PUBLISHED ON : பிப் 06, 2022

தினம் எழுந்து, குளித்து, சமையல் செய்து, 'ஒர்க் அட் ஹோமில்' ஆபீஸ் வேலையை செய்து, ஓய்வு இல்லாமல் வரும் போன் கால்களுக்கு பதில் சொல்லி, மீண்டும் இரவு சாப்பாடு, படுக்கை.மனைவி ரஞ்சனி இருந்த வரை, இதெல்லாம் எப்படி நடந்தது? பிள்ளைகளுடன் தினமும் அக்கப்போர். ரொம்ப எரிச்சலாய் இருந்தது, ராகவனுக்கு. ''அப்பா... உனக்கு அம்மா மாதிரி டிபன் பண்ண தெரியல. தினமும் தோசை, தொட்டுக் கொள்ள சட்னி இல்லை,'' சிணுங்கினாள், மகள் ராகினி.மகன் ரேவந்திடம், ''ஏன்டா, நீ எதுவும் புகார் கொடுக்கலையா?'' ''பாவம் பா நீ. ஏதோ உன்னால் முடிஞ்சத பண்ணி தர்ற. அதை எதுக்கு குற்றம் சொல்லணும்... வேணும்ன்னா அவளை பண்ணச் சொல்,'' சொன்ன தம்பிக்கு, பழிப்பு காட்டினாள், ராகினி. ராகவன், 50களில் நிற்கும், 'சிங்கிள் பேரன்ட்!' மகள், படித்து முடித்து, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்க... மகன், கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, 'ஆர்டர்' வரக் காத்திருக்கும் நேரம், 'கொரோனா' வந்து எல்லாமே தலைகீழாகி விட்டது.ரஞ்சனி இருந்த வரை, வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தது. வீட்டு கவலையை கண்ணில் காட்டியதில்லை. ஹாயாக ஆபீஸ் போய் வந்து, விடுமுறை நாட்களில், 'டிவி' பார்த்து பொழுதை கழித்து சொர்க்கமாக இருந்தது. விடுமுறை நாட்களில் குடும்பமாக எங்காவது சென்று வந்திருக்கலாம். அட்லீஸ்ட் அவளது பிறந்த வீட்டுக்காவது கூட போயிருக்க வேண்டும். இப்போது நினைத்து என்ன பயன்? ராகினி பிறந்த போது, வாரா வாரம் போய் பார்ப்பேன். அப்போது, என் பெற்றோர் உயிருடன் இருந்தனர்.'உங்கள் பெயர் ராகவனும், என் பெயர் ரஞ்சனியும் சேர்த்து ராகினின்னு பெயர் வைக்கலாமா...' என்று தயங்கியபடி கேட்டாள். நான், என் பெற்றோர் என்ன சொல்வோம் என்று அவளுக்கு பயம்.ரஞ்சனி, நல்ல மனைவி. சிறந்த மருமகள். மிகச்சிறந்த தாய். எங்கள் தாம்பத்ய சுருதியை இன்பமாக மீட்டியவள். எப்போதும் புன்னகை சுமந்த உதடுகள். அன்பான பார்வை. இரண்டு நாள் காய்ச்சல், அவளை என்னிடமிருந்து பிரித்து விட்டது. டேபிளில் இருந்த அவள் புகைப்படத்தை, கைகள் வருடியது. இப்போதெல்லாம் ராகினி, என்னுடன் பேசுவதை குறைத்து, தானுண்டு தன் வேலையுண்டு என்று ஆபீஸ் வேலையில் மூழ்கி விடுகிறாள். என் மனைவி, அவளை எந்த வேலையும் செய்ய விட்டதில்லை.'கல்யாணம் ஆகிப்போனால் இருக்கவே இருக்கிறது. இங்கே கொஞ்சம் நிம்மதியாக இருக்கட்டும்...' என்று, பரிந்து பேசுவாள். நான் இதிலெல்லாம் தலையிட மாட்டேன்.என் பெற்றோர் மறைந்த பிறகு, முதன் முதலில் வீட்டில் ஒரு வெறுமையை உணர்ந்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் கூறியது, மனைவி தான். பிள்ளைகள் படிப்பு, அவர்களின் எதிர் காலத் திட்டமிடல் எல்லாமே அவள் தான்.