/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தென்னையில் பாக்கும், மிளகும் ஊடுபயிர்
/
தென்னையில் பாக்கும், மிளகும் ஊடுபயிர்
PUBLISHED ON : பிப் 18, 2026

மருத்துவ சேவையுடன் விவசாயத்தில் ஈடுபடு வதன் மூலம் நஞ்சற்ற இயற்கை முறையில் பாக்கு, மிளகு, ஜாதிக்காயை சாகுபடி செய்கிறேன் என்கிறார் பொள்ளாச்சி ஆழியாரைச் சேர்ந்த டாக்டர் மூர்த்தி.
தென்னையில் வருமானம் குறைந்ததால் ஊடுபயிர் மூலம் வருமானம் ஈட்டும் வழிமுறைகளை விளக்கினார் மூர்த்தி.
ஐந்து ஏக்கர் பரப்பில் 20 ஆண்டுகளாக தென்னை சாகுபடி செய்கிறேன். பல ஆண்டுகளாக தென்னையின் உற்பத்தி குறைந்ததால் ஊடுபயிர் செய்ய திட்டமிட்டேன். 10 ஆண்டுக்கு முன் தென்னையின் ஊடே 250 ஜாதிக்காய் மரக்கன்றுகளும் நான்காண்டுக்கு முன் 550 பாக்கு மரக்கன்றுகள் நடவு செய்தேன். பாக்குமரக்கன்று நடவின் போதே கொடிமிளகுக்கன்றுகள் தென்னையின் கீழே பதியன் செய்தேன்.
ஒரு மரத்திற்கு 2 கன்றுகள் வீதம் பதியனிட்டு அவை மூன்றடி உயரம் வரை வளர்ந்தபின் அவற்றில் இருந்து பதியனிட்டு ஒரு மரத்தின் மேல் 3 முதல் 5 கொடிகளை படரவிட்டேன். கடந்தாண்டு குறைந்தளவே மிளகு கிடைத்தது.
முதன்முறையாக 20 கிலோ மிளகு அறுவடை செய்தேன். ஒரு டன் அளவிற்கு ஜாதிக்காய் கொட்டையும் 400 கிலோ அளவு ஜாதிபத்திரி பூவும் அறுவடை செய்தேன். இவற்றை காயவைத்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறேன். ஜாதிக்காய் கிலோ ரூ.500 வரையும் ஜாதிபத்திரி ரூ.2900 வரை விலை போகிறது. இந்த நிலம் சமவெளி என்பதால் மிளகுக்கொடிக்குத் தேவையான நிழலும் கிடைக்கிறது. காலை முதல் மாலை வரை லேசாக சூரியவெளிச்சம் படும் வகையில் மிளகுக்கொடிகள் வளர்கின்றன.
எல்லாம் ஆர்கானிக்
நிலத்தில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தவில்லை. ஆண்டுக்கு 20 டன் அளவிற்கு பசுஞ்சாணம் விலைக்கு வாங்குகிறேன். இதுவே ரூ.80ஆயிரத்தைத் தாண்டும். சாணத்தை நிலத்தில் பரப்பி டிரைகோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ், மெட்டாரைசியம் அனிசேபிலே கலந்து 3 முதல் 4 மாதங்கள் வைத்திருந்தால் அவை மண் போன்று பொலபொலவென மாறி விடும். மாதம் ஒருமுறை கிளறிவிட்டால் போதும். இந்த உரத்துடன் வேப்பம்புண்ணாக்கு சேர்த்து தென்னை, ஜாதிக்காய் மரம் ஒன்றுக்கு 2 கிலோ அளவு உரம் தருகிறேன். ஆண்டுக்கு 3 முறை இந்த முறையில் உரமிடுகிறேன். பாக்கு மரத்தில் இன்னும் அறுவடை செய்யவில்லை.
தென்னையில் இருந்து காய் பறித்து அவற்றை கொப்பரையாக விற்பனை செய்கிறேன். தற்போது ஊடுபயிராக ஜாதிக்காய், மிளகு மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கிறது. மண்ணும் இயற்கை உரத்தால் வளமாக உள்ளது என்றார்.
இவரிடம் பேச 83004 10424
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை

