
கால்நடைகளின் பயணங்கள் பெரும்பாலும் நடத்தி செல்லும் முறையிலேயே நடக்கிறது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அவற்றின் பயணங்கள் இறைச்சிக்காக அறுப்பதற்காகவும், விற்பனைக்காகவும், இன விருத்திக்காகவும் போன்ற நோக்கங்களில் அமைகின்றன. மேலும் தற்காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டி மற்றும் பந்தயங்களுக்காகவும் கால்நடைகள் பயணம் செய்கின்றன. தவிர்க்க முடியாத நேரங்களில் உயர் சிகிச்சைக்காகவும் கால்நடைகள் கொண்டு செல்லப்படுகிறது.
கால்நடை பயணங்களில் முறையான வழி முறைகளை கையாண்டால் பல பிரச்னைகளிலிருந்து தீர்வு கிடைப்பதுடன் சாலை விபத்திலிருந்து விடுபட முடியும். எனவே கால்நடைகளை நடத்தி செல்லும் போது பயண வழிகளில் நீர் நிலைகள் மற்றும் இளைப்பாறும் இடங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது நல்லது. பயணம் மேற்கொள்வதற்கு முன் கால்நடைகள் நன்றாக நடக்கின்றனவா என்று சரிபார்த்து கொள்ள வேண்டும்.
அவற்றின் முகக்கயிறு, வளையங்கள் சரியாக உள்ளனவா என்று சோதித்து பார்த்தல் அவசியம். முடிந்தால் முதல் உதவி பெட்டி ஒன்றை கூடவே எடுத்து செல்வது நன்மையளிக்கும்.
ஓய்வு, நீர் அவசியம்: அனுபவம் உள்ள மற்றும் திறமையான பணியாட்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் கால்நடைப் பயணங்களை தொடர வேண்டும். பயணத்தின் போது திறமையான பணியாளர்களாக இருந்தால் மந்தையில் மெதுவாக நடக்கும் கால்நடைகளை முதலில் நடத்தி செல்வார். கால்நடைகளை எப்போதும் சாலையின் இடது புறமாகவே நடத்தி செல்ல வேண்டும். கால்நடைகளை நடத்தி செல்லும் வேகம் சீராக இருப்பது நல்லது. மூன்று அல்லது நான்கு மணி நேரம் பயணித்தால் ஒரு மணி நேரம் ஓய்வு அவசியம். ஒரு நாளில் சராசரியாக 15 மைல் துாரம் நடத்தி செல்லலாம். ஓய்வின் போது நல்ல குடிநீர், தேவையான தீவனம் கிடைக்க செய்ய வேண்டும்.
சீராகும் ரத்த ஓட்டம்: கால்நடைகளை கால்நடையாக கொண்டு செல்ல முடிவெடுத்தால் பகல் பொழுதே சிறந்தது. இரவு நேரங்களில் நடைப் பயணம் செய்தால் விரைவாக அவை சோர்வு அடையும். இதனால் கால்நடைகளின் நடை வேகம் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. கால்நடைகளின் பயணம் முடிவுக்கு வந்தவுடன் அவற்றின் கழுத்துக்கயிறுகளை தளர்த்தி விட வேண்டும். தேவையான குடிநீர் பருக அனுமதிப்பது நல்லது. சில மணி நேரம் களைப்பு தீர்ந்த பிறகு கால்நடைகளை துடைத்து விட வேண்டும் அல்லது வசதி இருப்பின் கழுவி விடலாம்.
இவ்வாறு செய்வதால் கால்நடைகளின் உடம்பில் ரத்த ஓட்டம் சீராகும்.
கால்நடை பயணங்களில் கவனமுடன் செயல்படுங்கள். கருத்துடன் கவனித்து கொள்ளுங்கள்.
- டாக்டர். வி.ராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.
94864 69044