இந்த ஆண்கள் தான், பெண்களை எவ்வளவு சார்ந்து இருக்கிறோம். கல்யாணம் வரை அம்மாவின் முந்தானை. அதன் பிறகு மனைவி முந்தானை.நம் எல்லா பொறுப்புகளையும் மனைவியின் தலையில் கட்டி, நாம் நிம்மதியாக இருக்க பழகி விட்டோம். ஆனால், அவர்களோ நாம் சுமத்திய பாரத்தை எல்லாம் சிரித்த முகத்துடன் சுமப்பதால், அவர்கள் வலியே நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.ரஞ்சனி இறந்த பின், அவள் பீரோவை திறந்து பார்த்தேன். அழகாக அடுக்கி வைக்கப்பட்ட புடவைகள். அவளது வாசத்தை சுமந்த ப்ரத்யேகப் பொருட்கள். மேல் தட்டில் வெள்ளி பாத்திரங்கள் வாங்கி, அடுக்கி வைத்திருந்தாள். ராகினி கல்யாணம் பற்றி நினைத்து கூட பார்க்காத என்னை நினைத்து வெட்கிப் போனேன். அப்புறம் சில, 'பிக்சட் டெபாசிட் சர்டிபிகேட்'கள்.வங்கி சென்றபோது லாக்கரில் மூன்று ஜோடி வளையல்களும், இரண்டு செயின் மற்றும் நெக்லஸ். இதை தவிர, ரஞ்சனியின் நகைகள் தனியாக ஒரு துணி முடிச்சில். அதன் பிறகு, ராகினி கல்யாணம் குறித்து மெனக்கெடல். நண்பர்கள் மூலம் வரன் தேட துவங்கினேன். 'ஆன்லைன், வெப்சைட்'களில் பதிவு செய்தேன். எல்லாம் மவுனமாக பார்த்தாளே தவிர, என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, ராகினி; அழுத்தக்காரி.சனிக்கிழமை. நானும், ராகினியும், 'ப்ரீ'யாய் இருந்தோம். ''போன வாரம் நிறைய ஜாதகம் வந்திருக்கு. ஆறு ஜாதகம் பொருந்தி இருக்கு. நீ கொஞ்சம் பார்த்து சொல்லிட்டா பெண் பார்க்க வரச் சொல்லலாம்.''''உனக்கும், அம்மாவுக்கும் எல்லா பொருத்தமும் பார்த்து தானே கல்யாணம் பண்ணாங்க. நீங்க ஏம்பா நன்னா வாழலை,'' என்றாள், ராகினி.''அது வந்தும்மா...''''நோ மோர் ஆர்க்யூமென்ட்ஸ். நான் இப்ப கல்யாணம் பண்ணிக்கலை. எனக்கு அந்த எண்ணம் வரும்போது உங்கிட்ட சொல்றேன். இப்போ இந்த பேச்சை விடு,'' என்று மடமடவென மொட்டை மாடிக்கு போய் விட்டாள்.என்ன செய்ய என்று யோசிக்கையில், காவேரி ஞாபகம் வந்தது.காவேரி, என் மாமா பெண். சம வயதுக்காரி. வங்கியில் வேலை. சமீபத்தில் இறந்து விட்டார், கணவர். குழந்தைகள் இல்லை. தனியாக ப்ளாட்டில் வசித்து வருபவள். தீர்க்க சிந்தனை உள்ளவள். பளிச்சென்று பேசிவிடுவாள். காவேரிக்கு போன் செய்தேன், வீட்டிற்கு வரச்சொன்னாள்.காவேரியின் மடிப்பாக்கம் ப்ளாட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்த, அவளே கதவைத் திறந்தாள். ''வா ராகவா... எப்படி இருக்க,'' என்றாள் வழக்கமான வரவேற்புடன். ''அப்புறம் சொல்லு ராகவா... ஏதோ பேசணும்ன்னு சொன்னியே, என்ன ஆச்சு.... ''குழந்தைகள் கூட ஏதாவது பிரச்னையா... ரேவந்த் வேலை விஷயம் என்ன ஆச்சு...''