PUBLISHED ON : மே 28, 2014

கோவைச்செடியை 'பிம்பி' (Bimbi) என்று
ஆங்கிலத்தில் அழைப்பர். இதற்கு விம்பம், தொண்மை, கொவ்வை என்ற பெயர்களும்
உண்டு. இதன் தாவரப்பெயர் காக்கினியா இண்டிகா (Coccinea Indica)
ஆகும். இதற்கு செபளாண்ட்ரா இண்டிகா (Cabhalandra Indica) என்ற
பெயரும் உண்டு. இதன் காய்கள் பச்சையாகவும் பழம் சிவப்பாகவும் இருக்கும்.
சிவப்பு நிறத்தின் சிறப்பினைச் சொல்ல கோவைப்பழம் உதவுகிறது. பெண் செடியின்
கிளைத்துண்டுகள் விதைகளாகப் பயனாகின்றன. வேர்க்கிழங்குகளையும் விதைக்கப்
பயன்படுத்தலாம்.
கோவைக்காய் தமிழகத்தில் குறிப்பாக செங்கல்பட்டு
மாவட்டத்தில் வணிக முறையில் உற்பத்தியாகின்றது. ஜூன்- ஜூலையில் 15 செ.மீ
நீள பெண் கொடித்தண்டுகளை நடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. 10% ஆண்
கொடித்தண்டுகளையும் நடுதல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். சாகுபடியாகும்
இது 6 மாதங்களில் அறுவடைக்கு வரும். ஆனால் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலும்
நிறைந்த மகசூலைப் பெறலாம். காய்களில் கசப்பு, இனிப்பு இரகங்கள் உள்ளன.
கோவைக்காயின் மணம், ருசி ஆகியவற்றிற்காக சிலர் இதனை விரும்புவதுண்டு.
கோவைக்காயைக் குறுக்காக அரிந்து கறியாக சமைத்துண்ணலாம். ஒரு ஆண்டுக்கு ஒரு
கொடியிலிருந்து 500 - 600 காய்கள் வரை கிடைக்கும். ஒரு எக்டரிலிருந்து
40,000 கிலோ காய்கள் கிடைக்கும். கோவைக்காய் முற்றி பழுத்தபின் அப்பழங்களை
உண்ணலாம். பழம் இனிப்பாக இருக்கும். காடுகளில் படர்ந்து வளரும்.
கோவைக்கொடியில்
உண்டாகியிருக்கும் பழங்கள் பறவைகளுக்கும் குறிப்பாக கிளிகளுக்கும் ஆடு,
மாடு மேய்ப்பவர்களுக்கும் நல்ல உணவு ஆகவும் அமைந்துள்ளது. காயை வற்றலாகவும்
ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.
சத்துக்கள்: நூறு கிராம் கோவைக்காயில்
பலவித சத்துக்கள் உள்ளன. அவை. புரதம் 1.2, கொழுப்பு 0.1, நார்ப்பொருள் 1.6,
மாவுப்பொருட்கள் 3.1, கால்சியம் 40மி.கி பாஸ்பரஸ் 30மி.கி, இரும்பு
1.4மி.கி, ரைபோபிளேவின் 0.08மி.கி, நியாசின் 0.07மி.கி, தயமின் 0.07மி.கி,
வைட்டமின் 'சி' 15மி.கி, போலிக் அமிலம் 59 மைக்ரோகிராம், கரோட்டின் 156
மைக்ரோகிராம், சக்தி 18 கிலோ கலோரிகள்.
மருத்துவப்பண்புகள்: காய்களைச்
சமைத்துண்ண குளிர்ச்சியைத் தரும். குட்டத்தை போக்கும். காசநோயைப் போக்கும்.
இளங்காயை வாயிலிட்டு மென்று சப்பிவர நாக்கு புண்கள் நீங்கும். கோவைக்காயை
சிறுநீர்க்கோளாறு உடைய நோயாளிகள் அடிக்கடிப் பயன்படுத்தலாம். காயைச்
சமைத்து உண்ண அருசி போகும். நாக்கிலுள்ள வெடிப்பு, வாய்ப்புண்,
நாக்குப்புண் நீங்கும். குமட்டல் விலகும். இதற்கு காயை மோரில் ஊற வைத்து
வற்றலாகச் செய்து பொரித்தும் ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.
வேர்
மற்றும் இலைச்சாறு, நீரிழிவு நோய்க்குப் பயன்படுவதாக எண்ணுகிறார்கள்.
கிழங்குகளைச் சுத்தம் செய்து குறுக்காக சிறுசிறு துண்டுகளாக்கி
மிளகுத்தூளில் தொட்டு உண்ண மேற்கூறிய நோய்கள் போகும். கிழங்குச்சாற்றை 1-3
கரண்டி தர நீரிழிவு படை போகும்.வேரை உலர்த்திப் பொடி செய்து 30 கிராம்
அளவில் தர மலத்தை இளக்கும். நல்லெண்ணையையும் இலைச்சாற்றையும் சமஅளவில்
சேர்த்துக் சொறி, சிரங்கு, படை, கரப்பானுக்குத் தடவ புண்கள் குணமாகும்.
உடலில் பூசி தலைமுழுகி வர உட்சூடு தணியும். இலையைக் கொப்புளங்களின் மீது
ஒட்டவைத்தால் கொப்புளங்கள் அழுந்தி நாளடைவில் மறையும்.
இலையை நறுக்கி
தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி குடிநீராக்கி உள்ளுக்குத் தர மேகவெட்டை
நீங்கும். உடல்சூடு தணியும். கண்எரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறி,
சிரங்கு, புண் குணமாகும். விக்கலை நிறுத்தும், கோழையை அகற்றும், தோல்
நோய்கள் போகும்.
கோவை இலையை சிறுசிறு துண்டுகளாக அரிந்து அத்துடன்
இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து, சட்டியிலிட்டு சரிபாதியாகக் காய்ச்சி தினம்
இரண்டுவேளை இச்சாற்றைக் குடித்துவர கண் எரிச்சல், இருமல் நீங்கும். இலைகளை
உலர்த்தித் தூளாக்கி தினம் இரண்டு சிட்டிகை வெற்றிலையில் கலந்து
சாப்பிடலாம். பூக்கள் அரிப்பையும், பித்த மயக்கத்தையும் போக்கும்.
காமாலைக்கு நல்லது. எனவே கோவைக்காயை எங்கு கிடைத்தாலும் வாங்கி பயன்படுத்த
இன்றே திட்டமிடுவோம் வாரீர்! இது குறித்து மேலும் விபரம் பெற டாக்டர்
பா.இளங்கோவன், அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

