந்தக்காரர்கள் வந்து கூப்பிட்டுச் செல்வதாக சீனியர் மாணவியர் சொல்வதை, இவள் உண்மையென்றே நம்பியிருந்தாள். உண்மையில் வந்து கூப்பிட்டுச் செல்வது அண்ணன்... தம்பியெல்லாம் இல்லை. பக்கா ஆண் நண்பர்கள் என்று தெரிய வந்தபோது, பதறிப் போய் விட்டாள்.

'யேய்... ஒரு நாள் பாய் பிரண்டோட சுத்திப் பாத்தாதான் உனக்கு தெரியும்டி... பயங்கர, 'கிக்'கா இருக்கும் சரண்யா. பசங்களும், நமக்குத் தேவையானதை வாங்கித் தருவாங்க... முடிந்த வரைக்கும் நாமளும் காசை கறந்து, பசங்க பர்சை காலி செய்திடலாம்' என்று சொல்லி கலாய்த்திருக்கிறாள்.

ஒரு நாள், லஞ்ச் பிரேக்கில், கலாய்த்துக் கொண்டிருந்தாள் கோகிலவாணி.

மிகவும் அடக்க ஒடுக்கமாக, பயபக்தியாய், இருக்கும் ஹரிணி கூட, ஆண் நண்பரோடு சுத்துவாள் என்பதை சரண்யா நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஹரிணி, அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, கந்தர் சஷ்டி கவசம் படித்து, விபூதியும், குங்குமமும் பூசிக் கொண்ட பின் தான், மற்ற தோழிகள் முகத்திலேயே விழிப்பாள்.

'ஏய் ஹரிணி... நீயுமா பாய்பிரண்டோட சுத்தற... என்னால நம்ப முடியல...'

திடீரென்று சரண்யாவைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் ஹரிணி. இதை சரண்யா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

'ப்ளீஸ் ஹரிணி... டோண்ட் பீ எமோஷனல்... கூல் ஹரிணி... கூல் செல்லம் ப்ளீஸ்...'

'இல்ல சரண்யா... ஆண் நண்பர் கூட சுத்தறது எனக்கு பிடிக்கலதான். ஆனா, என்ன செய்றது சரண்யா... அசைன்மென்ட் நோட், ரெக்கார்ட் நோட், செமஸ்டருக்கு கைடுன்னு எவ்வளவு செலவாகுது... எங்க அப்பாகிட்ட போய் காசு கேட்டா, ஒரு பைசா தர மாட்டார். 'காசு கட்ட முடியலன்னா காலேஜ் போகாம, வீட்ல இருன்னு, சொல்லிடுவாரு. அவரச் சொல்லியும் குத்தமில்ல, சரியான வேலை இல்லாம திண்டாடறார். என்ன செய்யறது, படிச்சாகணுமே... பசங்க காசு கொடுக்கறாங்க, அவங்க பின்னாடி போய் கொஞ்ச நேரம் பல்லை இளிச்சுட்டு வர வேண்டியிருக்கு...'

'இது வேற மாதிரி தப்பா தெரியலையா ஹரிணி? பின்னாடி பிரச்னை வரும் என்கிற பயமே இல்லையா உனக்கு...'

'பிரச்னைதான் சரண்யா... பசங்க, சீரியஸா, இதை 'காதல்'ன்னு நம்பித்தான், நம்ம கூட சுத்துவானுங்க... கடைசியில கழட்டி விடறப்ப பாவமாத்தான் இருக்கும்...'

சரண்யாவிற்கு, அஜய் மீது தான் கொண்டிருந்த அன்பு, காதலாகவே பட்டது. அந்தக் காதலை, 'டைம்பாசிங்' மாதிரி, அவள் நினைக்கவில்லை. அஜயும் தன் மீது, முழுமையான அன்பு வைத்திருப்பதாகவே, அவள் உணர்ந்திருந்தாள். தனக்கு ஒரு தலைவலி என்று சொன்னால் கூட, பத்து தடவை போன் போட்டு விசாரிப்பான். இது நாள் வரை, அவன் நகம் கூட தன் மீது தீண்டியதில்லை. அப்படியென்றால், அவன் அன்பை எப்படி சந்தேகப்பட முடியும்...

