/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சிறுமக்காச்சோளம் (பேபிகார்ன்) சாகுபடி
/
சிறுமக்காச்சோளம் (பேபிகார்ன்) சாகுபடி
PUBLISHED ON : ஜூன் 29, 2011

பேபிகார்ன் என்பது 4 முதல் 9 செ.மீ. நீளமுள்ள பிஞ்சு மக்காச்சோளக்கதிர் கருவுறாத நிலையில் உணவாகப் பயன் படுத்தப்படுகிறது. இவற்றை கதிர்உறைகளை நீக்கியபின் பச்சையாக உண்ணலாம். ஒரு செடியிலிருந்து 3 முதல் 5 பிஞ்சுகளை 50 முதல் 65 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். இந்தியாவின் நட்சத்திர உணவகங்களில் பல உணவுகள் தயாரிப் பதற்கும் பயன்படுகிறது.
சாகுபடி நுட்பங்கள்: சிறுமக்காச்சோளம் சிறந்த ரகமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோ.பி.சி.1 என்ற ரகத்தை 1998ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இது தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது. சிறு மக்காச்சோளம் அனைத்து பருவத்திற்கும் இறவையில் பயிர் செய்யலாம். அதே போன்று மானாவாரியாக ஆடிப்பட்டம் (ஜூலை - ஆகஸ்ட்), புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்) சிறந்த பருவமாகும்.
ஏக்கருக்கு 10 கிலோ அல்லது எக்டருக்கு 25 கிலோ விதையாக தேவைப்படுகிறது. 45 செ.மீ. இடைவெளியாக பார்க்கும் 25 செ.மீ. ஆக செடிக்கும் இடைவெளி தேவை. சிறு மக்காச் சோளத்திற்கு உரப்பரிந்துரையாக 150:60:40 கிலோ/எக்டர் தழைசத்து (300 கிலோ யூரியா), மணிச்சத்து (375 கிலோ சூப்பர் பாஸ்பேட்) மற்றும் சாம்பல் சத்து (66 கிலோ பொட்டாஷ்) ஆகும். அடியுரமாக தொழு உரம் 12.5 டன் / எக்டர் கடைசி உழவிற்கு முன் இடவும். பின் யூரியா 165 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 375 கிலோ மற்றும் 33 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் அடியுரமாக இடவும். மேலுரமாக விதைத்த 25 நாட்கள் கழித்து 165 கிலோ யூரியா மற்றும் 33 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் மேலுரமாக இடவும்.
விதைத்த மூன்றாம் நாள் உயிர் நீர் கண்டிப்பாக பாய்ச்ச வேண்டும். பின் நான்காம் நாள், 10 நாட்கள் இடைவெளியில் ஒரு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறாக 7 முறை நீர்பாய்ச்சுதல் பயிருக்கு அவசியமாகும்.
பயிர் பாதுகாப்பு: களை நிர்வாகம்: விதைத்த மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு கைக்களையும், 15லிருந்து 25 நாட்களுக்குப் பிறகு அட்ரசின் 500 கிராம்/எக்டர் என்ற விகிதத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும். பிறகு ஒரு கைக்களையாக 40-45 நாட்கள் இடைவெளி விட்டு எடுக்கவும்.
பூச்சி நிர்வாகம்: விதைக்கும் போது பியூரிடான் 3ஜி குருணையை எக்டருக்கு 10 கிலோ வீதம் இடவேண்டும். நட்ட 15 நாட்களுக்குப் பிறகு எண்டோசல்பான் 3லிருந்து 4 மி.லி. ஒரு லிட்டருக்கு கலந்து தெளிப்பதன் மூலம் தண்டு துளைப்பான் மற்றும் வண்டுகளைக் கட்டுப்படுத்துகிறது.
கதிர் எண்ணிக்கையை அதிகரிக்க: சிறு மக்காச் சோளம் நட்ட 40லிருந்து 45 நாட்களுக்குள் ஆண் பூக்களை நீக்குதல் சிறந்ததாகும். பெண் பூக்களின் குஞ்சம் வெளியே தெரிந்தவுடன் 2 நாட்களுக்கு இடைவெளியாக இளங்கதிர்கள் அறுவடை செய்ய வேண்டும். 6லிருந்து 7 ஆக இளங்கதிர்களின் அறுவடை எண்ணிக்கை ஆகும். இளங்கதிர் வயதாக 50-65 நாட்கள் மற்றும் பச்சைத் தட்டாக 65-75 நாட்கள் ஆகும்.
விதை உற்பத்தி: விதை உற்பத்தியைப் பெருக்குவதற்கு சிறு மக்காச்சோளத்தின் ஆண் பூக்களை நீக்காமல் மற்ற மக்காச்சோளத்தைப் போன்று பயிர் செய்வதன் மூலம் நாம் விதை உற்பத்தியை அதிகப்படுத்தலாம். அறுவடை வயது 100-105 நாட்களாகும்.
மகசூல்: ஒரு எக்டருக்கு இளங்கதிராக 6660 கிலோ, விதையாக ஒரு எக்டேருக்கு 2000 கிலோவாகவும் அதுபோக பச்சைத்தட்டாக ஒரு எக்டேருக்கு 32.2 டன்னாக மகசூல் கிடைக்கின்றன. இவ்வாறு சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
வி.கு.பால்பாண்டி,
இணை பேராசிரியர்,
ந.ராஜேஷ், முதுநிலை மாணவர்,
ரா.துரைசிங், பேராசிரியர்,
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

