PUBLISHED ON : மார் 28, 2012

தைலமரம் (யூகலிப்டஸ்) நிழலில் ஏலம்: கேரள வன அபிவிருத்திக்கழகம் 1965லிருந்து இதுவரை வல்லக்கடவு, வண்டிப்பெரியார் போன்ற பகுதிகளில் 30,000 எக்டர் பரப்பில் தைல மரங்களை நடவு செய்துள்ளனர். ஏலம் நடவு செய்வதற்கு ஏதுவாக 10 அடிக்கு 5 அடி இடைவெளியில் தைலமரங்களை நடவு செய்துள்ளனர். தைல மரங்களை 8-10 அடி உயரத்திற்கு மேல் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் வெட்டி விடுகின்றனர். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஏலச்செடி நடவு செய்கின்றனர்.
ஏலம் வளர்வதற்கு 50-60 சத நிழல் தேவைப்படுகிறது. தைல மரங்களில் ஏலச்செடிகளுக்கு போதிய நிழல் கிடைக்கிறது. தைல மரங்கள் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பூக்கின்றன. ஏலச்செடியில் பூக்கள் தோன்றுவது மே முதல் ஆகஸ்ட் வரை அதிகமாக இருக்கும். எனவே ஏலத்தில் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் பாதிப்பில்லை.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தைல மரங்களை ஏலச்செடிகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் கொப்பு களை வெட்டிவிடுவதால் அதிக விறகு கிடைப்பதுடன் ஏலக்காய் விளைச் சலும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஏலச்செடிகளுக்கு போதிய வெளிச்சம் கிடைப்பதால் ஏலச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கிறது.
குரங்கு, காட்டுப்பன்றி, நரி, பாம்பு, காட்டு ஆடு, மான், முள்ளம்பன்றி, எலி, பூச்சிகள், யானை போன்ற வனவிலங்குகளுக்கு தைல மரக்காடுகள் உகந்தது அல்ல. தைல மரங்களுக்கு இடையே நட்ட ஏலத்திலிருந்து சூரக்கூடி பகுதியில் எக்டருக்கு 400 கிலோ வரை ஏலக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. இதற்கு முன் இந்த பகுதி வெறும் புல்தரையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தைல மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மிகவும் குறைவாக உள்ளது. அவை எளிதில் தீப்பிடிக்காத தைல மரங்களை அறுவடை செய்வதும் ஏலம் மறு நடவு செய்வதும் 12-15 வருடத்தில் ஒன்றாக மேற்கொள்ள முடியும். தைல மரங்கள் அதிக விளைச்சல் தருகிறது. ஒரு எக்டர் பரப்பில் உள்ள தைல மரக்காடுகள் வருடத்திற்கு 34 டன் கரியமில வாயுவை எடுத்துக்கொள்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (தகவல்: ஆங்கிலத்தில் கே.வி.எஸ்.கிருஷ்ணன், தமிழில் எம்.எஸ்.ராமலிங்கம், ஸ்பைசஸ் இந்தியா, பிப்ரவரி2012)
கால்நடைகளுக்கு மூலிகை குடற்புழு நீக்க மருந்து தயாரிக்கும் முறை:
சோற்றுக்கற்றாழை-1கிலோ,
நொச்சி இலை-1 கிலோ,
வேப்பிலை-1 கிலோ,
சுண்டக்காய்-1 கிலோ,
ஆடாதொடை-1 கிலோ,
எருக்கன் இலை-1 கிலோ,
பீகாரி சங்கு இலை-1 கிலோ,
பிரண்டை-1 கிலோ,
வேலிப்பருத்தி-1 கிலோ,
சிரியாநங்கை-100 கிராம்.
இவைகளை ஒன்றாக கலந்து நன்கு ஆட்டி சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ளலாம். பெரிய கால்நடைகளுக்கு 100 முதல் 150 மில்லியும், ஆடுகளுக்கு 30 மில்லியும், குட்டிகளுக்கு 5 முதல் 10 மில்லியும், கன்றுகளுக்கு 30 முதல் 50 மில்லியும் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கலாம். மருந்து கொடுப்பதற்கு முன் கால்நடை மற்றும் ஆடுகளின் சாணி மற்றும் புழுக்கையினை எடுத்து கால்நடை மருத்துவமனையில் கொடுத்து என்னென்ன புழுக்கள் உள்ளன என்று பரிசோதனையில் தெரிந்துகொள்வது அவசியம். அத்துடன் கால்நடைகளின் எடையையும் எடுத்து குறித்துக்கொள்ள வேண்டும். சாணி மற்றும் புழுக்கைகளை எடுத்து எவ்வாறு புழுக்கள் ஒழிந்துள்ளன என்று தெரிந்துகொள்ளலாம். உடல் எடை கூடியுள்ளதையும் கறவைமாடுகளின் பாலின் அளவு கூடியுள்ளதையும் தடிமனான ரோமம் உதிர்ந்து தோல் மினு மினுப்பு பெற்று இருப்பதையும் உறுதிசெய்து கொள்ளலாம்.
கால்நடைகளுக்கு ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை மூலிகை குடற்புழு மருந்தினை கொடுத்துவந்தால் வயிற்றில் உள்ள குடற் புழுக்கள் முழுவதும் இறந்துவிடும். ஆடு வளர்ப்பினை முழுநேர தொழிலாக கொண்டவர்களுக்கும், ஊர் ஊராக ஓட்டிச் சென்று பட்டி போட்டு அடைக்கும் குரும்பையாடு வளர்ப்போருக்கும் மூலிகை குடற்புழு நீக்க மருந்து மிகமிக அவசியம்.
(தகவல் மற்றும் தொடர்புக்கு: கே.வி.கோவிந்தராஜ், ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, கவுந்தப்பாடி, ஈரோடு-638 455.
94425 41504, 98427 04504).
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