பணக்கஷ்டம் என்று பல முறை சொல்லிப் பார்த்திருக்கிறாள். பரிதாபப்பட்டதோடு சரி. பணம் எதுவும் தந்ததில்லை. ஆனால், இன்று போனில் பேசியபோது, 'இங்க பாரு சரண்யா... இன்னைக்கு நீ எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் தரப் போறேன்...' என்று சொல்லி, பதிலை எதிர்பார்க்காமல், போனை, 'கட்' செய்து விட்டான். அப்போதே, அவள் உடம்புக்குள், ஒரு சுனாமி சுழன்றடித்தது.

ஹாஸ்டலுக்கு வெளியே நின்றபடி, 'மிஸ்டு கால்' கொடுத்தான் அஜய்.

தோள் வரை, தொங்கக் கூடிய பேன்சி ரக ஸ்டட்டை காதில் மாட்டிக் கொண்டாள். அதே கலரில் கையில் வளையல் மின்னியது. கலைந்திருந்த தலைமுடியை, மறுபடியும் ஒரு முறை வாரி, ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டாள்.

''ஏய் சரண்யா... நீ ரொம்ப பாஸ்ட்டா இருக்கடி... எங்களுக்கெல்லாம் செகண்ட் இயர்லதான் பாய் பிரண்ட் கெடச்சாங்க, நீ பர்ஸ்ட் இயர்லயே ஒரு பையனை மடக்கிட்டயே...''

கிண்டலாக சிரித்தாள் சுபாஷிணி...

அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் படபடவென்று படிகளில் இறங்கினாள்.

''ஏய்... சரண்யா குட்டி, என்ன ஆளே மாறிட்ட... இது என்ன ஹேர் ஸ்டைல்... பட்டிக்காட்டு புள்ளைன்னு உன்னை ஒருத்தன் கூட சொல்ல மாட்டான்,'' வண்டியை உதைத்து, 'ஸ்டார்ட்' செய்து கொண்டே, ஆச்சர்யமாய் கேட்டான் அஜய்.

அந்த வார்த்தைகளில், அப்படியே உருகி, அவன் மேல் சாய்ந்து கொண்டு, அவன் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டாள். காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் பைக்கில், அஜய்யுடன் பயணிப்பது, எத்தனை ஆனந்தமாக இருக்கிறது. இப்படி ஒரு நாளுக்காக, எத்தனை நாள் காத்துக் கிடந்தோம்! தோள்களில் இருந்து, கைகளை இறக்கி, அவன் வயிற்றைக் கட்டிக் கொண்டாள். இவன், இன்று, நம்மை எங்கு அழைத்து போகப் போகிறான்... நினைத்த போது, அடிவயிற்றில், 'ஆன்ட்ராய்ட்' போன் அலறியது.

ஒரு வேளை, பக்கத்திலிருக்கிற பீச்சுக்கு அழைத்துப் போக போகிறானோ... அல்லது அவன் தங்கியிருக்கிற அறைக்கு அழைத்துக் கொண்டு போகிறானா தன்னுடைய இந்த, 'கெட்டப்' அவனுக்கு கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ... ஒரு வேளை, அவன் அறைக்கு அழைத்துச் சென்று, அத்துமீறி நடந்து கொண்டால் என்ன செய்வது... அந்த கணத்தை நினைத்துப் பார்க்கும்போதே, எங்கோ இனம்புரியாத ஒன்றுக்கு, மனதை பறி கொடுத்து விட்டதைப் போன்ற பரபரப்பு.

