/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை பணிகளின் தரம் ஆய்வு செய்ய 2 நடமாடும் பரிசோதனை வாகனங்கள்
/
சாலை பணிகளின் தரம் ஆய்வு செய்ய 2 நடமாடும் பரிசோதனை வாகனங்கள்
சாலை பணிகளின் தரம் ஆய்வு செய்ய 2 நடமாடும் பரிசோதனை வாகனங்கள்
சாலை பணிகளின் தரம் ஆய்வு செய்ய 2 நடமாடும் பரிசோதனை வாகனங்கள்
ADDED : பிப் 22, 2025 04:03 AM

பெங்களூரு: பெங்களூரின் சாலைகள் தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய, மாநகராட்சி லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு, இரண்டு நடமாடும் வாகனங்களை வாங்கியுள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடியால், மக்கள் அவதிப்படுகின்றனர். மற்றொரு பக்கம் சாலை பள்ளங்கள், விபத்துகளுக்கு காரணமாகின்றன. இது தொடர்பாக, மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
விதான் சவுதா, எம்.ஜி.சாலையை தவிர, மற்ற சாலைகள் அனைத்தும் தரமற்றதாக உள்ளன. பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. துாசி எழுவதாக தினமும் ஆயிரக்கணக்கான புகார்கள் வருகின்றன.
பெங்களூரு பொறுப்பு அமைச்சரான துணை முதல்வர் சிவகுமார், தரமற்ற சாலைகளால் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. 'பிராண்ட் பெங்களூரு' திட்டம் துவங்கப்பட்டுள்ளதால், சாலைகளின் தரத்தை உயர்த்தும்படி மாநகராட்சிக்கு அறிவுறுத்தினார்.
இவரது உத்தரவுபடி சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய திட்டம் வகுத்துள்ளது. இதற்காக இரண்டு நடமாடும் ஆய்வு வாகனங்களை வாங்கியுள்ளது. இந்த வாகனங்களை சிவகுமாரும் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகரில் ஒப்பந்ததாரர்கள், பில் தொகைக்காக அவ்வப்போது சாலைகளை பழுது பார்க்கின்றனர். நன்றாக உள்ள சாலைகளை தோண்டி, மீண்டும் சரி செய்துவிட்டு பில் தொகை பெறுகின்றனர். இதை தவிர்ப்பதுடன், பெங்களூரு மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, தரமான சாலை அமைப்பது மிகவும் அவசியமாகும்.
சாலை பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய, இரண்டு நடமாடும் ஆய்வு வாகனங்கள் வாங்கி உள்ளோம். இரண்டு வாகனங்களுக்கும் 38.50 லட்சம் ரூபாய், சாலைகளின் தரத்தை பரிசோதிக்கும் உபகரணங்களுக்கு 11.40 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒரு நடமாடும் வாகனத்தில், ஓட்டுனர், லேப் டெக்னீஷியன், லேப் உதவியாளர் என, மூவர் இருப்பர். மாநகராட்சியின் எட்டு மண்டலங்களில் பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய, இரண்டு வாகனங்களும் பயன்படுத்தப்படும்.
பணிகளுக்கு பயன்படுத்தும் சிமென்ட், மணல், காபுல் ஸ்டோன், கான்கிரிட், கட்டிங் இயந்திரம் உட்பட அனைத்து பொருட்களும் தரமானவையா என்பதை பரிசோதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