ராகினி பற்றியும், அன்றைய, 'டிஸ்கஷன்' பற்றியும் சொன்னேன். ''ராகவா... உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்க ஆட்சேபனை இல்லை. ஆண்கள் மேல் உள்ள வெறுப்பு அவளை அப்படி பேச சொல்றது. அதை சரி பண்ணிட்டா அவ கல்யாணத்திற்கு சம்மதிச்சுடுவா,'' என்றாள்.''அப்படி வெறுப்பு வர என்ன அவசியம். நம் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம். இன்னும் நாமெல்லாம் எப்படி பழகறோம். இதில் எங்கே தப்பு நடந்தது?'' ''அப்படி அர்த்தமில்லை. பொதுவாக பெண்கள், தன் அம்மாவின் வாழ்க்கை பார்த்து தான், தன் வாழ்க்கையை அமைத்து கொள்வர். என் அம்மாவை பார்த்து தான் நான், அவள் படிக்க முடியாத படிப்பை படித்து, வங்கி வேலைக்கு போனேன்.''இத்தனை ஆண்டு, 'சர்வீஸ்' போட்டாச்சு. இதோ அவரும் போயாச்சு. ஆனாலும், எனக்கு வடிகால் தேவை. வாழ்க்கை குறித்து எனக்கு ஒரு கருத்து இருக்காப்ல, ராகினிக்கும் இருக்கு. அவள் அம்மா, 'போஸ்ட் கிராஜுவேட்!' அற்புதமா வயலின் வாசிப்பா. கை வேலைகள் அருமையா பண்ணுவா.''ஆனால், அவ வாழ்க்கையில் நடந்தது என்ன... அடுப்பங்கரையும், படுக்கையறையும் தாண்டி பரிமளிக்கலே. நீயோ, அத்தையோ என்னிக்காவது அவ விருப்பத்தை கேட்டிருக்கேளா... தீபாவளி புடவை கூட அவளை கூட்டிட்டு போய் வாங்கி தந்ததில்லை.''தன்னோட ஏக்கம், ஆசை எல்லாத்தையும் உள்ளுக்குள் வெச்சு மருகி, வாழ வேண்டிய வயதில் போய் சேர்ந்துட்டா. அதையே பார்த்து வளர்ந்த ராகினிக்கும், ஆம்பளை மேல நம்பிக்கை எப்படி வரும்? ''உனக்கு ஒண்ணு தெரியுமா... பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் முதல் ஹீரோ. அப்பா போல புருஷன் வேணும்ன்னு தான் ஆசைப்படுவா. ஆனால், உன் பெண், உன்னை பார்த்து கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றா. நீ ஒரு நல்ல ஹஸ்பெண்ட்; நல்ல தகப்பன்; நல்ல மகன்.''ஆனால், அதை வெளிக்காட்டத் தெரியாமலேயே வாழ்ந்துட்டே. நாலு பேருக்கு, 'சீன்' போடறதுக்கு இல்லை வாழ்க்கை. நீ கவனிச்சிருக்கியா, என் கணவர், எந்த விசேஷத்திற்கு போனாலும், 'காவேரி, வா சாப்பிட போலாம்'ன்னு கையை பிடித்து இழுத்துப் போவார். வெட்கம் பிடுங்கி தின்னும்.''ஆனா, உள்ளூர சந்தோஷமா இருக்கும். அது வெளியே தெரியாட்டாலும், முகத்தில் பூரிப்பு காட்டி கொடுத்துடும். அப்ப ஒரு கர்வம் வரும் பாரு, இன்னும் எம் மனசுல அது இருக்கு. அதுதான் என்ன பிடிச்சு வெச்சிருக்கு. அதை அசை போட்டபடியே, பகவான் என்ன கூப்பிடற வரை வாழ்வேன். இதுதான், இவ்வளவு தான் வாழ்க்கை.''இந்த சந்தோஷம் உனக்கும், ரஞ்சனிக்கும் நடுவில் இருந்தது எனக்கு தெரியும். ஏன்னா, நாங்கள் நல்ல தோழியர். அதை இப்போ உன் பொண்ணு புரிஞ்சுக்கிட்டா, அவ வெறுப்பு மறைந்து, கல்யாணம் பண்ணிப்பா. அதை செய்ய வேண்டியது உன் பொறுப்பு. நானும் ராகினிகிட்ட பேசறேன்.''
