
நெற்பயிரை தாக்கும் முக்கிய பூச்சிகளின் மேலாண்மை : குருத்துப்பூச்சி : இளம்புழுக்கள் இளம் பயிரின் தண்டில் துளையிட்டு உட்சென்று அதன் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு உட்பகுதியைக் கடித்து உண்பதால் இளம் பயிரின் நடுக்குருத்து வாடி காய்ந்து விடும். 'பூக்கும் பருவத் தில்' கதிர் காய்ந்து மணி பிடிக்காமல் வெண்ணிறக் கதிர்களாக மாறும். வாடிய குருத்து அல்லது வெண்கதிரைப் பிடித்து இருந்தால் எளிதில் வந்து விடும்.
இதனைக்கட்டுப்படுத்த : நாற்று நடுவதற்கு முன் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி முட்டைக்குவியல்களை அழிக்க வேண்டும். விளக்குப்பொறி அமைத்தல் (மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை) தாக்குதலைத் தாங்கி வளரக்கூடிய டி.கே.எம் 6, ஐ.ஆர்.8, 20, 26, 36, 40, 56 நெல் இரகங்களைப் பயிரிடலாம். எக்டருக்கு இனக்கவாச்சிப் பொறி 12 வைக்க வேண்டும். டைக்கோ கிரமா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணி 5 சிசி / எக்டர், பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலையை அடையும் போது புரபனோபாஸ் 1000 மிலி (அ) பாஸ்போமிடான் 1250 மிலி (அ) புளுபெண்டிமைடு 50 மிலி (அ) கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 15 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
பொருளாதார சேதநிலை: ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டை குவியல்கள், காய்ந்த நடுக்குருத்து 10 சதம், வெண்கதிர் 2 சதம்.
இலைமடக்குப்புழு: இளம்புழு தன் உமிழ்நீர் கொண்டு மெல்லிய பட்டுநூல் போன்ற இழைகளால் இலையின் ஓரங்களில் பிணைத்து அல்லது இலையின் நுனிப்பகுதியை அடிப்பகுதியுடன் மடக்கி இணைத்து அதனுள் இருந்து கொண்டு பச்சயத்தைச் சுரண்டி உண்பதால் அப்பகுதி வெண்மையாக மாறி விடும். அதிக அளவு பாதிக்கப்பட்ட பயிரில் இலைகள் வெண்மையான சருகு போல் காணப்படும்.
இதனைக் கட்டுப்படுத்த: வயல்களில் உள்ள களைச் செடிகளை அகற்ற வேண்டும். விளக்குப்பொறிகள் அமைக்க வேண்டும். (மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை). எம்.டி.யு.3 இரகம் இப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. மண்பரிசோதனைப் பரிந்துரைப்படி தழைச்சத்து உரத்தினை 2:3 முறை பிரித்து இடவேண்டும். டிரைகோ கிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணி 5 சிசி / எக்டர் , பொருளாதார சேத நிலையை அடைந்தவுடன் பூச்சிக்கொல்லி குளோர் பைரியாஸ்-1250 மிகி /எக்டர் (எ) புரபனோபாஸ் -1000 மிலி (அ) பாஸ்போ மிடான் - 1250 (அ) டைகுளோரவாஸ் - 625 மிலி (அ) கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 15 கிலோ என்ற அளவில் உபயோகிக்க வேண்டும்.
பொருளாதார சேதநிலை : இலைச்சேதம் வளர்ச்சிப் பருவத்தில் 10 சதம், பூக்கும் பருவத்தில் 5 சதம்.
கதிர் நாவாய் பூச்சி : இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் நெல்மணிகளைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சும். இதனால் மணிகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் முதலில் தோன்றி பின்னர் அவை பெரிதாகிப் பழுப்பு நிறமடையும். சாறு உறிஞ்சப்பட்ட மணிகள் சுருங்கி பதராகி விடும். தாக்கப்பட்ட மணிகள் வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும். வயலில் ஒருவித துர்நாற்றம் வீசும்.
இதனைக் கட்டுப்படுத்த : வயலில் உள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும். பருவத்தில் ஒரே சமயத்தில் நடவு செய்ய வேண்டும். இது ஒரே சீராகப் பூப்பிடிக்கவும், மணிகள் பால் பிடிக்கவும் ஏதுவாகும். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்துவது எளிது. பரிந்துரை செய்யப்படுகின்ற தழைச்சத்தை சீராக இடவேண்டும். அதிகமாக தழைச்சத்து இட்ட வயல்வெளியில் பூச்சிகள் அதிக அளவில் உற்பத்தியாகும். முட்டை ஒட்டுண்ணிகளான ஊ என்சிர்டஸ், ஹைடிரோனோடஸ், கிரையான் வகைகளையும், சிசன் டெல்லா போன்ற இறை விழுங்கிகளையும் பாதுகாத்தால் நாவாய் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சி தாக்குதல் பொருளாதார சேதநிலையை அடைந்தவுடன் பூச்சிக்கொல்லி மாலத்தியான் - 500 மிலி / எக்டர் (அ) பென்தியான் - 500 மிலி (அ) மாலித்தியான் 5 சதத்தூள் 25 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம்.
பொருளாதார சேதநிலை : பூக்கும் தருணத்தில் 100 கதிர்களுக்கு 5 பூச்சிகள், பால் பிடிக்கும் தருணத்தில் 100 கதிர்களுக்கு 16 பூச்சிகள். (தகவல் : முனைவர் எ.சுமதி, முனைவர் ம.நிர்மலாதேவி, முனைவர் அ.மணிமாறன், முனைவர் இரா.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர் - 6006020, திருவள்ளூர் மாவட்டம், போன் : 044 - 276 20233)
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

