மாண்டியாவில் 2 பேருக்கு அமைச்சர் பதவி எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா கோரிக்கை
மாண்டியாவில் 2 பேருக்கு அமைச்சர் பதவி எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா கோரிக்கை
ADDED : ஜூன் 01, 2026 12:09 AM

மாண்டியா: ''மாண்டியா மாவட்டத்தில், இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா கோரிக்கை விடுத்து உள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிவகுமார் முதல்வராக பதவியேற்க உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளேன். கட்சிக்காக அவர், 40 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். அவரது உழைப்புக்கு பலன் கிடைத்து உள்ளது.
சித்தராமையா ஆட்சியை விமர்சித்து வந்த பா.ஜ., தலைவர்கள், தற்போது, சித்தராமையாவுக்கு காங்கிரஸ் துரோகம் செய்ததாக கூறுகின்றனர். அவர்கள் இரட்டை நாக்கு, இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள்.
கட்சி மேலிட உத்தரவுப்படி சித்தராமையா ராஜினாமா செய்தார். அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால், எடியூரப்பாவை கண்ணீருடன் பா.ஜ., மேலிடம் ராஜினாமா செய்ய வைத்தது.
முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரசில் பிரச்னை வரும் என்று, பா.ஜ., தலைவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்காமல் சுமூகமாக முடிந்து விட்டதால் அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.
நான், முதன்முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று உள்ளேன். அமைச்சர் பதவி மீது ஆசை இல்லை. ஆனாலும் முதன்முறை எம்.எல்.ஏ.,வான அசோக் ராய், பசவராஜ் சிவகங்கா, பிரதீப் ஈஸ்வர், பரத் ரெட்டி ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்.
சித்தராமையா அமைச்சரவையில் மாண்டியா மாவட்டத்தில் இருந்து செலுவராயசாமி மட்டும் அமைச்சராக இருந்தார். சிவகுமார் தலைமையிலான ஆட்சியில் மாண்டியாவில் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். ரமேஷ் பண்டிசித்தே கவுடாவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
