/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கால்நடைகளில் நோய் கண்டறிவது எப்படி
/
கால்நடைகளில் நோய் கண்டறிவது எப்படி
PUBLISHED ON : ஜன 10, 2024
பாதிக்கப்பட்ட கால்நடைகளை உடனே கண்டறிந்து கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை அளிக்காததே கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கான முதல் காரணம்.
கால்நடைகளுக்கு நோயின் தன்மை தீவிரமான பின்பே சிகிச்சைக்கு அழைத்துச் செல்வர். அவற்றின் உபாதைகளை முதலில் கண்காணித்து நோய் தீவிரமடைவதற்கு முன்பே டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். நோய் வருமுன் அவற்றின் உடலிலும், நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். காலை மாலை இரு வேளையும் தீவனம் அளிக்கும் போது தலை முதல் கால் வரை அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
வித்தியாசமான பார்வை, வாய்க்கட்டு உலர்ந்து இருத்தல், கண் இமைகளில் வீக்கம், மூன்றாவது இமை வெளித் தள்ளுதல், நாசித் துவாரம் விரிந்திருத்தல், கண்களில் நீர் வடிதல், கண் விழி பிதுங்கியிருத்தல், மூக்கில் இருந்து நீர் அல்லது சளி வடிதல், துர்நாற்றம், உமிழ்நீர் அதிகமாக வடிதல், தலையில் வீக்கம், ஒரு பக்கமாக தலை சாய்த்து இருத்தல், தாடை வீக்கம் போன்ற வித்தியாசங்கள் தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும். கழுத்து மற்றும் மார்பு வீக்கம், கட்டி, வயிறு பெருத்தல், உப்புசம், குடலிறக்கம், வீக்கம், ஒரு பக்கம் மட்டும் வீக்கம் என பரிசோதிக்க வேண்டும்.
தோல் காய்ந்து இருத்தல், முடியில் மாற்றம், அதிகமாக வியர்த்தல், சீழ் வடிதல், காய்ந்திருத்தல், அதிக எண்ணெய் பசையுடன் முடி இல்லாதிருத்தல், வீக்கம், ரத்தம் வடிதல், நிணநீர் முடிச்சு வீக்கத்தை கண்காணிக்க வேண்டும்.
மடியில் கவனம் தேவை
கறவை மாடுகளின் மடி மிருதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிக கூடாகவும், நன்கு சிவந்தும், பால் கறக்க அனுமதிக்காமலும் இருந்தால் மடிநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். பால் நீர்த்தோ, திரிதிரியாகவோ, ரத்தம் இல்லது சீழ் கலந்தோ இருந்தால் மடி நோய் உள்ளதற்கான அறிகுறிகள். ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டவுடனே டாக்டரை அணுகினால் மாடுகளை காப்பாற்றலாம். இனப்பெருக்க உறுப்புகளில் சீழ், ரத்தம் வடிதல், வீக்கம், சினைத் தருணம் மட்டுமல்லாமல் தினமும் கண்ணாடி போன்ற திரவம் வடிதல் இருந்தால் உடனே சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
நடவடிக்கைளில் மாற்றங்கள்
சாப்பிடாமல் உள்ள தீவனத்தின் அளவு, சாப்பிடுவதில் மாற்றம், அசை போடாமை, விழுங்குவதில் மாற்றம், மெதுவாக அசை போடுதல், ஒரு பக்கமாக அசை போடுதல், வாயில் தீவனத்தை வைத்துக் கொண்டே இருத்தல், சாப்பிட்ட பிறகு வாந்தி, மூக்கு வழி வெளி வருதல், கழுத்தை நீட்டிக் கொண்டே இருத்தல், வாந்தி எடுக்க முயற்சி செய்தல் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.
வித்தியாசமாக மூச்சிரைத்தல், மூச்சுத் திணறல், இருமல், தும்மல், குறட்டை சத்தம், மூச்சு விடும் போது சத்தம் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். சிறிது சிறிதாக சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைந்த அளவு வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும் நிலையிலேயே அதிக நேரம் நின்றிருத்தல், சொட்டு சொட்டாக வெளியேறுதல், சீழ் அல்லது ரத்தம் கலந்து வெளியேறுதல், நிறம் மாறியிருந்தால் உடனடி சிகிச்சை அவசியம்.
சாணத்திலும் கண்காணிப்பு தேவை
எத்தனை முறை சாணம் இடுகிறது, அப்போது வெளியேறும் துர்நாற்றம், அளவு, தன்மையை கவனிக்க வேண்டும். சிறிய பந்து போல் உருண்டை உருண்டையாக காணப்பட்டால் மலச்சிக்கல் இருக்கலாம். சாணம் சிறிது இளக்கமாகப் பெரிய வட்ட வடிவமாகவும், நடுவில் குழியுடனும் பொதுவாக எருமை மாடுகளிலும் அதிக பால் கறக்கும் மாடுகளிலும் காணப்படும். சிறுசிறு குழிகளாக சாணத்தின் வட்ட வடிவம் முழுவதும் காணப்பட்டால் மாடுகளில் செரிமான பிரச்னை ஏற்பட்டுள்ளதை அறியலாம். கழிச்சலின் போது, சாணமானது நீர்த்தன்மையுடனும், ஆசன வாயைச் சுற்றியும், மடிக்கும் இடையேயுள்ள பகுதிகளிலும் சாணம் அதிக அளவு ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
பால் கறக்கும் போது
பால் கறக்க தயாராகும் போது எழாமல் மாடு சோர்ந்து படுத்திருந்தால் டாக்டரை அணுக வேண்டும். நடையில் வித்தியாசம், தள்ளாடும் நடை, கால்களை துாக்கிக் கொண்டு இருத்தல், தலையை ஒரு பக்கமாக சாய்த்து நடத்தல், நடக்கும் போது சுற்றுதல் போன்றவை இருந்தால் நோய் உள்ளது என்று அர்த்தம்.
இதர அறிகுறிகள்
மனிதர்கள் வந்தாலோ அல்லது சத்தம் கேட்டாலோ உடனே விழிப்படைவது சகஜம். மெதுவாக அல்லது சலனம் இன்றி இருத்தல், அடிக்கடி படுத்து எழுதல், வயிற்றைப் பார்த்தல், காலைத் துாக்கிக் கொண்டிருத்தல், முதுகு வளைத்திருத்தல், வயிற்றை உதைத்தல், சத்தத்தில் வித்தியாசம், முன்னங்கால்களை அகட்டி, வாலை துாக்கி வைத்திருத்தல், படுத்தே இருத்தல், உடல் மெலிந்து போவது, படுத்து உருளுதல், தலையை சுவரோடு அழுத்துதல் மற்றும் கூட்டமாக மேயும் போது தனித்து இருத்தல் போன்றவையும் நோய்க்கான அறிகுறிகளாகும். கால்நடை வளர்ப்போர் நோயின் ஆரம்பத்திலேயே அறிகுறிகளின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே நல்லது.
- உமாராணி, பேராசிரியர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம் திருப்பரங்குன்றம், மதுரை