/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
25 சென்ட் நிலத்தில் வெண்டை பயிரிட்டு ரூ.60 ஆயிரம் லாபம்
/
25 சென்ட் நிலத்தில் வெண்டை பயிரிட்டு ரூ.60 ஆயிரம் லாபம்
25 சென்ட் நிலத்தில் வெண்டை பயிரிட்டு ரூ.60 ஆயிரம் லாபம்
25 சென்ட் நிலத்தில் வெண்டை பயிரிட்டு ரூ.60 ஆயிரம் லாபம்
PUBLISHED ON : அக் 29, 2014

மதுரையில் 25 சென்ட் நிலத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெண்டை பயரிட்ட விவசாயி ரூ.60 ஆயிரம் லாபம் ஈட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே உள்ள பொறுப்பு மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி நல்லு, 48. சிந்துபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் துணைத்தலைவராக உள்ளார். இவர் தனது 25 சென்ட் நிலத்தில் தோட்டக்கலை துறை மூலம் மானியத்தில் யு.எஸ். வீரிய ஒட்டு ரக வெண்டை நடவு செய்தார். வழக்கமாக வெண்டை பயிர் அறுவடை துவங்கி 15 எடுப்புகள் மட்டும் மகசூல் தரும். அதன் பின்னர் வெள்ளை நோய் தாக்கி செடிகள் அழிந்து விடும். ஆனால் இந்த புதிய ரக வெண்டை செடிகள் 45 எடுப்புகள் வரை மகசூல் தந்துள்ளன. ஒரு எடுப்புக்கு 80 கிலோ முதல் 140 கிலோ வரை மகசூல் கிடைத்தது. இவை உயர் தரத்தில் அளவில் பெரியதாக உள்ளன. இதனால் ஒரு கிலோவிற்கு சராசரியாக ரூ.20 என்ற அளவில் விலை கிடைக்கிறது.
ஆரம்பத்தில் இவற்றை உசிலம்பட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று நல்லு விற்பனை செய்தார். இவற்றின் தரம் அறிந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வியாபாரிகள் பொறுப்பு மேட்டுப்பட்டிக்கு நேரில் வந்து மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். தொடர்ந்து அவர்களே வேலை ஆட்களை அழைத்து வந்து, வயலில் வைத்தே அட்டை பெட்டிகளில் 'பேக்கிங்' செய்து திருச்சி, திருவனந்தபுரம் வழியாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
விவசாயி நல்லு கூறுகையில், 'செல்லம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக தொழில் நுட்ப உதவி பெற்று வெண்டை பயிரிட்டேன். இதன் மூலம் 25 சென்ட் நிலத்தில் ரூ.60ஆயிரம் லாபம் ஈட்டியுள்ளேன். வியாபாரிகளே நேரில் வந்து கொள்முதல் செய்வதால் இடைத்தரகர்கள் இல்லாமல் நல்ல விலை கிடைக்கிறது. வியாபாரிகளுக்கும் லாபகரமாக உள்ளது' என்றார். தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துதுரை கூறியதாவது: தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உயர் தொழில் நுட்பத்தில் யு.எஸ்.ரக வெண்டை விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மானியத்தில் வழங்கப்பட்டன. உழவு முதல் அறுவடை வரை சாகுபடி மற்றும் விற்பனை தொழில் நுட்ப உதவிகள் அளிக்கப்பட்டன. இவற்றை பயன்படுத்தி நல்லு சாதித்துள்ளார்.வழக்கமாக ஒரு ஹெக்டேரில் வெண்டை பயிரிட்டால் 3 மாதங்களில் 8 முதல் 10 டன் மகசூல் கிடைக்கும். ரூ.50ஆயிரம் லாபம் கிடைக்கும். நவீன தொழில் நுட்பத்தில் சாகுபடி செய்தால் 6 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கும். வெள்ளை நோய் தாக்குதல், சுனை, காயம் படுதல் கிடையாது. ஹெக்டேருக்கு 16 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும். ரூ.3லட்சம் வரை லாபம் கிடைக்கும். நடப்பாண்டில் நவீன தொழில் நுட்பத்தில் பயிரிட விரும்பும் விவசாயிகள் செல்லம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து, மானியத்தில் விதை, உரம், பூச்சி மருந்து, தொழில் நுட்ப உதவிகள் பெற்று பயனடையலாம்' என்றனர்.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துதுரை (94421 24593), தோட்டக்கலை அலுவலர் மணிவேலு (94438 05968), உதவி வேளாண்மை அலுவலர் சொர்ணராஜன்(98949 28463) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

