PUBLISHED ON : மே 22, 2024

பயிர்களால் நமக்கு விளைச்சல் என்பதை தாண்டி மண்ணுக்கு நன்மை என்பதே இப்போதைய தேவையாக உள்ளது. மண்ணை வளமாக்க பயிரிடும் பயிர்கள் மண்ணுக்கு பலவித நன்மைகளை தருகின்றன.
மண்ணை திருத்தும் பயிர்கள்
அருகம்புல், சூரியகாந்தி, சீமை அகத்தி, தக்கைப்பூண்டு போன்றவை மண்ணை திருத்தி அதன் வளர்ச்சியை பெருக்குகின்றன. அருகம்புல் மண்ணில் உள்ள உப்பை எடுத்துக்கொண்டு அதன் உவர்ப்பு தன்மையை குறைக்கும்.
சீமை அகத்தி, தக்கைப்பூண்டு களர் நிலத்திலும் நன்கு வளரும். சூரியகாந்தி மண்ணிலுள்ள சோடியத்தை (உப்பு - உவர் தன்மை) உறிஞ்சி எடுப்பதில் வல்லது.
வளப்படுத்தும் பயிர்கள்
கடற்கரை மண்ணிலும் சவுக்கு நன்கு வளரும். இதன் இலை சருகு எள் பயிருக்கு உரமாக பயன்படுகிறது.
சூபா புல், எருக்கு இலைகளில் போரான் சத்து அதிகம் உள்ளதால் பயிர்களை வளப்படுத்துகின்றன.
தழைச்சத்து தரும் பயிர்கள்
பயறு வகைகள், பசுந்தாள் உரப்பயிர்கள், நிலக்கடலை போன்றவை காற்றிலிருந்து தழைச்சத்தை உறிஞ்சி மண்ணில் நிலைநிறுத்தி வளரும். கம்பு, கேழ்வரகு, மக்காசோள பயிர்கள் மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு தரும்.
சூரியகாந்தி, தட்டப்பயிறு, மக்காச்சோளம், சணப்பை, தக்கைப்பூண்டு, சீமை அகத்தி போன்றவை நுாற்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்குகின்றன.
மேலும் களைகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. விஷ கிருமிகளை தடுக்கும் மரங்களாக வேம்பு, புங்கம், பெருநெல்லி, மா, முருங்கை, செண்பகம் போன்றவை விளங்குகின்றன.