
துரிதமாக வேகவைக்கக்கூடிய அரிசி: பாரம்பரிய முறையில் அரிசியைச் சமைக்க குறைந்தது 30 நிமிடம் முதல் 40 நிமிடங்கள் வரை ஆகிறது. அரிசியைக் களைந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரிலோ, பாத்திரத்திலோ வைத்து வேகவைக்கப்படுகி றது. ஆனால் அரிசியை எடுத்து வெந்நீரில் போட்டு சில நிமிடங்கள் வரை வைத்திருந்தாலே போதும் சாதம் தயார். இந்த தொழில்நுட்பத்திற்காக மேற்கொண்ட ஆய்வில் மூன்று ரக அரிசிகள் (பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி) ஏ.எஸ்.டி.16, ஏ.டீ.டி.45, ஏ.டீ.டி.36 பயன்படுத்தப்பட்டன. இந்த அரிசி வகைகளை சுத்தம் செய்து தகுந்த முறையில் பதப்படுத்தி பின் உலர்த்தியில் உலர்த்தப் பட்டன. அவ்வாறு உலர்த்தப் பட்ட அரிசியை பாலிதீன் பைகளில் பாக் செய்யப்பட்டு அறை வெப்பத்தில் வைத்தபோது ஆறு மாதம் வரை தன்மை மாறாது நன்றாக இருந்தது.
தயார் நிலை சாதம் தயாரித்தல்: இவ்வாறாக உலர்த்தப்பட்ட அரிசியை 13 நிமிடம் (பச்சரிசி), 15 நிமிடம் (புழுங்கல் அரிசி) மட்டும் வெந்நீரில் ஊறவைத்தால் சாதம் தயாராகிவிடும். உலர்த்தப்பட்ட அரிசி சாதங்கள் தயாரித்து பார்த்ததில் எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், புளிசாதம் போன்றவை செய்ய ஏற்றதாக இருந்தது. இரண்டு நிமிட நூடுல்ஸ் போன்று 15 நிமிடத்தில் அடுப்பில் வைத்து சமைத்தால் சாதம் தயார். (அதனால் எரிபொருள் சிக்கனம் மற்றும் வேலைப்பளு குறைகிறது) என்பது பெண்களுக்கும் இத்தொழில்நுட்பம் தொழில் முனைவோருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். இத்தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி மற்றும் பழங்களிலிருந்து ஜாம், பழமிட்டாய் மற்றும் குளிர்பானங்கள் தயாரித்தல், ஊறுகாய், சாஸ், நார்ச்சத்து மிக்க நூடுல்ஸ், சேமியா, மசாலாபொடி வகைகள், சத்துமாவு தயாரித்தல் போன்றவை பெற மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
(விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம்) அணுகலாம்.
(தகவல்: கு.குருமீனாட்சி, ச.காஞ்சனா, ஜெ.தேவிப்பிரியா, மதுரை மனையியல்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்,
மதுரை-625 104).
நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை: ஒரு எக்டருக்கு 249 டன் கரும்பு மகசூல் பெறலாம் என தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக சோதனைத் திடல்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பு 3.06 லட்சம் எக்டரில் சராசரி விளைச்சல் எக்டருக்கு 105 டன் ஆகும். ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையை பின்பற்ற தொடங்கியபின், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாகுபடி அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்ட விவசாயி ஒருவர் ஒரு ஏக்கருக்கு 93.8 டன் கரும்பு மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளார். எனினும் அவர் இரண்டு கணுக்கள் உள்ள கரணைகளை
விதைத்ததால் போக்குவரத்திற்கு அதிகமாக செலவு செய்துள்ளார். ஆனால் நீடித்த நிலைத்த சாகுபடியில் ஒரு கணு கரணை பயிரிடும் முறைமூலம் 250 கிலோ கரணைகள் மட்டும் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தி உற்பத்தி செலவுகளை குறைக்கலாம். மரபாக கரும்பு பயிரிடும் விவசாயிகளும் இந்த நவீன முறையை கற்று பயன்பெறலாம்.
விவசாயிகள் ஜே 86032 கரும்பு ரகத்தைப் பயிரிட்டு வருகின்றனர். இந்த ரகம் சிவப்பு வேர் அழுகல் நோய் தாக்கக்கூடியது. புதிய கரும்பு ரகங்களான கோ.சி.24, எஸ்.ஜே.7 ஆகிய ரகங்களைப் பயிரிட வேண்டும். கோ.சி.24 ரகம் அதிக விளைச்சலாக எக்டருக்கு 228 கரும்பு மகசூல் தருகிறது. நீடித்த நிலைத்த சாகுபடி முறை மூலம் எக்டருக்கு 300-350 டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ரகம் இயந்திர அறுவடைக்கு உகந்தது. மேலும் இந்த ரகத்திலிருந்து 12 சதவீதம் சர்க்கரை உற்பத்தி செய்யலாம். களர் மண்ணில் வளரும் இயல்புடையது. எஸ்.ஜே.7 ரகத்தில் 13.6 சதவீதம் சர்க்கரை உற்பத்தி செய்யலாம். ஆனால் தற்போது உள்ள ரகங்களிலிருந்து சர்க்கரை ஆலைகளில் 10 சதவீதம் மட்டுமே சர்க்கறை பெறப்பட்டு வருகிறது.
உழவர்கள் சொட்டு உரப்பாசன முறையைப் பயன்படுத்தி சிக்கன நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.
(தகவல்: முனைவர் ப.முருகேச பூபதி, துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003, பிப்ரவரி 13, 2012ம் நாள் ஆற்றிய துவக்க உரை, த.வே.ப.கழகம், கோவை)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

