இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது. இதன் விதையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.
அறிவியல் பெயர்: பேசியா லேட்டிபோலியா.
பருவநிலை: வருட மழைப்பொழிவு 800 மி.மீ. முதல் 1800 மி.மீ. வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன.
மண்: மணல் கலந்த மண்ணில் சிறப்பாக வளரும். வண்டல் மண்ணிலும் சிறப்பாக வளர்கிறது.
நாற்றங்கால் தொழில் நுட்பங்கள்: ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பழுத்த பழங்கள் உள்ள கிளைகளை உலுக்குவதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இப்பழங்கள் தரைகளில் உரசப் பட்டு நீரில் ஊறவைக்கப்பட்டு விதை உறைகளிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. நாற்றங்காலில் பாத்திகள் அல்லது மண், எரு மற்றும் மணல் கலந்த நெகிழ்தாள் பைகளில் நட்டு நீர் தெளிக்கப்படுகிறது. இவ்விதை நாற்றங்காலில் 30 செ.மீ. து 15 செ.மீ. இடைவெளிகளில் 1.5 முதல் 2.5 செ.மீ. ஆழத்தில் ஊன்றப் படுகின்றன. நட்டபின் 15 நாட்களுக்குப் பிறகே முளைக்கும். இந்நாற்றுகள் ஓராண்டு வரை நேரடியான வெயில் படாமல் பாதுகாக்கப்படுகின்றன.
நடவு முறைகள்: நாற்றங்காலில் உள்ள ஓராண்டு நிரம்பிய நாற்றுகள் வயல்களில் மழைக்காலங்களில் நடவு செய்யப்படுகின்றன. வயல் நடவிற்கு 0.5மீ அகலமும் 0.5மீ நீளமும் உள்ள குழிகள் தோண்டப்பட்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடப்படுகிறது.
நடவின்பொழுது ஆணிவேரை அசைக்காமல் கவனத்துடன் நடவு செய்ய வேண்டும். பிறகு நீர் தெளிக்கப்படுகிறது. மூன்று மாத இடைவெளிகளில் களைநீக்கம் செய்து செடியைச் சுற்றிலும் லேசாகக் கொத்தி கிளறிவிட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை களை நீக்கம் செய்வது அவசியம்.
பயன்கள்: மிக்க கடினமான மரக்கட்டைகள் கட்டுமானம் மற்றும் மரச் சாமான்களிலும் பயன்படுகிறது.
எம்.அகமது கபீர்,
தாராபுரம், 93607 48542.

