/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பசுவை அடித்தால் பால் குறையும் ஜாக்கிரதை
/
பசுவை அடித்தால் பால் குறையும் ஜாக்கிரதை
PUBLISHED ON : மார் 01, 2017

கால்நடைகளுக்கு தண்ணீரும் உணவு தான். எனவே போதுமான நீரை குடிக்க கொடுக்க வேண்டும். சராசரியாக, நாள் ஒன்றுக்கு ஒரு கறவை மாட்டுக்கு 150 லிட்டர் நீர் தேவை. தேவையை விட குறைவாக குடிக்க நீர் கொடுத்தால் பால் உற்பத்தி குறையும். கறவை நேரத்தின் போது கறவை மாடுகளுக்கு பயம், வலி போன்ற இடையூறுகள் இருக்கக்கூடாது. இவை 'அட்ரினலின்' என்ற ஹார்மோனை ரத்தத்தில் அந்நேரத்தில் சுரக்கச் செய்கின்றன. இது பால் உற்பத்தியின் அளவை குறைக்கும். எனவே கறவையின் போது கறவை மாடுகளை அடிப்பதோ, துன்புறுத்தவோ கூடாது.கறவை மாடு வாங்க ஆசையா கன்று ஈன்ற 85 நாட்களுக்குள் பசுக்களை மீண்டும் சினைப்படுத்தினால் மாட்டின் பால் அளவு வெகுவாக குறைந்துவிடும். எனவே கன்று ஈன்ற 85 நாட்களுக்கு பின்னரே கருவூட்டல் செய்ய வேண்டும். ஒரு கறவை மாடு தன் வாழ் நாளில் அதிகமான கன்றுகளை ஈனும் போது, அதன் பால் உற்பத்தியும் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கன்று ஈனுவது பால் உற்பத்திக்கு கூடுதல் நன்மை தரும். எனவே பாலுக்காக கறவை மாடுகளை வாங்கும்போது விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாங்கக்கூடாது. முதல் ஈற்றில் உள்ள மாடுகள் பால் உற்பத்தியில் 75 சதவிகிதம், இரண்டாவது ஈற்றில்85 சதவிகிதம், மூன்றாம் ஈற்றில் உள்ள மாடுகளை வாங்குவதே நன்மை அளிக்கும். விவசாயிகள் சிலர் 15 மாதங்கள் வரை தொடர்ந்து பால் கறக்கின்றனர். இப்படி செய்வது தவறு. கறவை மாடு பத்து மாதங்கள் கறவையிலும், இரண்டு மாதங்கள் 'வற்றுக்கறவை'யிலும் இருக்க வேண்டும். இதனால் அடுத்த ஈற்றில் பால் அளவு கூடும்.
தீவனப்புல் தேர்வு எப்படி: கால்நடை தீவனத்துக்காக பசும்புல் பயிரிடும் விவசாயிகள் 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை மேற்கொள்ள வேண்டும். மாறாக 60 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வதோ அல்லது இளம் பயிராக அறுவடை செய்வதோ நல்லதல்ல. இளம் பயிராக அறுவடை செய்து தீவனமாக கொடுத்தால் பாலில் கொழுப்பு சத்து குறையும். முற்றிய நிலையில் அறுவடை செய்து கொடுக்கும் போது 'ஆக்ஸாலேட்' எனும் தேவையற்ற சத்தினை நிலத்திலிருந்து கிரகித்து கொண்டு புல்லில் உள்ள சுண்ணாம்புச்சத்து மாடுகளுக்கு கிடைக்காமல் செய்து விடும். பால் உற்பத்தியில் சுண்ணாம்புச்சத்து தேவை மிக இன்றியமையாதது. பாலில் பகுதிப் பொருளாக சுண்ணாம்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. முற்றிய தீவனப்புல்லை மாடுகளுக்கு அளித்தால் சுண்ணாம்புச்சத்து குறைபாட்டால் பால் உற்பத்தி குறைந்து விடும். அளவுக்கு அதிகமாக தீவனத்தில் தானியங்களையும், புளித்த உணவு பொருளால் ஆன நீரையும் தரும்போது கறவை மாடுகளின் வயிற்றில் தேவைக்கு கூடுதலான அமிலம் சுரக்கும். இது பால் உற்பத்தி அளவையும், பாலில் கொழுப்பு சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். கறவை மாடுகளின் முன் கறவை காலத்தில் பால் உற்பத்திக்கு மிகவும் தேவையான எரி சத்தினை தரக்கூடிய சோயா, மொச்சை, பருத்திக்கொட்டை போன்றவற்றை தீவனத்தில் சேர்த்து தர வேண்டும். தொடர்புக்கு 94864 69044.- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை.

