PUBLISHED ON : ஏப் 15, 2013
இந்தியாவில் தற்போது படித்துவருபவர்களிடையே பெரும் புகழ் பெற்றிருப்பது ஐ.டி., எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறைதான். பொறியியல் சார்ந்த இதர துறைகள் இதற்கு அடுத்த இடம் பிடிக்கின்றன. தொழில் நுட்பம் சார்ந்த படிப்பு என்பதுடன் சமூகத்தில் இந்தத் துறைகளுக்கு இருக்கும் மரியாதை, உலக நாடுகளில் பணி புரியும் வாய்ப்பு, கணிசமான சம்பளம், மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக இந்தப் படிப்புகளுக்கு கிராக்கி நிலவுகிறது.
சமூக தளத்தில் இருந்து பார்க்கும் போது இது நியாயமான எதிர்பார்ப்புதான். ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எண்ணுவதுதான் முறையான ஒன்றாக இருக்க முடியும். இதற்கான பயிற்சிகளை படிக்கும் காலத்தில் போதுமான அளவில் மேற்கொண்டு தற்போது நிலவும் கடும் போட்டிகளுக்கு நடுவே இளைஞர் பட்டாளம் தங்கள் மனதிற்குப் பிடித்த தொழில் நுட்ப படிப்புகளையும் இதர படிப்புகளையும் மேற்கொள்கிறார்கள்.
பட்டப் படிப்பை முழுமையாகவும், நல்ல மதிப்பெண்கள் பெற்றும் இவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இதன் பின்னர் கேம்பஸ், ஆப்-கேம்பஸ் என்ற முறைகளிலும், போட்டித் தேர்வுகள் எழுதியும் தங்களுக்கான பணியைப் பெறுகிறார்கள். இதுவரை எல்லாம் சுகம்தான். நிறுவனத்தில் இவர்கள் இணைந்த பின்னர்தான் சோதனைகள் துவங்குகிறது. ஏனென்றால் நிறுவனங்கள் என்பவை தனி மனித உழைப்பினால் மட்டும் உயர்பவை அல்ல. கடும் உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய தொடர் முயற்சிகள் ஆகியவற்றுடன் குழுவாகப் பணியாற்றும் தன்மையுடன் அவை தொடர்ந்து இயங்கினால் மட்டுமே எட்டிய இலக்குகளை இருத்தி வைத்துக் கொள்ள முடியும். என்ன தேவை:
ஆக துறை சார்ந்த திறமைகளுடன் மென்திறன்களைப் பெற்ற ஒருவர் மட்டுமே இனி வரும் காலங்களில் நிறுவனங்களில் மேன்மை பெற முடியும் என்று துறை சார்ந்த வல்லுனர்கள் அழுத்தமாக கூறுகிறார்கள். இந்த மென்திறன்கள் என்னென்னவென்று தெரியுமா ?
அனைவருடனும் சகஜமாகப் பழகும் தன்மை, குழு மனப்பான்மை, சமூக அந்தஸ்து, தொழில் சார்ந்த நாகரீகம், ஒப்பந்தம் செய்யும் திறன், நடத்தை, ஊக்க சக்தி, கால மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நடத்தையுடன் கூடிய திறன்கள் என்பவைதான் அவை. இந்த மென்திறன்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா இல்லையா என்ற சுய ஆராய்ச்சியை உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதே உங்கள் பணி எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