பதினைந்து நிமிட பயணத்திற்குப் பின், அவன் அந்நகரத்தின் ஒரு பெரிய காம்ப்ளக்ஸில், வண்டியை நிறுத்தினான்.

''ப்ளீஸ்... சரண்யா குட்டி கூட வா...''

''எங்கன்னு தெரிஞ்சுக்கலாமாடா?''

''அது, திரில் அண்ட் சஸ்பென்ஸ். ப்ளீஸ்... கூட வாயேன்.''

''ஏய் இடியட்... எங்கடா கூட்டிட்டுப் போற...''

''ப்ளீஸ் சரண்யா... கூட வாயேன்.''

''ஓ.கே., டா!''

'ஏதோ சர்ப்ரைஸ்ன்னு சொல்றான்... பர்சும் வெய்ட்டாதான் இருக்கு. கட்டிக்கப் போறவன் கிட்டே காசு கறக்கறதுல கஞ்சத்தனமே காட்டக் கூடாது...'

அவள் கணக்கு போட்டுக் கொண்டாள்.

''இது வைரம் பட்டை தீட்டறக் கடை... எனக்கு வைர நெக்லஸ் வாங்கித் தர போறியா?'' நக்கலாகச் சிரித்தாள் சரண்யா .

''இல்ல சரண்யா... உன்னை வைரமா மாத்தப் போறேன்.''

''என்னடா சொல்ற?''

''இந்த பட்டறையில், பார்ட் டைமா வேலை பாரு சரண்யா... காலேஜ் முடிஞ்சவுடனே, நான், உன்னை இந்தப் பட்டறைக்கு கூட்டிட்டு வந்துடறேன். திரும்ப எட்டு மணிக்கு கொண்டு போய், ஹாஸ்டல்ல விட்டுடறேன். தினமும் ரெண்டு மணி நேரம் வேலை பார்த்தா உனக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். உன்னோட செலவை நீ பார்த்துக்கலாம். மீதிப் பணத்தை சேர்த்து வச்சா மேற்படிப்புக்கு ஆகும். நானும், ஒரு ப்ரவுசிங் சென்டர்ல வேலை பார்க்கப் போறேன் சரண்யா.

நீ இப்ப கஷ்டப்படறேன்னு நினைச்சு நான் காசு கொடுத்தா அது தப்பாயிடும். நீ என் காதலி... உயிருக்கு நிகரான தோழி, வருங்கால மனைவி. உன் மேல நான் நிறைய மரியாதை வெச்சிருக்கிறேன் சரண்யா.

''எனக்கு மனைவியா வர்றவ, என் வீட்டு மகாலட்சுமியாதான் வரணும். காலேஜ்ல படிக்கிற, இந்த மூணு வருசத்துல வைரத்தை பட்டை தீட்டற மாதிரி, நாம நம் அறிவை பட்டை தீட்டிக்கணும். மத்த பசங்க, கேர்ள்ஸ் பின்னாடி சுத்தற மாதிரி, நான் உன் பின்னாடி சுத்தி, உன்னை மலிவா எடை போட விரும்பல சரண்யா. ஐ லவ் யூ சரண்யா... ஐ லவ் யூ ஸோ மச்... போ... போய், பட்டறையில வேலையை ஆரம்பி.'' வாயடைத்துப் போய் நின்றாள் சரண்யா!

''அஜய்... நான் ரொம்ப கொடுத்து வச்சவ. நீ கோபுரமா இருக்கியே அஜய். கோபுரத்துக்குள்ள நான் வர்றதுக்கு, என்னை முதல்ல தகுதிப்படுத்திக்கணும்... அதற்கு நான், என்னை புனிதப்படுத்திக்கணும். உன்னைக் கும்பிடணும் போல இருக்குடா.''

அவள் சடாரென்னு, அவன், கால்களில் விழுந்து கட்டிக் கொண்டாள்.

***

ஆதலையூர் சூரியகுமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us