/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மதுரை பகுதியில் நெல் அறுவடை வயலில் பயறு மற்றும் உளுந்து சாகுபடி
/
மதுரை பகுதியில் நெல் அறுவடை வயலில் பயறு மற்றும் உளுந்து சாகுபடி
மதுரை பகுதியில் நெல் அறுவடை வயலில் பயறு மற்றும் உளுந்து சாகுபடி
மதுரை பகுதியில் நெல் அறுவடை வயலில் பயறு மற்றும் உளுந்து சாகுபடி
PUBLISHED ON : மார் 07, 2012

மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் பெரியார், வைகை பாசன திட்டத்தின்கீழ் 1,45,000 ஏக்கர் நிலப்பரப்பில் கண்மாய், கிணற்றுப்பாசனம் மற்றும் பெய்த மழை இவைகளின் உதவியால் நெல் சாகுபடியை செய்தவர்கள் அறுவடையைத் துவங்கியுள்ளனர். விவசாயிகள் ஏக்கரில் 30 மூடை வரை மகசூல் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
மூடை ரூ.650 வீதம் 30 மூடைக்கு வரவு ரூ.19,500 எதிர்பார்க்கின்றனர். சாகுபடி செலவு ரூ.8000 போக லாபம் ரூ.11,500 கிடைக்கலாம். இதோடு வைக்கோலிலும் வரவு ரூ.500 வரை கிடைக்கும். சில விவசாயிகள் நெல் அறுவடை செய்த நிலத்தில் பசுந்தாள் உரச் செடிகளை விதைத்து நிலவளத்தை கூடுதலாக்க முயற்சிக்கின்றனர்.
மற்ற விவசாயிகள் நெல் வயலில் பயறு, உளுந்து இவைகளை துணிச்சலாக சாகுபடி செய்யத் துவங்கிவிட்டனர். உளுந்தில் ஏடீடி 2, ஆடுதுறை 5 ரகங்களையும் பச்சைப்பயறில் கே.எம்.2 ரகத்தினையும் சாகுபடி செய்கிறார்கள். சமயோசிதமாக ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 தேதிக்குள் விதைப்பினை முடித்துள்ளனர். இதைவிட தள்ளி விதைத்தால் பயிர்கள் பின்பருவத்தில் வறட்சிக்கு உள்ளாகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை முற்போக்கு விவசாயிகள் நன்கு தெரிந்துவைத்துள்ளனர். வயலில் சொட்டை இடம் இல்லாமல் வயல் பூராவும் விதையை சீராக விழும்படி விதைக்கின்றனர். விதைக்கும் சமயம் பூமி மெழுகு பதத்தினை கொண்டிருப்பதை கவனித்து பணி செய்கின்றனர். வயலில் நீர் தேங்கி இருப்பதாகக் கண்டால் உடனே வடித்துவிடுகின்றனர்.
விதையினை விதைக்கும் போது 10 கிலோ விதைக்கு ஒரு பொட்டலம் ரைசோபியம் நுண்ணுயிரியை அரிசிக்கஞ்சியில் நன்றாகக் கலக்குகின்றனர். ஏக்கருக்கு 20 கிலோ விதையளவு உபயோகிக்கின்றனர். விதை விதைத்த 10-15 நாட்களில் பயிர் பாதுகாப்பு செய்து, இலைகளைப் பாதிக்கும் பூச்சிகளை அழிக்கின்றனர். சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய்ப்புழு இவைகளை அழிக்க 3 சதம் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கின்றனர்.
எலிகள் பாதிப்பில்லாமல் கவனித்துக் கொண்டு, செடிகளில் உள்ள களைச்செடிகளை கவனமாக கையால் அகற்றுகின்றனர். பூமியிலுள்ள ஈரம் ஆவியாக போகாமல் தடுக்க பிடுங்கிய நெல் தாள்கள் போட்டு பூமியை மூடிவிடுகின்றனர்.
சங்கு பருவம் அதாவது செடிகளில் பூக்கள் தோன்றும் போது நான்கு கிலோ டிஏபி உரத்தை எடுத்து 20 லிட்டர் நீரில் கரைத்து 12 மணி நேரம் அப்படியே வைத்து தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 180 லிட்டர் நீரில் கலந்து செடிகளின் மேல் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கின்றனர். 10-15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கின்றனர்.
விவசாயிகள் பயறு, உளுந்தில் மதுரைப் பகுதியில் சராசரியாக ஏக்கரில் 400 கிலோ வரை மகசூல் எடுத்துவருகின்றனர். விவசாயிகளுக்கு மதுரை விவசாயக்கல்லூரி உதவி வருகின்றது. இதனால் பயனடைந்த விவசாயிகள் கூறுவது யாதெனில், உளுந்து, பாசிப்பயறு இவைகளில் 43 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைப்பதாகும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

