
பல்வேறு நோய் கிருமிகள் கறவை மாட்டின் பால் மடியினை தாக்கி மடிநோயினை உண்டாக்குகின்றன. அதிகமாக மடிநோய் ஸ்ட்ரெப்டோ காக்கஸ், ஸ்டைபலோ காக்கஸ், எஸ்செரிசியாகோலி, கிளப்சியெலிலா, கொரினிபாக்டீரியா, சூடோமோனாஸ் போன்ற பாக்டீரியா என்னும் நுண் கிருமிகள் மற்றும் சில வகை பூசணங்களினாலும் ஏற்படுகிறது. மடிநோய் மடியில் ஏற்படும் காயம், புண் போன்றவைகளாலும் சுத்தமில்லாத தரை, பால் கறப்பவரின் கைகள் போன்ற காரணங்களினாலும் கோமாரி போன்ற தொற்று நோயினாலும் பாக்டீரியா நோய் கிருமிகள் ரத்த மூலமாகவும் அல்லது பால்மடியின் துவாரத்தின் வழியாகவும் பால் மடியினை அடைந்து பால்மடி நோயினை ஏற்படுத்துகிறது.நோயின் அறிகுறிகள்:
* நோய் தாக்கிய கறவை பசுக்களின் ஒரு மடியோ இரண்டு மடியோ, நான்கு மடிகளும்கூட வீங்கி பெரியதாகவும் சூடாகவும் வலியுடனும் காணப்படும்.
* பாலை கறந்து பார்த்தால் மஞ்சள் நிறமாகவோ, ரத்தம் கலந்தோ, நீர்த்த திரவமாகவோ, திரி திரியாகச் செதில்களாகவோ காணப்படும்.
* நோயினால் தீவனம், தண்ணீர் அதிகமாக உட்கொள்ள முடியாது. இவைகளினால் பால்சுரப்பு குறைந்தோ, முற்றிலுமே இல்லாமலோ போகும்.
* மிதமான முதல் கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
* பால் மடி நோய் கண்டவுடன், உடனடியாக சிகிச்சை செய்யாவிட்டால் பால்மடி கடினமாகவோ, சீழ்படிந்து துவாரம் ஏற்பட்டு சீழ் வடியக்கூடும்.
* பால்மடி வீக்கத்தினால் கால்கள் நொண்டும்.சிகிச்சை:
பால்மடியில் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடனோ, வீக்கம் கண்டவுடனோ கால்நடை மருத்துவரை உடனே அழைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எந்த கிருமி தாக்கி உள்ளது என்பதை கண்டறிந்து அதற்குண்டான மருந்தினை தேர்ந்தெடுத்து, ரத்தநாளம் மூலமாகவோ, தசையின் வழியாகவோ சிகிச்சை செய்வதுடன் பாதிக்கப்பட்ட மடியிலும் காம்பின் துவாரத்தின் வழியாகவும் சிகிச்சை செய்ய வேண்டும். ஓரிரு நாட்கள் மட்டும் சிகிச்சை செய்யாமல் மருத்துவர் சிபாரிசு செய்யும் நாட்கள் வரை சிகிச்சை செய்ய வேண்டும். இம் முறைகளை மேற்கொண்டால்தான் பால்மடி நோயினை குணப்படுத்த முடியும்.
ஒருபோதும் தாங்களாகவோ மருத்துவம் பயிலாத போலி மருத்துவர்கள் மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது.நோய் தடுப்பு முறைகள்:
இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி ஏதுமில்லை. ஆகவே வருமுன் காப்பதே நல்லது.
* மடியில் காயம் ஏற்படாமல் மாட்டுக் கொட்டகையினை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
* பண்ணையில் நோய் தாக்காத மாட்டினை முதலில் கறந்து, கறவையாளர் தனது கையினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தபின், நோய் தாக்கிய மாட்டினை கறக்க வேண்டும்.
* பால் கறந்தவுடன் பால்மாடு படுக்காமல் இருக்க தீவனம் வழங்க வேண்டும்.
* மாதம் ஒரு முறை பாலை பரிசோதனை செய்ய வேண்டும்.
* மருத்துவரின் ஆலோசனை பிரகாரம் நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.எச்சரிக்கை:
பால் கறவையின் போதும் மதியம் ஒரு முறையும், இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் அதிகாலையிலும் பால் மடியினை கவனிக்க வேண்டும். பால்மடியில் வீக்கம் கண்டால் இரவு 12 மணியாக இருந்தாலும் கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை செய்ய வேண்டும். காலதாமதம் பால்மடி நோயினை முழுமையாக குணப்படுத்த இயலாமல் போகலாம்.
டாக்டர் கே.கே.மூர்த்தி,
மதுரை-625 703.போன்: 95859 50088