மூகாம்பிகை சரணாலயத்திற்குள் அரசினஹூண்டி நீர்வீழ்ச்சி
மூகாம்பிகை சரணாலயத்திற்குள் அரசினஹூண்டி நீர்வீழ்ச்சி
ADDED : ஏப் 29, 2026 10:41 PM
– நமது நிருபர் –
உடுப்பி மாவட்டம் கொல்லுார் டவுனில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் உள்ள மூகாம்பிகை வனவிலங்கு சரணாலயத்தில் ‘அரசினஹூண்டி’ நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது.
கொல்லுாரில் இருந்து 2 கி.மீ., தொலைவில் துவங்கும் வனப்பகுதிக்குள் நுழைய, சரணாலயத்தின் வன அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற பின், கொடசாத்ரி மலை அடிவாரத்தில் இருந்து தங்கள் மலையேற்றத்தை துவக்கலாம்.
அடிவாரத்தில் மலையேற்றம் துவங்கியதும் எதிரே காணும் பாதையில் நடந்து செல்ல வேண்டும். வேறு எந்த பக்கம் பாதை போனாலும், நீங்கள் நேராகவே செல்ல வேண்டும்.
நடந்து செல்லும் வழியில் ஆங்காங்கே மரங்களும் விழுந்திருக்கும். அதை தாண்டி நீங்கள் செல்ல வேண்டும். செல்லும் வழியில் நீரோடையை காணலாம். அதேவேளையில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வரைபடம் மற்றும் திசை வழிகாட்டிகளை எடுத்து செல்வது நல்லது.
மழை காலத்தில் பாதை மிகவும் குழப்பமாக இருக்கும். ஏனெனில், மழையால் முழு பாதையும் அடித்து சென்று விடும். எனவே உங்களுடன் உள்ளூர் வழிகாட்டியை அழைத்து செல்வது சிறந்தது.
அங்கு 400 அடி உயரத்தில் இருந்து விழும் நீரை கண்டதும் குளிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், அது மிகவும் ஆபத்தானது. அத்துடன், கீழே நீர் விழும் பகுதி 30 அடி ஆழம் கொண்டது. உங்களுக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நீரில் குளிக்க வேண்டும் என்றால், நீர்வீழ்ச்சியில் இருந்து சிறிது துாரம் சென்று குளிக்கலாம். ஆழம் குறைவாக இருக்கும். இங்கு பெருமளவிலான அட்டை பூச்சிகள் உள்ளன. எனவே, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மலையேறுபவர்கள் தங்களுடன் உணவு, தின்பண்டங்கள், குடிநீர் மற்றும் தேவையான பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் இங்கு செல்வது சிறந்தது.
