PUBLISHED ON : ஆக 17, 2011

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் கிணற்றுப் பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் குறுகிய காலப்பயிரான வெண்டையை சாகுபடி செய்யலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் வெண்டை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் எடுத்துள்ளனர். ஆனி-ஆடி பட்டத்தில் ஒருவிதமான காற்றும் உஷ்ணமும் நிலவும். இச்சூழ்நிலையில் மஞ்சள் நரம்பு நோய் செடிகளைத் தாக்கும். விவசாயிகளுக்கு பேயர் கம்பெனிக்காரர்கள் உதவி செய்வார்கள். இவர்களிடம் 'கொளச்' என்னும் மருந்து உள்ளது. இந்த மருந்தினை விதையுடன் கலந்து விதைத்தால் வியாதி வருவதில்லை. பேயர் கம்பெனி விதையுடன் மருந்து கலந்து கொடுத்து உதவுகின்றது. இந்த கம்பெனியில் அதிக மகசூல் தரும் ஒட்டு வீரிய ரகங்களும் உள்ளன. (மைக்கோவின் ஒட்டு வீரிய ரகங்களான நம்பர் 10, 11, 12) விதையுடன் மருந்து கலப்பது எப்படியெனில், ஒரு கிலோ விதைக்கு 30 கிராம் கொளச் மருந்து கலக்க, ஆறிய அரிசி கஞ்சியை எடுத்துக்கொண்டு அதில் விதைமருந்து இட்டு நன்கு கலந்து பின் விதையினை நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளலாம். சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த நிலத்தினை நன்கு உழுது ஏக்கருக்கு நன்கு மக் கிய தொழுஉரம் 10 டன் இட்டு மீண்டும் இயற்கை உரம் மண் ணோடு நன்கு கலக்கும்படி உழவேண்டும். நிலத்தில் 60 செ.மீ. இடைவெளி கொடுத்து பார்சால் அமைக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த ரகங்களின் விதையை பாரில் விதைக்கு விதை 20 செ.மீ. இடைவெளியில் குழிக்கு ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைத்தபின் எம்.என். மிக்சர் 5 கிலோவை மணலுடன் கலந்து நிலத்திற்கு ஒரே சீராக இடவேண்டும். உடனே பாசனம் செய்ய வேண்டும். செடி முளைத்து மூன்று இலை பருவத்தை அடைந்தவுடன் ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் அன்னபேதி உப்பு மற்றும் 20 கிராம் யூரியா இவைகளை கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும். வளர்ச்சி காலத்தில் மூன்று முறை களையெடுக்க வேண்டும். இரண்டாவது களையெடுக்கும் சமயம் ஏக்கருக்கு ஒரு மூடை டிஏபி, 1 மூடை பொட்டாஷ் இட்டு செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
செடியின் வயது 25 நாட்கள் இருக்கும்போது 'கான்பிடார்' என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவு தெளித்துவிட வேண்டும். இதுநல்ல காரமுள்ள மருந்தாகும். இது விதை விதைத்து 70 நாட்கள் வரை செடியை மஞ்சள் நோய் வராமல் தடுக்கும். செடி நட்ட 25ம் நாளிலிருந்து காய்க்கத் துவங்கும். சாம்பல் நோய் தென்பட்டால் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும்.
உஷ்ணம் தணிக்க: ஆனி-ஆடி பட்டத்தில் காற்று மற்றும் ஒருவிதமான ஒடுக்கம் இருக்கும். இதை தவிர்க்க வெண்டைச் செடிகளைச் சுற்றி கொத்தவரை செடிகளை வளர்க்க வேண்டும். பூசா நவுபகார் என்னும் ரகம் அடர்த்தியாக உயரமாகவும் வளரும். கீழே சாயாமல் இருக்க குச்சிகள் நட்டு அதனுடன் செடிகளை கட்டிவிட வேண்டும். கொத்தவரை செடிகள் வெண்டை செடிகள் உஷ்ணத்தினால் பாதிக்கப் படாமல் பாதுகாக்கும். மேலும் கொத்தவரை கொடுக்கும் மகசூலும் விவசாயிகளுக்கு வரமாக அமையும். ஏக்கரில் ரூ.1000 வரை வரவு கிட்டும்.
வெண்டை அறுவடை: நிலத்தில் விதை விதைத்த 35ம் நாள் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் அறுவடை கிடைக்கும். மொத்தமாக 20, 25 அறுவடைகள் கிடைக்கும். விவசாயிகள் கவனித்து இளசான காய்களை பறிக்க வேண்டும். கவனிப்பு சரியில்லையேல் காய்கள் முதிர்ச்சி அடைந்துவிடும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

