ADDED : ஜூன் 01, 2026 12:09 AM

பெங்களூரு: சித்தராமையா முதல்வர் பதவியை, ராஜினாமா செய்ததால், கவர்னர் சட்டசபையை கலைத்துள்ளார். இதனால் அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், விதான் சவுதா வெறிச்சோடி காணப்படுகிறது.
பெங்களூரின் விதான் சவுதா, நாள் முழுதும் பரபரப்பாக தென்படும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் நடமாட்டம் இருக்கும். கட்சி தொண்டர்கள், கூட்டம், கூட்டமாக வருவர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, பொது மக்களும் அதிக எண்ணிக்கையில் வருவர். பேச்சும், சத்தமுமாக விதான்சவுதா களைகட்டி இருக்கும். ஆனால் இப்போது சூழ்நிலை தலை கீழாக மாறியுள்ளது.
சித்தராமையா ராஜினாமா அறிவித்ததால், கர்நாடக சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது. சட்டசபை கலைந்த உத்தரவு வெளியான பின், விதான்சவுதாவுக்கு உயர் அதிகாரிகள், பொது மக்கள் வருகை குறைந்தது.
அலுவலக ஊழியர்கள், விதான்சவுதா, விகாஸ் சவுதாவில் உள்ள அமைச்சர்களின் அலுவலகம் முன்பாக இருந்த பெயர் பலகைகளை அகற்றினர். அலுவலகத்துக்கும் பூட்டு போட்டனர்.
அதிகமான வேலை இல்லாத காரணத்தால், ஊழியர்கள் அரட்டை அடித்து பொழுது போக்குகின்றனர். எப்போது புதிய முதல்வர் பதவியேற்பார், யார், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், எந்த அமைச்சருக்கு எந்த துறை கிடைக்க கூடும் என, பேசி கொள்கின்றனர்.
தற்போது, விதான் சவுதா வெறிச்சோடி காணப்படுகிறது. சிவகுமார் முதல்வராக பதவியேற்ற பின், விதான்சவுதா, விகாஸ் சவுதாவுக்கு பழையபடி பரபரப்பாக மாறும்.
