/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மகசூலை அதிகரிக்கும் தென்னை டானிக்
/
மகசூலை அதிகரிக்கும் தென்னை டானிக்
PUBLISHED ON : ஏப் 02, 2025

தென்னை மரங்களில் சரியான அளவில் இயற்கை மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்தி நீடித்த வேளாண்மைக்கு திட்டமிட வேண்டும்.
மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ, மெக்னீசியம் சல்பேட் ஒரு கிலோ ஆகியவற்றை 100 கிலோ பண்ணை எருவுடன் கலந்து இடலாம்.
தென்னையில் குரும்பை உதிர்வதற்கும் பென்சில் முனை குறைபாட்டிற்கும் பூச்சி, நோய்கள் தாக்குவதற்கும் முக்கிய காரணம் நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறை தான். இதற்கு குறைந்த செலவில் நல்ல பலன் தரக்கூடிய தென்னை டானிக் பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தென்னை டானிக் உற்பத்தி செய்யப் படுகிறது. ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையில் தென்னை விவசாயிகளுக்காக வழங்கப்படுகிறது.
டானிக் பயன்படுத்தும் முறை
தென்னை டானிக் கட்டும் போது மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும். 40 மில்லி டானிக் உடன் 160 மில்லி தண்ணீர் சேர்த்து 200 மில்லி திரவமாக்க வேண்டும். மரத்தின் அடி தண்டில் இருந்து இரண்டரை முதல் மூன்றடி தள்ளி மரத்தின் உறிஞ்சும் வேர்கள் அதிகளவில் காணப்படும்.
இந்த பகுதியில் ஓரடி வரை மண்ணை தோண்டி பென்சில் தடிமனுள்ள இளம் சிவப்பு வேரை தேர்வு செய்து நுனிப்பகுதியை கத்தியால் சீவ வேண்டும்.
பாலிதீன் பையில் திரவத்தை ஊற்றி வேரின் அடி வரை செருகி கட்டி விட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வேர் வழியாக இத்திரவம் செலுத்தினால் மரத்தின் மேல் பகுதி வரை செல்லும். அதன் பின் பாலிதீன் பையை அகற்றி மண்ணை அணைத்து சரிசெய்ய வேண்டும்.
வேர்வழியாக ஊட்டச்சத்து வழங்குவதால் மரத்தின் உயிர் வேதியியல் செயல்பாடுகளில் சேதம் விளைவிக்காமல் மரத்திற்கு தேவையான சரிவிகித ஊட்டச்சத்துகளை தரமுடியும்.
ஒரு லிட்டர் டானிக் ரூ.342. இதை 25 மரங்களுக்கு பயன்படுத்தலாம். டானிக் பயன்படுத்தும் போது குரும்பை உதிர்வு கட்டுப்படும். பூச்சி, நோய் தாங்கும் திறன் அதிகரித்து தேங்காய் அல்லது இளநீர் மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும்.
- சுதாலட்சுமி, துறைத்தலைவர்,
தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியாறு
பொள்ளாச்சி.
அலைபேசி: 94431 53880