PUBLISHED ON : செப் 07, 2016

வைக்கோலில் குறைந்தளவு சத்துக்களே உள்ளன. இதில் அதிகமாக உள்ள 'ஆக்ஸாலேட்' எனும் சத்து கால்நடைகளின் உடம்பில் உள்ள கால்சியத்தை எடுத்து கொண்டு 'கால்சியம் ஆக்ஸாலேட்' ஆக வெளியேறுகிறது. வைக்கோலை யூரியாவுடன் சேர்த்து கொடுத்தால் வைக்கோலின் செரிமானம் அதிகமாகிறது. கறவை மாடுகளின் பால் உற்பத்தி கூடுவதற்கு ஏற்ற காரணியாகவும் இருக்கிறது. யூரியாவில் உள்ள நைட்ரஜன் சத்தினை கால் நடைகள் வயிற்றில் இருக்கும் நுண்கிருமிகள் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான புரதச்சத்தினை தயாரித்து கொள்கின்றன. பின்னர் கால்நடைகள் இந்த நுண்கிருமிகளை ஜீரணித்து தங்களின் புரதச்சத்து தேவையினை ஈடு செய்கின்றன.யூரியா வைக்கோல்நான்கு கிலோ யூரியாவை
60 லிட்டர் தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள். இந்த கரைசலை 100 கிலோ அளவுள்ள வைக்கோலினை சமமாக பரப்பி அதன் மீது பூவாளி துணை கொண்டு சீராகத்தெளித்து விடுங்கள். பின்னர் பதப்படுத்தி சிறிது சிறிதாக கால்நடைகளுக்கு இதை கொடுக்கலாம். இதுதான் சத்துமிக்க வைக்கோல் தயாரிக்கும் முறை. சத்துணவு வைக்கோல் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக இருந்தாலும் இதை பயன்படுத்துவதில் விவசாயிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். யூரியா கலந்த வைக்கோலை கொடுக்கும்போது ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தால் வயிறு உப்புசம் போன்ற திடீர் சுகவீனங்கள் ஏற்படும். யூரியா கலந்த வைக்கோலை கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது. சொல்லப்பட்ட அளவுக்கு மேல் யூரியாவை சேர்ப்பது தவிர்க்கப்பட வேண்டும்.பட்டினியாக கிடந்த கால்நடைகளுக்கும் வயிற்று கோளாறு உள்ள கால்நடைகளுக்கும் யூரியா கலந்த வைக்கோல் தருவது நல்லதல்ல. அளவுக்கு அதிகமான யூரியாவினால் நச்சுத்தன்மை அறிகுறிகள் கால்நடைகளில் காணப்பட்டால் கால்நடை டாக்டரை உடனே அணுக வேண்டும். பொதுவாக கால்நடைகள் தாங்கள் வழக்கமாக உண்ணும் தீவனங்களுக்கே தம்மை பழக்கப்படுத்தி கொள்பவை. தீவனங்களில் தீடீர் மாறுதலை செய்யும்போது, அவை வயிறு உப்புசம், ஒவ்வாமை போன்ற வியாதிகளால் பாதிப்படைகின்றன. எனவே யூரியா கலந்த வைக்கோல் போன்ற தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுக்கும்போது முதலில் சிறிது சிறிதாக கொடுத்து போகப்போக அளவினை அதிகரிக்க வேண்டும். சத்துணவு வைக்கோல் போன்ற தீவன வகைகளை தயார் செய்யும்போது விவசாயிகள் கால்நடை டாக்டரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும். கால்நடை டாக்டரின் மேற்பார்வையில்
தயாரிப்பு நடைபெறுவதால் பின் விளைவுகள் ஏதும் இன்றி அவை முற்றிலும் தவிர்க்கப்படும்.
- டாக்டர் வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை, நத்தம்.