காவேரியிடம் பேசிட்டு வந்தது மனசுக்கு இதமாய் இருந்தது. மூடிக்கிடந்த ஜன்னலை திறந்து விட்டாற் போல, மனப்புழுக்கம் மறைந்து தென்றல் வீசியது. ராகினியிடமும், ரேவந்திடமும் இப்போதெல்லாம் நிறைய பேசுகிறேன். காவேரியின் வீட்டுக்கு இருவரும் ஒரு வாரம் போய் வந்தனர். அதன் பிறகு ராகினியிடம் நல்ல மாற்றம்.விடுமுறை நாட்களில் அவளாகவே எனக்கு உதவி செய்ய துவங்கினாள். சமையல் கூட விதவிதமாக. அம்மாவிடம் கற்று கொண்டிருப்பாள் போல. ரஞ்சனியை நினைத்து மனம் நெகிழ்ந்து போனேன். அடிக்கடி எங்கள் வாழ்க்கை பற்றி குழந்தைகளுடன் பேசினேன்.ராகினி மாறுவதற்கு அல்ல. ரஞ்சனியுடன் பேச முடியாததை எல்லாம் பிள்ளைகளுடன் பேசித் தீர்த்தேன். திடீரென நானும் இல்லாமல் போய் விட்டால்... முன்பு போல் மெத்தனமாக இருக்க முடியவில்லை. 'லாக்டவுண்' நாட்களில் குழந்தைகளுடன் இருக்க முடிந்தது எண்ணி சந்தோஷப் பட்டேன்.இரண்டு முத்துக்களைத் தந்து விட்டு போன ரஞ்சனியை நினைத்து, ஆனந்த கண்ணீர் வடித்தேன். இதோ, 'லாக்டவுண்' முடிந்ததும் வேலைக்கு வரச்சொல்லி, ரேவந்துக்கும், 'ஆர்டர்' வந்து விட்டது. காலை டிபனை முடித்து, சமையலுக்கு தயார் பண்ணி கொண்டிருக்கும் போது, ''அப்பா... அந்த நங்கநல்லுார் வரனை எனக்கு பிடிச்சிருக்கு,'' என்றாள் ராகினி, தலை கவிழ்ந்து.''அடடே... என் பொண்ணு வெட்கப்படறாளே... அப்ப நிச்சயம் பண்ணிடலாமா,'' சிரித்து கொண்டே அவள் முகம் பார்க்க, கண்களில் கண்ணீர்.''என்னம்மா... என்ன ஆச்சு...''''இல்லப்பா... உன்னையும், தம்பியையும் விட்டு போக கஷ்டமா இருக்கு. நான் போயிட்டா உங்களை யார் பாத்துப்பா. அம்மா கூட இல்லியேப்பா,'' கதறினாள், ராகினி.''பைத்தியம், யார் சொன்னா... உங்கம்மா என் கூடவே தான் இருக்கா. கடைசி வரைக்கும் இருப்பா, நினைவுகளாக. எல்லாத்தையும் என் கூட இருந்து நடத்துவா... அந்தர்யாமியா. கடைசி வரை அவளோட வாழ்ந்துட்டுதான் போவேன்.''கண்ணத் தொடச்சுக்கோ. சீக்கிரம் நம்மாத்தில் கெட்டி மேளம் கேட்கணும். அப்ப தான் உங்கம்மா இல்லையில்லை, என் ரஞ்சனி சந்தோஷப்படுவா,'' என்றேன். மனம் நிறைந்தது. காவேரி வெள்ளம் மனதில் புகுந்து அழுக்குகளையும், கவலைகளையும் அடித்துச் சென்றது.
உஷா ரமேஷ்
