sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பத்தால் எள்ளில் அதிக மகசூல்

/

நவீன தொழில்நுட்பத்தால் எள்ளில் அதிக மகசூல்

நவீன தொழில்நுட்பத்தால் எள்ளில் அதிக மகசூல்

நவீன தொழில்நுட்பத்தால் எள்ளில் அதிக மகசூல்


PUBLISHED ON : மே 14, 2025

Google News

PUBLISHED ON : மே 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளிர் மற்றும் கோடை கால பயிரான எள் கார்த்திகை, மார்கழி, மாசியில் தரிசு மற்றும் மானாவாரியில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் எள் மகசூலில் முழு உற்பத்தி திறனை அடைய முடிவதில்லை. நவீன தொழில்நுட்பங்களை கையாண்டால் அதிக மகசூலை பெறமுடியும்.

புதிய ரகங்கள்

கோவை வேளாண்மை பல்கலை 2017ல் வெளியிட்ட வி.ஆர்., ஐ 3 வெள்ளை எள் ரகமானது 75 முதல் 80 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். மார்கழி, மாசிப்பட்ட சாகுபடிக்கு உகந்தது. நன்றாக சிம்பு வெடித்து நிறைய காய்களை தரும். நல்ல உயரமாக அதிக கிளைகளுடன் வளரக்கூடியது. இறவையில் ஒரு எக்டேருக்கு சராசரியாக 10.25 குவிண்டால் மகசூல் தரக்கூடியது. 50 சதவீதம் எண்ணெய் சத்து கொண்டது. வேர் மற்றும் தண்டழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புதன்மை கொண்டது.

எள்ளுக்கு உகந்த சூழ்நிலை

இது வெப்ப மண்டல பயிர். அதிக வெப்பத்தையும் பனிப்பொழிவையும் தாங்கும். எள் விதை சிறிதாக இருப்பதால் நிலம் பொலபொலப்பாக இருந்தால் முளைப்புத்திறன் அதிகமாகி வேர் நன்கு வளரும். இரண்டு முறை நாட்டுக்கலப்பை கொண்டோ அல்லது சட்டிக்கலப்பை கொண்டோ உழ வேண்டும். ஒரு எக்டேருக்கு தேவையான 5 கிலோ எள் விதையை 20 கிராம் டிரைக்கோடெர்மாவுடன் கலந்து விதைநேர்த்தி செய்த பின் 20 கிலோ மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.

விதைத்த 15வது நாளில்

பயிர்களை களைந்து ஒவ்வொரு பயிருக்கும் இடையே 30 செ.மீ. இடைவெளி என்ற அளவில் பராமரித்தால் மகசூல் சீராக இருக்கும். விதைத்த 30வது நாளில் இரண்டாவது பயிர் களைதல் செய்தால் அதிக மகசூல் பெற முடியும்.

களை, உர மேலாண்மை

களைகளால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என்பதால் 15 முதல் 20 நாட்களில் முதல் களையும் 35 முதல் 40 நாட்களில் இரண்டாவது களையும் எடுக்க வேண்டும் அல்லது விதைத்த 3வது நாளில் 'பென்டிமெத்தலின்' என்ற களைக்கொல்லியை எக்டேருக்கு 2.5 லிட்டர் தெளிக்கலாம். பிறகு 25வது நாளில் ஒருமுறை கையால் களை எடுக்க வேண்டும்.

கடைசி உழவின் போது ஒரு எக்டேருக்கு 12 டன் தொழு உரம் இட வேண்டும். 12.5 கிலோ நுண்ணுாட்டக்கலவையை கலந்து அடியுரமாக இட வேண்டும். 50 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 25 கிலோ பொட்டாஸ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.

மேலும் 45 கிலோ மணலுடன் 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட் உரம் கலந்து இட்டால் காய்ப்புத்திறனும் விதையின் எடையும் கூடும். எள் சாகுபடி பருவத்தில் வெப்ப நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் பூக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இதை நிவர்த்தி செய்ய விதைத்த 40ம் நாள் எக்டேருக்கு 375 மில்லி பிளானோபிக்ஸ், ஒரு சதவீத டி.ஏ.பி., கரைசலையும் சேர்த்து மாலையில் தெளிக்க வேண்டும்.

நீர் மேலாண்மை

விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து ஈரத்தின் தன்மையைப் பொறுத்து 5 முதல் 7 நாட்கள் கழித்தும், 25 நாட்கள் கழித்து பூப்பதற்கு முன் ஒரு தண்ணீர் கட்டாயம் பாய்ச்ச வேண்டும். பூக்கள் முழுவதும் பூத்த 35 முதல் 45 நாட்களில் ஒருமுறையும், காய் பிடிக்கும் சமயத்தில் ஒன்றிரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 65 நாட்களுக்கு பிறகு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தினால் அதிக விதைகள் உற்பத்தியாகும்.

பூச்சி நோய் மேலாண்மை

தத்துப்பூச்சி தாக்குதலால் பூவிழை வைரஸ் நோய் பரவுகிறது. ஒரு எக்டேருக்கு 150 மில்லி இமிடேகுளோபிரிட் 17.8 (எஸ்.எல்.,) மருந்தை தண்ணீரில் கலந்து இருமுறை தெளிக்க வேண்டும். வேரழுகல் அதிகமாக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் மருந்தை மண்ணிலும் செடியிலும் தெளிக்க வேண்டும்.

அறுவடை எப்போது

பயிரின் கீழ்த்தண்டு மஞ்சள் நிறத்திலும் கீழ் இலைகள் 25 சதவீதம் உதிர்ந்திருந்தால் அறுவடைக்கு பயிர்கள் தயார். இல்லாவிட்டால் காய்கள் உடைந்து விதைகள் சிதறிவிடும். வேர்ப்பகுதியை மண்ணில் விட்டு அறுக்க வேண்டும்.

அறுத்த செடிகளை தண்டுப்பகுதி வெளியிலும் தலைப்பகுதி உட்புறமாக இருக்குமாறு வட்ட வடிவில் அடுக்க வேண்டும். மழைக் காலமாக இருந்தால் தார்ப்பாய் அல்லது வைக்கோல் வைத்து மேற்பகுதியை மூடவேண்டும். 5 முதல் 7 நாட்களில் விதைகள் உதிர்ந்து விடும். எள்ளுச் செடிகளை வெயிலில் இட்டு உலுக்கி கம்பால் தட்டி விதைகளை பிரிக்க வேண்டும்.

-மகேஸ்வரன்

திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு)

அருண்ராஜ், சபரிநாதன்

தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்

தேனி

96776 61410






      Dinamalar
      Follow us