/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சம்பங்கி சாகுபடியில் சாதனை படைக்கும் இன்ஜினியர்
/
சம்பங்கி சாகுபடியில் சாதனை படைக்கும் இன்ஜினியர்
PUBLISHED ON : ஜூன் 04, 2014

கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றியதில் கிடைக்காத வருமானம், மனநிம்மதி, சம்பங்கி சாகுபடியினால் நிறைவாக பெற்று வருவதாக சாதனை விவசாயி மருதமுத்து தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் தவசிமடையை சேர்ந்தவர் மருதமுத்து. மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் 1991 ல் பி.இ., முடித்தார். சென்னையில், பல்வேறு நிறுவனங்களில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். வறுமை, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் இவரது மனதை நெருடியது.
தெளிவான திட்டமிடுதல், தொலை நோக்கு பார்வை, புதிய தொழில் நுட்பங்களை கடைபிடிக்காததுதான் விவசாயிகளின் பின்னடைவிற்கு காரணம் என்பதை கண்டறிந்தார். பணியை துறந்துவிட்டு, சொந்த ஊருக்கு வந்தார். பால் உற்பத்தியில் அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பசுக்களை வளர்த்தார். பராமரிப்பு, வேலையாட்களுக்கான கூலியால் வருவாய் குறைந்தது.
மாவட்டத்தில் பூ விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை பார்த்து, அவற்றின் வகைகளை கேட்டறிந்தார். சம்பங்கியில் 20 ரகங்கள் இருப்பதும், அதில் நாட்டு ரகத்தை மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்வதை தெரிந்து கொண்டார். வீரிய ரகமான சம்பங்கியை தனது நிலத்தில் சாகுபடி செய்தார். இன்று நாள்தோறும் ரூ. 1500 வருமானம் பார்க்கிறார். விசேஷநாட்களில் சம்பங்கிக்கு அதிக கிராக்கி ஏற்படும். மாதத்தில் 5 நாட்கள் சம்பங்கி விலை கிலோவிற்கு ரூ.600 வரை விற்கப்படும்.
ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 25 கிலோ பூ, அறுவடை செய்யப்படுகிறது.
சாதாரண நாட்களில் கிலோவிற்கு ரூ. 65 கிடைக்கும். கடலை புண்ணாக்கு உட்பட இவர் தயாரிக்கும் ஜீவாமிர்தம் என்ற இயற்கை உரம் மற்றும் அறுவடைக்கான கூலி, பூ மார்க்கெட் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவிற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 370 செலவாகிறது. அது தவிர நாள் வருமானம் மட்டும் ரூ. 1500 கிடைக்கிறது.
விவசாயி வி.ஏ.மருதமுத்து கூறுகையில்,''சம்பங்கி சாகுபடியில் வெற்றிபெற்றவுடன் ஏராளமான விவசாயிகள் இந்த தொழில் நுட்பத்தை கற்றுசென்றுள்ளனர். ஒரே மாதத்தில் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை வருமானம் கிடைத்துள்ளது. ஓரளவிற்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும். பனி, வெயில், மழையால் பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.
இவரிடம் பேச: 97876 42613.
-எம்.பி.அருள் செல்வன், திண்டுக்கல்

